தினமலர் விமர்சனம் » உயிரின் எடை 21 அயிரி
தினமலர் விமர்சனம்
திருந்திய தாதாவை அவர் வருந்திய பின்பும் வாழவிடாமல் செய்யும் தாதா உலகத்தை தத்ரூபமாக காட்டியிருக்கும் தரமான படம்தான் "உயிரின் எடை 21 அயிரி".
கதைப்படி, அனாதை ஏகனுக்கு அடைக்கலம் தரும் தாதா திலகன், ஏகனை தனது வலதுகரமாகவும் வளர்த்து வைத்துக்கொள்கிறார். இது திலகனின் மகன் முரளிக்கு பிடிக்கவில்லை. அதன் விளைவு ஏகனிடமே தொழில் பயிற்சி பெற்ற முரளி, ஒரு கட்டத்தில் ஹீரோ ஏகனையே போட்டு தாக்குகிறார். குத்துயிரும், கொலை உயிருமாக ஓடும் நதியில் தூக்கி வீசப்படும் ஏகன், மலை கிராமத்து மக்களால் பல நாட்கள் மூலிகை வைத்தியம் பார்த்து காப்பாற்றப்படுகிறார். அதுவரை மனித உயிரின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்த ஏகன், அங்கு அன்பு, பண்பு, மனித உயிரின் மதிப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அமைதியாக வாழ முற்படுகிறார். ஆனால் ஏகன் இருக்கும் இடம் தெரிந்து, தேடி வந்து அவரை திரும்பவும் தன் ஏரியாவுக்கு அழைக்கிறார் திலகன். அதற்கு ஏகனோ, நான் என் இறுதிகாலத்தை இங்கேயே அன்பும் அமைதியுமாக கழித்து விடுகிறேன் என்று மறுக்கிறார். திலகன் விடாபிடியாக ஏகனை தன் கோட்டைக்கு அழைத்து போகிறார். ஏகன் தாதாயிசத்தை தொடர்ந்தாரா...? இல்லை தப்பி தருந்தி வாழ்ந்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்!
தாதாயிசம், ஹீரோயிசம் எல்லாம் பல ஆக்ஷ்ன் படங்களில் பார்த்த சமாச்சாரங்கள் தான் என்றாலும் அதை முற்றிலும் புதுமையாக சொல்லியிருக்கிறார் திரைப்பட கல்லூரி மாணவரான இயக்குநர் ஏகன் என்பது தான் ஹைலைட்! அதிலும் அவரே இசையமைப்பாளர், அவரே நாயகர்... என்பது ஏகனுக்கு பெரிய பலமாகிவிட்டது இப்படத்தை பொறுத்தவரை...
முன்பாதியில் ஏன்..? எதற்கு...? என்று கேட்காமல் திலகன் சொல்பவர்களை எல்லாம் தீர்த்து கட்டுவதில் ஆகட்டும், பின்பாதியில் மலைகிராம மக்களின் அன்பில் கரைந்து போவதில் ஆகட்டும் இரண்டிலுமே நடிப்பில் கரைகண்டவராக மிளிர்ந்திருக்கிறார் நாயகர் ஏகன் என்றால் மிகையல்ல. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு... என கச்சிதமாக சொல்லி இருக்கும் இவரது பாத்திரம், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். கத்தியும், கட்டையும் பிடித்து உயிரை எடுத்த கைகளால் அதே கட்டையும், கத்தியும் பிடித்து பம்பரம் செய்து சிறுமிக்கு தரும் காட்சிகளில் நெகிழ வைத்துவிடுகிறார் மனிதர் பலே, பலே!
அச்சன் பாத்திரத்தில் சீனியர் தாதாவாக திலகன் மிரட்டியிருக்கிறார். அப்பாத்திரத்தில் திலகனைத்தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அத்தனை பொருத்தம் அச்சனின் பாத்திரம். ஏகன் திலகம் மாதிரியே திலகனின் மகனாக வந்து, க்ளைமாக்ஸில் ஏகனையே தீர்த்துகட்டும் முரளி, அவரது ஆளான மணியன் பிரதீப், மலைகிராம இளம்விதவையாக படத்தின் பிற்பாதியில் வந்து ஹீரோ ஏகனையும், ஏகப்பட்ட ரசிகர்களையும் ஒருசேர கவரும் வினிதா, அவரது மகளாக துருதுருவென வளைய வரும் பேபி சங்கமித்ரா உள்ளிட்டவர்களும் உயிரின் எடை படத்தின் பலமான பாத்திரங்களாக ஜொலித்திருக்கின்றனர். இவர்களுடன் பம்பர் ஸ்டாராக வந்து பம்மும் கணேஷ்பாபுவும், வில்லனாக சில நிமிடங்களே வந்தாலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் மாட்டுரவி - தர்மராஜ் உள்ளிட்டவர்களும் பேஷ் பேஷ் சொல்லவைத்து, உயிரின் எடைக்கு எடையை கூட்டியுள்ளனர் என்றால் மிகையல்ல!
முற்பாதி வெட்டு குத்து, கட்டப்பஞ்சாயத்து என ஆக்ஷ்ன் படங்களுக்கே உரிய அலட்டலில்... அதட்டல், உருட்டலாக சென்றாலும், பிற்பாதியில் ரம்மியமான மலைகிராமமும், பிரதிபலன் பார்க்காமல் பிறர்க்கு உதவும் மனதுடைய மக்கள் என கதையை இருவேறு கோணங்களில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருப்பதில் இயக்குநர் ஏகன் எல்லா தரப்பு ரசிகர்களின் ஏகாபித்த ஆதரவையும் பெற்று விடுகிறார். அதேநேரம், நான்கைந்து பேரால் நாற்பது, ஐம்பது இடங்களில் வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்படும் ஹீரோ, நாட்டு வைத்தியத்தால் பிழைப்பது உள்ளிட்ட நம்ப முடியாத சமாச்சாரங்களும் என்னதான் சினிமா என்றாலும், இதுமாதிரி நல்ல படத்திற்கு சற்றே பலவீனமாகத் தெரிவதை இயக்குநர் நினைத்திருந்தார் என்றால் தவிர்த்திருக்கலாம்!
தரமான மணியன் பிரதீப்பின் வசனம், ஜெ.பி.ராஜ்செல்வாவின் ஒளிப்பதிவு, ஏகனின் இசையமைப்பு, இயக்கம் எல்லாமும் சேர்ந்து "உயிரின் எடை 21 அயிரி" படத்தை திரையரங்குகளில் 210 நாட்கள் ஓட வைக்க வேண்டும். இன்றைய சூழலில் அட்லீஸ்ட் 21 நாட்களாவது அரங்கு நிறைந்த காட்சிகளாக அதிர வைக்கும் என நம்பலாம்.