கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
“பயணங்கள் முடிவதில்லை” என்ற வெற்றித் திரைப்படத்தின் மூலம் தனது வெள்ளித்திரைப் பயணத்தை ஆரம்பித்தவர்தான் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன், 1980களில் வளர்ந்து வரும் நாயகர் மற்றும் நாயகியரை வைத்து படம் எடுத்து, அவைகளை வெள்ளிவிழா படங்களாக்கி வெற்றி கண்டவர் இவர். அந்த வகையில் “தூங்காத கண்ணின்று ஒன்று”, “சரணாலயம்”, “நான் பாடும் பாடல்”, “குங்குமச்சிமிழ்” என நடிகர் மோகனை வைத்து, இவர் இயக்கிய சில வெற்றிப் படங்களில் ஒன்றுதான் “மெல்லத் திறந்தது கதவு”. ஏ வி எம் பேனரில் மோகன் நடித்த முதல் படமான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கும் ரகங்களாகவே இருந்து வருவது இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் குறிப்பிடும்படியான ஒன்று.
'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன், 'இசைஞானி' இளையராஜா என்ற இந்த இரண்டு இசை ஜாம்பவான்களின் இசை வார்ப்பில் உருவான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்களுக்கான மெட்டினை எம் எஸ் விஸ்வநாதன் அமைக்க, இசைக்குழு ஏற்பாடுகளை இளையராஜா அமைத்துத் தர, பாடல்கள் அனைத்தும் தேன்மதுர கீதங்களாய் இன்றுவரை நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் இடம்பெற்ற “வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே” என்ற பாடல், 1953ல் இசையமைப்பாளர் சி ஆர் சுப்பராமனுடன் எம் எஸ் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்த “சண்டிராணி” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “வான் மீதிலே இன்பத் தேன் மாரிப் பெய்யுதே” என்ற பாடலின் தாக்கத்தில் மெட்டமைக்கப்பட்டு அது இன்றளவும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற பாடலாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றது.
ராதா, அமலா என்ற இரண்டு முன்னணி நாயகியர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ராதா வரும் காட்சிகள் எல்லாம் முதல் பாகத்திலும், அமலா வரும் காட்சிகள் எல்லாம் இரண்டாம் பாகத்திலும் வருவதாக சில நாட்கள் இத்திரைப்படம் ஓடிய நிலையில், அது ஒரு சராசரி வரவேற்பினையே பெற்றுத் தந்தது ரசிகர்களின் மத்தியில். அதன்பின்பு நடிகை ராதா வரும் காட்சிகளெல்லாம் இரண்டாம் பாகமாகவும், அமலா வரும் காட்சிகள் எல்லாம் முதல் பாகமாகவும் மாற்றி வெளியிட, ரசிகர்கள் மத்தியில் அது ஒரு நேர்மறையான வரவேற்பினைப் பெற்று, படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
மோகன், ராதா, அமலா, விசு, ஜி கே வெங்கடேஷ், எம் என் நம்பியார், கமலா காமேஷ், செந்தில், சார்லி, குண்டு கல்யாணம் என நட்சத்திர திரள்களோடு 1986ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், நடிகர் மோகன் மற்றும் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் கூட்டணியில் வெளிவந்த வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் ஒரு தனித்துவமிக்க திரைப்படமாக பார்க்கப்பட்டு வருவதுதான் இந்த “மெல்லத் திறந்தது கதவு”.