நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், பார்வதி ரத்தீஷ், பிஜுமேனன், நீரஜ் மாதவ்
இயக்கம் : சுகீத்
'ஆர்டினரி'' சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சுகீத் இயக்கியுள்ள இரண்டாவது படம்.
ஷார்ஜாவில் கால் டாக்ஸி ட்ரைவராக வேலை பார்க்கிறார் குஞ்சாக்கோ போபன். அவருடன் சக ட்ரைவரான பிஜுமேனன் மற்றும் ஒரு கம்பெனியில் வேலைபார்க்கும் நீரஜ் மாதவ் ஆகியோர் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். விபச்சாரத்தில் தள்ளப்பார்க்கும் தனது முதலாளியை தாக்கிவிட்டு தப்பிவரும் ஈழ தமிழ்ப்பெண்ணான பார்வதிக்கு அடைக்கலம் அளிக்கிறார் குஞ்சாக்கோ போபன்.
பார்வதியை, வேறு டூப்ளிகேட் பாஸ்போர்ட் தயார் செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்கும் வரை தங்களுடன் தங்க வைக்கும் குஞ்சாக்கோவுக்கு பார்வதி மீதி காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் தன்னிலை மறந்து அத்துமீற, அதில் பார்வதி கர்ப்பமாகிறார். குஞ்சாக்கோ தனது நண்பர்கள் முன்னிலையில் பார்வதியை திருமணம் செய்துகொள்ள, அழகான ஆண் குழந்தையும் பிறக்கிறது. இவை அனைத்துமே அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு எதிராகவே நடக்கின்றன.
திடீரென ஒருநாள் குஞ்சாக்கோ சாலை விபத்தில் சிக்கி, அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பின்னர் அவரது தாய்மாமன் வந்து, தொடர் சிகிச்சைக்காக குஞ்சாக்கோவை கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார். அந்த நேரம் பார்த்து பார்வதியால் தாக்கப்பட்ட முதலாளி கொடுத்த புகாரின் பேரில் பார்வதியும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுகிறார். இவர்களது குழந்தை ஷார்ஜாவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இந்த மூவரையும் மூன்று நாடுகளில் பிரித்து வைத்து விளையாடிய விதி, இவர்களை ஒன்று சேர்க்கவும் உதவியதா என்பது உருக்கமான க்ளைமாக்ஸ்.
அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நம்மவர்கள் எப்படி சூழ்நிலைக்கைதியாக மாறிப்போகிறார்கள் என்பதை குஞ்சாக்கோ போபன் தனது கதாபாத்திரத்தின் மூலம் மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார். ஈழத்தமிழ்ப்பெண்ணாக அறிமுகமாகியுள்ள பார்வதி ரத்தீஷுக்கு ஒரு கதாநாயகிக்கு உண்டான முகவெட்டு இல்லை என்றாலும், போகப்போக அந்த கதாபாத்திரமாக மாறிப்போகிறார்.. ஆனாலும் சில கோணங்களில் அவரது தோற்றம் நம்மை அயற்சியடைவே செய்கிறது.
படத்தின் கலகலப்புக்கு முக்கிய உத்தரவாதம் அளிப்பது பிஜுமேனன், நீரஜ் மாதாவின் கலாட்டாக்கள் தான். காமெடி கலந்து குணச்சித்திர நடிகராக மாறிப்போன வில்லன் நடிகரான பிஜுமேனனை பார்த்தால் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது.. இலங்கையில் பார்வதியை தேடிப்போகும் குஞ்சாக்கோவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் நம்ம ஊர் கஞ்சா கருப்பு..
ஆர்டினரி படத்தில் அழகிய மலைகிராமத்து பின்னணியில் ஒரு பேருந்து நடத்துனரின் காதலையும் வாழ்க்கையையும் எதார்த்தமாக சொன்ன இயக்குனர் சுகீத், இதில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரின் காதலை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயன்று ஓரளவு ஜெயித்திருக்கிறார். குறிப்பாக மலையாளப்படம் தான் என்றாலும் கேரள லொக்கேஷன்கள் எதுவுமே இல்லாமல், ஷார்ஜாவையும், இலங்கையையும் மட்டுமே காட்டி படித்ததை முடித்திருப்பது புதுசு.
பார்வதி ரத்தீஷுக்கு பிரசவமாகும் நேரத்தில் விசாரணைக்காக ஷார்ஜா போலீஸ் வந்துசெல்லும் காட்சிகள் திக்திக் ரகம்.. நல்ல படம் தான் என்றாலும் இயக்குனரின் முதல் படம் நம் மனதில் ஒட்டிய அளவுக்கு இது அவ்வளவாக நம் மனதை தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.