கதாசிரியர் "அன்னக்கிளி" ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளருமான தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில், முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, கதாநாயகி என்று யாருமே இல்லாது இயக்குனர் இமயம் பாரதிராஜா பெருமையுடன் வழங்க, ஆல்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல திரைப்படம்.
நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல என "நாயகன்" படத்தில் கமல் பேசிய வசனத்தை டைட்டிலாகக் கொண்டு வந்திருக்கும் இப்படக்கதைப்படி, கதையின் ஒருநாயகன் பிரபு, அம்மா இல்லாத பிள்ளை, அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு வருடத்திற்கு முன்பு பைக் விபத்தில் இறந்து போன பிரபுவுடைய அண்ணனின் நண்பர்களும் இப்பட இன்னும் பிற நாயகர்களுமான அனில், ஸ்ரீதர், ஜானி ஆகிய மூன்று பேரும் திட்டமிட்டு பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள்.
மலேசியாவில் செட்டில் ஆக வேண்டும் என்ற பிரபுவின் ஆசைக்கு தேவைப்படும் பணம் நேர்மையான அப்பா மூலம் கிடைக்காது என்பதால், திருடர்களான அண்ணனின் அந்த மூன்று நண்பர்களின் துணையுடன் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறார் பிரபு. ஆனால், "கூடா நட்பு கேடாய் முடியும்..." என்பதற்கேற்ப அவர்களால் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்குகிறார் பிரபு. அதன்பின் என்ன நடக்கிறது? என்பது தான் நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம் !
இதில் கதாநாயகனாக அணில் எனும் பாத்திரத்தில் டி.வி நட்சத்திரம் கார்த்திகேயன் நடித்துள்ளார். அவருடன் பிரபுவாக ஷாரியா, யுவன் ஸ்ரீயாக - ஸ்ரீதர், ஜெகதீஷாக ஜானி... என்ஆர்ஐ.,-யாக வரும் ஜார்ஜ் விஜய், ரோஹித்தாக வரும் அரவிந்த், பொன்விநாயகம் அருள் ஜோதி உள்ளிட்டவர்களில் ஹீரோ கார்த்திகேயனில் தொடங்கி, காமெடியன் அருள் ஜோதி வரை அனைவரும் அசத்தியுள்ளனர்.
ரன் ரவியின் அனல் பறக்கும் சண்டை பயிற்சி, சேவியர் திலக்கின் பக்கா படத்தொகுப்பு, ஏ.டி.பகத்சிங்கின் வித்தியாச விறுவிறு ஒளிப்பதிவு, பியோன் சரோவின் கதைக்கேற்ற இனிய இசை உள்ளிட்டவை ப்ளஸ் பாயிண்ட்ஸ்.
கதாநாயகி இல்லாது, கவர்ச்சிக்குன்னு நிறைய நடிகைகளும் இல்லாது, துணிச்சலாக, அதேநேரம் பரபரப்பு, விறுவிறுப்பு சற்றும் குறையாது இப்படி ஒரு புதுவித தமிழ்படம் எடுத்தமைக்காகவே இயக்குனர் தினேஷ் செல்வராஜை பாராட்ட வேண்டும். மேலும், இவரது எழுத்து, இயக்கத்தில், "மரண வலிங்கறது உயிர்போறப்ப ஏற்படுறதில்ல.... உயிருக்கு உயிரானவங்க இறந்து போகும் போது ஏற்படும் உணர்வுதான்....", "உன் முகம் சின்ன புள்ளைங்க பார்த்து பயப்படுற மாதிரி இருக்கு... நீ சினிமா ட்ரை பண்ணினா, நிச்சயம் உனக்கு டைரக்டர்ஸ் மிஸ்கின், பிரபு சாலமன், செல்வராகவன் பட ஹீரோ வாய்ப்பு கிடைக்கும்" என்பது உள்ளிட்ட வசன "பன்ச்"கள் இந்த சீரியஸ் சப்ஜெக்டில், சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. அந்த ஐந்து கோடி செக் மேட்டர் மட்டும் சாமான்ய ரசிகனை குழப்பு குழப்பென்று குழப்பும். இது மாதிரி ஒரு சில லாஜிக் குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - பெரிய தப்பில்ல, நல்ல படம்...லே!"