தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியலிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்த விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் உலகம், திரையுலம் இரண்டின் முக்கியமான தலைவர்கள் விஜயகாந்த்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ரஜினி, கமல், விஜய் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் அஜித் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
அஜித் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை. ஆனால் அவர் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை தனது மேலாளரும் மற்றும் மக்கள் தொடர்பாளர் மூலம் தெரியப்படுத்துவார். ஆனால் விஜயகாந்துக்கு அவர் மூலம்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. மாறாக பிரேமலதா மற்றும் சுதீஷிடம் போன் மூலம் துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என அஜித் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் என்று மட்டும் கூறப்பட்டது. இதையும் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை.
அதேசமயம், “துபாயில் தற்போது இருக்கும் அஜித் நினைத்திருந்தால் ஒரே நாளில் வந்திருக்க முடியும். ஆனால் வரவில்லை. குறைந்த பட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலமில்லாமல் இருக்கும் விஜயகாந்தை அவர் சம்பிரதாயத்திற்காககூட நலம் விசாரிக்கவில்லை. தனது பைக் பயணங்கள் குறித்து படத்துடன் வெளியிடும் அஜித்தால் இதை செய்ய முடியாதது வருத்தமளிக்கிறது. திரைப்பட விழாக்களில், பொது விழாக்களில் கலந்து கொள்ளாதது அவரது தனிப்பட்ட முடிவு, அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் மனிதாபிமானத்தோடு அணுகும் விஷயங்களை அவர் கண்டுகொள்ளாதது அதிருப்தி அளிக்கிறது” என விமர்சனங்கள் எழுந்தள்ளன.