Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்”

24 செப், 2025 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-complete-artwork-from-the-first-film-college-student,-“Aval-Appadithaan”
Advertisement


திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் தமிழ் திரையுலகில் ஒரு அசுரத் தனமான வீச்சினைக் கண்டதற்கு அஸ்திவாரமிட்டவரும், ஆணிவேராக இருந்தவரும் என்றால், அது இயக்குநர் சி ருத்ரய்யா என அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும். சேலம் மாவட்டம் ஆத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு, பின் அடையாறு திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் பிரிவில் பட்டயப் படிப்பையும் பயின்றவர்.

ஆறுமுகம் என்ற தனது இயற்பெயரை ரவுத்திரத்தின் அடையாளமாக காட்டும் வண்ணம் ருத்ரய்யா என மாற்றி அமைத்துக் கொண்டவர். திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்த காலங்களிலேயே பயிற்சிக்காக ஜெயகாந்தனின் “சிலுவை” என்ற சிறுகதையைப் படமாக்கியவர். திரைப்படக் கல்லூரி மாணவனான இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம்தான் இந்த “அவள் அப்படித்தான்”.

பெண்களைப் பற்றி டாக்குமென்டரி படம் எடுக்கும் அருண் என்ற இளைஞனுக்கு, ஒரு விளம்பரக் கம்பெனியில் ஆர்ட் டைரக்டராக பணிபுரியும் மஞ்சு என்பவள் உதவி செய்கின்றாள். பணியின் போது நிகழும் உரையாடல்கள் மூலமாக மஞ்சு, தன் தாய் தந்தையரின் அன்பை, பரிவை பெற முடியாதவள் என்றும், ஆண்களால் ஏமாற்றப்பட்டவள் என்றும், காதல், கல்யாணம், மனித உறவுகள் என அனைத்திலும் நம்பிக்கையற்றுப் போனவள் என்றும் அருண் புரிந்து கொள்கின்றான்.

நாளடைவில் மஞ்சுவின் இந்த அசாதாரணமான அணுகுமுறையே அருணுக்கு பிடித்துப் போக, அவள் மீது கொண்ட தன் காதலை அருண் பலமுறை வெளிப்படுத்த, இனியும் எந்த ஒரு ஆணிடமும் மோசம் போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கை மனநிலையில் இருக்கும் மஞ்சுவிடமிருந்து அருண் எதிர்பார்த்திருந்த பதில் கிடைக்காததால், டாக்குமென்டரி படம் எடுத்து முடிந்தவுடன் ஊருக்குத் திரும்புகின்றான் அருண்.

அருண் சென்ற பின்பு, அவனது ஆழ்ந்த அன்பைப் புரிந்து கொண்ட மஞ்சு, அவனைத் தேடிப் போகின்றாள். ஆனால் அங்கு அவனது பெற்றோர் அருணுக்கு வேறொரு பெண்ணை மணமுடித்துவிடுகின்றனர். “அவள் அப்படித்தான்” என்ற தலைப்பிற்கேற்ப, மீண்டும் மஞ்சு அதே உளவியலோடு தனிப்படுத்தப்படுகின்றாள்.

அருணாக நடிகர் கமல்ஹாசனும், மஞ்சுவாக நடிகை ஸ்ரீப்ரியாவும், விளம்பரக் கம்பெனி அதிபராக நடிகர் ரஜினிகாந்தும் நடித்திருந்த இத்திரைப்படத்தின் இசையை இளையராஜாவும், பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுத, சோமசுந்தரரேஸ்வரர், வண்ணநிலவன் ஆகியோரின் திரைக்கதை வசனத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை நல்லுசாமி, ஞானசேகரன் கவனிக்க, படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் சி ருத்ரய்யா.

வழக்கமான சினிமா மரபுகளிலிருந்து விலகி, ஒரு தனித்துவமிக்க கலைப்படைப்பாக வெளிவந்த இத்திரைப்படத்தில் பங்கு பெற்றிருந்த கலைஞர்கள் தங்களது இயல்பான நடிப்பை மிக அற்புதமாக வெளிக்காட்டியிருந்ததோடு, சிறிதும் ஒப்பனை இல்லாமலேயே நடித்திருந்தனர் என்பது கூடுதல் சிறப்பாகவே இருந்தது. 1978ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம், சென்னையில் சபையர் மற்றும் காமதேனு ஆகிய இரு திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.

படம் வெளியானபோது பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறத் தவறிய இப்படம், இயக்குநர் பாரதிராஜா, மிருணாள் சென் ஆகியோரின் நேர்மறையான விமர்சனத்திற்குப் பின், மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு, பார்க்கப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அந்த ஆண்டின் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு சினிமா விருதினைப் பெற்றதோடு, படத்தின் ஒளிப்பதிவாளர்களான சோமசுந்தரேஸ்வரர் மற்றும் நல்லுசாமி சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கான பரிசினையும், சிறந்த நடிகைக்கான பரிசினை நடிகை ஸ்ரீப்ரியவிற்கும் பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்தது இந்த “அவள் அப்படித்தான்” திரைப்படம்.

தமிழில் சிறந்த 100 திரைப்படங்களைப் பட்டியலிடச் சொன்னால், அதில் நிச்சயமாக “அவள் அப்படித்தான்” திரைப்படத்திற்கு ஒரு தனி இடம் எப்போதும் உண்டு. தனது நீண்ட கலையுலகப் பயணத்தில் வெறும் இரண்டே திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் இயக்குநர் சி ருத்ரய்யா, இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், இந்த கலையுலகம் இருமாப்புடன் பேசும் அளவு ஓர் அற்புத கலைப்படைப்பாக படைத்துவிட்டுச் சென்ற ஒரு காவியத் திரைப்படம்தான் இந்த “அவள் அப்படித்தான்”.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம்எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, ... கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி கலைமாமணி விருது : ஜெயப்பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in