நாயகன் - வருண் தேஜ்
நாயகி - பிரக்யா ஜெய்ஸ்வால்
இயக்குனர் - கிரிஷ்
தெலுங்கு திரை உலகில் அதிசயமாக நடக்கும் நிகழ்வு, வழக்கமான கமர்ஷியல் படங்களின் பாதையில் இருந்து விலகி எப்போதாவது தான் தனித்துவமான படங்கள் வரும். அது போன்றதொரு முயற்சி “கஞ்சே” திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் கிரிஷ், முந்தய படங்கள் மூலம் தனக்கென ஒரு பாதையை ஏற்படுத்தி கொண்டவர். இம்முறை சுதந்திரத்திற்கு முந்தய காலகட்டம் தான் படத்தின் கதைக்களம். குறிப்பாக சொன்னால் இரண்டாம் உலகப் போர் நிகழும் காலகட்டம் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நேரம். போர் பற்றிய படங்கள் இந்திய மொழிகளில் அதிகமாக எடுக்கப்பட்டதில்லை. குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்டதே இல்லை என்று கூட சொல்லலாம். அப்படி இருக்கையில் இந்த படம் அந்த வெற்றிடத்தை அழுத்தமாக நிரைத்திருக்கிறது, நீண்ட கால நினைவிலும் நிற்கும்.
இப்போது படத்திற்கு வருவோம். படத்தின் பேசு பொருள் சாதிய பாகுபாடு தான். அதன் தொடர்புடைய சில நிகழ்வுகள் போர்களத்திலும் நிகழ்கிறது. படத்தின் நாயகன் வருண் தேஜா ஒரு படைவீரன். உயர் சாதி பெண் ப்ரக்யா மீது காதல் கொள்கிறான், ஒரு புறம் காதலுக்காக போராடுகிறான். மறுபுறம் தன் குழுவை சேர்ந்தவர்களை காப்பாற்ற போர்களத்தில் ஆக்ரோஷமாக போரிடுகிறான். குறிப்பாக அவனது நெருங்கிய உறவினர் ஒருவர் நாசி படைகளால் பினைக்கைதியாக பிடித்து வைக்கப்படுகிறார்.அவரை நாயகன் மீட்டு காதலிலும் வெற்றி கண்டாரா என்பதே படத்தின் இரண்டாம் பாதி.
இரண்டும் கதைகளும் முன்னும் பின்னும் செல்லும் அமைப்புடன் அமைக்கப்பட்ட திரைக்கதையை மிக நேர்த்தியாக கிரிஷ் கையாண்டிருக்கிறார். வலுவான வசனங்கள் மூலம் இணைக்கப்படும் இரு கதைகள் என கைதட்டவைக்கிறார். வருண் தேஜா கிட்டத்தட்ட ஒரு அறிமுக நாயகன் தான், தனது ஆளுமையால் படத்தின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். சிரஞ்சீவிவின் குடும்பத்தில் இருந்து வரும் நபர் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்வார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டர்கள். அதுவும் தன் திரைவாழ்கையின் தொடக்க காலத்தில் இப்படி ஒரு முடிவு அவரை புருவம் உயர்த்தி பார்க்க வைக்கிறது.
ப்ரக்யாவும் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார் அழகாக இருக்கிறார்., அவருக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். போர்கள காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நிச்சயம் ஒளிப்பதிவாளரை பாராட்டியாக வேண்டும். முதல்பாதியில் வரும் காதல் காட்சிகளும் படத்திற்கு புது வண்ணம் சேர்க்கிறது.மிக மெல்லிய லாஜிக் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது இல்லை என்று சொல்ல முடியாது. அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. மசாலா படத்தை எதிர்பார்க்கும் தெலுங்கு தேசத்திற்கு இது இன்ப அதிர்ச்சிதான்.
நாம் பெரிதும் பார்த்த அந்நிய படங்களுக்கு நிகராக போர்கள காட்சிகள் இருக்கிறது. அந்த காட்சிகளில் தரம், படத்திற்கு பெரும் பலம். கலை இயக்குனர் சாய் சுரேஷ் படத்தின் நம்பத்தன்மையை உயர்த்த பெரிதும் மெனக்கெடிருக்கிறார் என்று காட்சிகளை பார்க்கும் போது தெரிகிறது. அந்த முயற்சியில் அவர் ஜெயிக்கவும் செய்திருக்கிறார்.
போர்களத்தை பின்புலமாக கொண்ட கதை , அதில் முன்னும் பின்னும் சுழலும் திரைக்கதை , சாதிய பாகுபாடுகள் பற்றிய பேச்சு காட்சிப்படுத்தியவிதம் என இயக்குனர் கிரிஷ் கைதட்டல் பெறுகிறார். வழக்கான ஆக்ஷன் கமர்ஷியல் படங்கள் மட்டுமே வரும் தெலுங்கு தேசத்தில் இது குறிப்பிடும் படியான முயற்சி. நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
கஞ்சே - புதிய பாதை