‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
பாடல்கள் மூலம் படத்தின் கதையைச் சொல்லும் வல்லமை கொண்ட கவிஞர் ஒருவர் உண்டென்றால் பளீச் என்று நம் நினைவிற்கு வருபவர் கண்ணதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். படத்தின் மொத்த கதையையும் மூன்று நிமிட பாடலில் சொல்லும் வித்தை அறிந்தவர். அப்படி ஒரு பாடல் ஒரு பொது வெளியில் பார்வையாளர்களின் முன்னிலையில் உருவானதைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
இயக்குநர் கே.பாலசந்தர் தான் இயக்கவிருக்கும் ஒரு படத்தின் பாடல் காட்சிக்கு பாடலை எழுதித் தர, கண்ணதாசனை தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறினார். இருவரும் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அன்று ஒரு இசைக்கச் சேரியில் பங்கு கொண்டிருந்த விபரம் தெரியவர, பாலசந்தர், கண்ணதாசனிடம் நாமும் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கே செல்லலாம் என கூறினார். அங்கு எம்எஸ் விஸ்வநாதனிடம் காட்சிக்கான சூழலை கே பாலசந்தர் விளக்கி, பாடலுக்கான ட்யூனை இங்கேயே கம்போஸ் செய்து தரும்படி கேட்க, வியப்படைந்த எம் எஸ் விஸ்வநாதன், இங்கே எப்படி முடியும்? நாளை நாம் வைத்துக் கொள்ளலாமே? என கூறி உள்ளார். உன் திறமையின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? என எம்எஸ் விஸ்வநாதனைப் பார்த்து பாலசந்தர் கேட்க, கச்சேரியில் பங்கு கொண்டிருந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பார்வையாளர்களைப் பார்த்து, ஒரு திரைப்படப் பாடல் எவ்வாறு உருவாகிறது என்பதை இன்று உங்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்ட இருக்கின்றோம் என அறிவிப்பு செய்ய, பாடலை உருவாக்க ஆயத்தமாகினர் மூவரும்.
இயக்குநர் கே பாலசந்தர் பாடலுக்கான சூழலைச் சொல்ல, கண்ணதாசன் அந்த சூழலுக்கான பாடலை அங்கேயே எழுதித்தர, எம்எஸ் விஸ்வநாதன் அதற்கான ட்யூனை உடனே கம்போஸ் செய்து, பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தைப் பாட வைத்து உருவாக்கிய உன்னதப் பாடல்தான், இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் 1977ல் வெளிவந்த “அவர்கள்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம், ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ” என்ற காலத்தால் அழியா காவியப்பாடல்.
இன்று ஒரு பாடலை கம்போஸ் செய்வதற்கு 7 நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்தும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்குச் சென்று தங்கியும், இன்னும் சிலர் அயல்நாடுகளுக்குச் சென்றும் கம்போஸ் செய்து வரும் நிலையில், சொன்னவுடனே இருந்த இடத்திலிருந்து பிறந்த பாடல்தான் இந்தப்பாடல்.
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் கோலோச்சியிருந்த பொற்காலத்தில் பிறந்த இந்தப் பாடல் அன்றும், இன்றும், என்றும் நிலைத்த புகழுக்குரிய ஒரு காவியப்பாடல் என்பதில் எந்த ஐயமுமில்லை.