'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
இளையராஜாவின் தீவிர ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு திரைப்படம் 'பயணங்கள் முடிவதில்லை'. ஒரு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பாடல்கள் எந்த அளவு உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்த்திய மற்றுமொரு திரைப்படம்.
இந்தப் படத்தைப் பற்றி எழுதும் போது முதலில் இளையராஜாவின் இசையைப் பற்றியும், சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பற்றியும், அவற்றை எழுதிய முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோரையும், பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இப்படத்தின் பாடல்களான ''இளைய நிலா பொழிகிறதே, மணியோசை கேட்டு, சாலையோரம், ராக தீபம், தோகை இளமயில், வைகறையில், ஏ ஆத்தா,” ஆகிய ஏழு பாடல்களுமே ஏழிசையாக ஒலித்து படத்தை ரசிகர்களிடம் ஏற்ற வைத்தது.
கோவைத்தம்பி தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், மோகன், பூர்ணிமா ஜெயராம், எஸ்.வி.சேகர், கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில் 1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது இந்தப் படம். சில தியேட்டர்களில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த ஒரு திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது.
நன்றாக பாடத் தெரிந்த வறுமை நிலையில் இருக்கும் இளைஞர் மோகன். அவரது பாடும் திறமையைப் பார்த்து வியந்து அவரை சினிமாவில் பாட வைத்து பெரிய பாடகராக்குகிறார் பூர்ணிமா ஜெயராம். கூடவே அவருக்குக் காதலும் வருகிறது. இருவரும் காதலர்களாகிறார்கள். ஆனால், திடீரென தனது காதலி பூர்ணிமாவை விட்டு விலகி, தன்னை அவர் வெறுக்கும் அளவுக்கும் செய்கிறார். ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வாழ்க்கை முடியும் தருவாயில் தனது நிலைமை காதலிக்குத் தெரியக் கூடாது. அவர் வேறு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் மோகன் செய்கிறார். படத்தின் முடிவு ரசிகர்களை மிகவும் நெகிழ வைத்து கண் கலங்க வைத்த ஒரு உணர்ச்சிகரமான காதல் காவியமாக இப்படம் அமைந்தது.
மோகன், பூர்ணிமா ஜெயராம் (இப்போது பூர்ணிமா பாக்யராஜ்) ஜோடி அந்தக் காலத்தில் சில பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்த ராசியான ஜோடியாக இருந்தது. நெகிழ்வான காதல் கதையிலும் 'இந்த சென்னை மாநகரத்திலே…' என கவுண்டமணியின் காமெடியும் அதிகம் ரசிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மோகன் தோழனாக வரும் எஸ்.வி.சேகர், பூர்ணிமா தோழியாக வரும் ரஜினி ஆகியோரும் ரசிக்க வைத்தனர்.
ஒரு படத்தில் என்னவெல்லாம் இருந்தால் ரசிகர்களைக் கவர்ந்து பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பது இந்தக் கால இயக்குனர்களுக்கும் இப்படம் ஒரு பெரிய முன்னுதாரணம்.