சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் சின்னத்திரை பிரபலம் பிரஜன் கதாநாயகராக நடிக்க, அவருடன் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட் இணைநாயகராக நடிக்க புதுமுகம் அஷ்மிதா நாயகியாக நடிக்க, மோகன்.ஜியின் எழுத்து இயக்கத்தில், எம்.பிரகாஷ் தயாரிப்பில் அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ்.வெளியிட திரைக்கு வந்திருக்கும் படம் தான் "பழைய வண்ணாரப்பேட்டை"
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சமயத்தில், ஒரு கொலை கேஸ் சம்பந்தமான சந்தேகத்தில் அந்த ஏரியா அக்கீயூஸ்டுகளுடன் என்ஜினியரிங் படித்த பிரஜனனயும் அவரது நண்பர்களையும் அள்ளிக் கொண்டு போகிறது போலீஸ்.
ஸ்டேஷனில் வேல்முருகன் பாட, ஜானி மாஸ்டர் தலைமையில் பிரஜன், நிஷாந்த் உள்ளிட்ட எல்லோரும் ஆட, ஒரு குத்துப்பாட்டும் கொஞ்சம் சொந்தக் கதை, சோகக்கதைகளும் ஒட, பிரஜன் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால், கொலையாளி கிடைக்காததால் பிரஜனின் அப்பாவி பெஸ்ட் பிரண்ட் ஒருத்தரை மட்டும் அடாவடி இன்ஸ் பிடித்து வைத்துக் கொண்டு விட மறுக்கிறார். இதைக் கண்டு வெகுண்டெழும் நண்பர் பிரஜனும், நல்ல நேர்மை போலீஸ் ஏ.சி.பி ரிச்சர்ட்டும் தத்தமது வழிகளில் செல்வாக்கான நிஜக் கொலைக் குற்றவாளியை பிடித்துக் கொடுத்து, அப்பாவியை காபந்து செய்ய களமிறங்குவது தான் "பழைய வண்ணாரப்பேட்டை" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம். இந்த அதிரடி ஆக்ஷன் சப்ஜெக்ட்டுடன் கொஞ்சமே கொஞ்சுண்டு அஷ்மிதா - பிரஜனின் காதல் கண்ணாமூச்சியையும் கலந்து கட்டி படத்தை கலர்புல்லாக்க முயற்சித்து அதில் கொஞ்சுண்டு வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
கார்த்தியாக பிரஜன், டி.வி _ காம்பியராக ஜெயித்த அளவிற்கு ஜெயிக்கவில்லை.... என்றாலும் நல்நடிப்பு காட்டியிருக்கிறார். ஏ.சி.பி.மூர்த்தியாக ரிச்சர்ட் நேர்மையான போலீஸ் மிடுக்கு காட்டியிருக்கிறார்.
நாயகி அபியாக அஷ்மிதா அழகு காட்டியிருக்கிறார். தீனா வாக ரேணிகுண்டா, மெட்ரோ படங்களில் மிடுக்கு காட்டிய நிஷாந்த் வந்து போகிறார். நாயக்கர் - கருணாஸ் ,சில்க் - காஜல் , டான்ஸர் ஜானி, பாடகர் வேல்முருகன், கானாபாலா, சேசு, மணிமாறன் , தீனா , ஆதித்யா , பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் உள்ளிட்டோரும் வண்ணாரப்பேட்டை வாசிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
எஸ்.தேவராஜின் படத்தொகுப்பு, டாக்குமென்டரி யாய் தெரியும் அதிகப்படியான டயலாக் போர்ஷன்களுக்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். பாருக்கின் ஒளிப்பதிவு பழைய வண்ணாரப்பேட்டையை பக்காவாக அள்ளி வந்திருக்கிறது.
ஜூ பினின் இசையில் "பழைய வண்ணாரப்பேட்டை..., உன்னத்தான் நினைக்கையில..., காத்திருந்த பொண்ணு..., வா மச்சான் வா... உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையும் பேசுகிறது.
டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் ஸ்டைலில் புதியவர் மோகன்.ஜி., கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாவற்றையும் தானே எழுதி இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். அதில், கதை, வசனம், பாடல்களில் வெற்றி பெற்ற அளவிற்கு பிற விஷயங்களில் வெற்றி பெறாதது படத்திற்கு சற்றே பலவீனம்.
மொத்தத்தல், "பழைய வண்ணாரப்பேட்டை - ரசிகன் பார்த்து பழகிய பழசு!"
-------------------------------------------
குமுதம் விமர்சனம்
வடசென்னை வண்ணாரப்பேட்டை பேக்ரவுண்டில் சினிமாத்தனம் இல்லாமல் தரை லோக்கலாய் ஒரு படம்!
கையேந்தி பவன் வாசலில் ஓர் அரசியல் கொலை கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாததால் அங்கே சாப்பிட்ட வந்த பிரஜினின் நண்பனை உள்ளே வைக்கிறது போலீஸ். உண்மையான கொலையாளியை பிரஜின் அண்ட் கோ கண்டுபிடிக்க முயல, நண்பன் தப்பித்தானா என்பதுதான் கதை, இயக்கம் மோகன் ஜி.
வடசென்னை முகத்துக்கு பிரஜின் பொருத்தம். நண்பர்களும் அஃதே. காவல் அதிகாரியாக ரிச்சர்ட் மிடுக்கு. அஜித்தின் மச்சான் என்பதால் அங்கங்கே அஜித் பட மியூசிக் எல்லாம் போடுகிறார்கள் போல
யார் அந்த இன்ஸ்பெக்டர்? அவர் ஏதோ தவறானவர் போல நினைக்க வைத்து, ஒரு கட்டத்தில் இயலாமையில் அவர் பொங்குவது நேர்த்தி.
வண்ணாரப்பேட்டையை எந்தப் படத்திலும் இத்தனை முழுமையாகக் காட்டியதில்லை. பாரூக்கின் கேமரா நைட் டியூட்டி செய்திருக்கிறது!
ஜூபினின் இசையில் டிரம்ஸும் காதும் கிழிகிறது.
லோக்கல் ஸ்டேஷனில் சந்தேக கேஸ் ஆசாமிகளை எல்லாம் ஓர் அறையில் அடைத்து வைத்து விசாரணை தாண்டி நடக்கும் உரையாடல்கள் வித்தியாசம்.
யார் அந்தக் கொலையாளி என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்து, கடைசியில்... சம்பந்தமே இல்லாமல் ஒருவர் இருப்பது சப்!
ப.வ.பே... - யதார்த்தம்.
குமதம் ரேட்டிங் - ஓகே