தினமலர் விமர்சனம்
வௌிவரும் நேரத்தில் பல பிரச்னைகளை சந்தித்து, தடை பல கடந்து வெற்றிகரமாக வௌிவந்திருக்கிறது கார்த்தியின் கொம்பன்!
மாமனார் ராஜ்கிரணுக்கும், மருமகன் கார்த்திக்குமிடையேயான ஈகோ உரசலும், பாச கூடலும் தான் கொம்பன் படம் மொத்தமும். இதில் நாயகி லட்சுமி மேனனின் காதலையும். தம்பி ராமைய்யா, கருணாஸின் காமெடியையும், சூப்பர் சுப்புராயன் & சன்ஸின் வில்லத்தனத்தையும் கலந்து கட்டி, கொம்பனை தன் முந்தைய படமான குட்டிபுலியை விட கூடுதலாக கொண்டாடும் விதமாக படைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.எம்.
நாயகர் கார்த்திக்கு இப்படத்தில் பாத்திரப் பெயர் கொம்பைய்யா பாண்டியன், அதனால் இப்பட தலைப்பு கொம்பன். இதைத்தவிர இப்படத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ, ஒரு காட்சியோ, வசனமோ... திரும்ப திரும்ப கொம்பன் படத்தை பார்த்தபோது கூட நம் கண்களுக்கு சிக்கவில்லை! பெருவாரியான ரசிகர்கள் கண்களுக்கும் அப்படியே! அப்படியிருக்கையில், அப்புறம் எப்படி, கொம்பன் படத்திற்கு எதிராக இத்தனை போராட்டம் என்பது புரியாத புதிர்! அதுபோகட்டும் விமர்சனத்திற்கு வருவோம்....
கதைப்படி, இராமநாதபுரம் மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள அரசநாட்டு பகுதியை சேர்ந்தவர் ஹீரோ கார்த்தி! முரட்டு சுபாவமுடைய அவர் அநீதியை கண்டால் பொங்கி எழும் ரகம். அதுவே அவருக்கு வினையாகிறது. அரசநாட்டிற்கு அருகே இருக்கும் செம்மநாடு, வௌ்ளநாடு உள்ளிட்ட ஊர்களின் பெரிய மனிதர்களை வில்லன்களாக சம்பாதிக்கிறார் கார்த்தி. இந்நிலையில் கார்த்தியின் முரட்டு சுபாவமும், இரக்க குணமும், ராஜ்கிரணை கவர, அவர் தன் மகள் லட்சுமி மேனனை, கார்த்திக்கு மனம் உவந்து மணம் முடித்து வைக்கிறார். மனைவி வந்த நேரம் மாற்றம் வர வேண்டுமே.? அது வர மறுக்கிறது கார்த்திக்கு... அதனால் அவரும், அவரது மாமனார் ராஜ்கிரணும் சந்திக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்.? என்பதும் தான் கொம்பன் படத்தின் அதிரடி வம்பு - தும்பான வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
கொம்பன் எனும் கொம்பைய்யா பாண்டியனாக, கார்த்தி பருத்தி வீரனுக்கு அப்புறம் பலே சொல்லும் பாத்திரத்தில், முரட்டு சுபாவமும், உருட்டும் பார்வையும், பெரிய மீசையும், தூக்கி கட்டிய வேஷ்டி, மூன்றாவது கையாக கையடக்க கொடுவாள் என கொம்பன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.
மனைவி லட்சுமி மேனனுடன் நெருக்கம், கிறக்கம் காட்டவதிலாகட்டும், ஆட்டு வியாபாரியாக தம்பி ராமைய்யாவுடன் சிலேடை பேசியபடி திரிவதிலாகட்டும், மாமனார் ராஜ்கிரணுடன் மல்லு கட்டுவதிலாகட்டும், வேறு யாரையும் வணங்க மாட்டேன்... என்னை பெற்ற தாய் கோவை சரளா காலில் மட்டும் தான் விழுவேன்... என அடம்பிடிப்பதிலாகட்டும், எதிராளிகளை பாய்ந்து பிடித்து அடித்து துவைப்பதிலாகட்டும், அனைத்திலும் கொம்பன் கார்த்தி புதிய பரிமாணம் தொட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! அதிலும் சிறையில் வைத்து தன் ஆசை மாமாவை தீர்த்து கட்ட போகிறார்கள்... என்பது தெரிந்ததும், தானும் அதுவரை அடாவடியாக பேசிய இன்ஸ்பெக்டரின் முகத்தை உடைத்துவிட்டு., சிறைக்கு சென்று மாமா ராஜ்கிரணை காப்பாற்றும் காட்சிகள் கொம்பனின் உச்சானி கொம்பு காட்சி என்றே சொல்லலாம், கங்கிராட்ஸ் டைரக்டர்ஜி.
கார்த்தி மாதிரியே கதாநாயகி லட்சுமி மேனனும் பழனி பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். அப்பாவையும் விட்டுத்தராது, புருஷனையும் விட்டுக் கொடுக்காத அம்மணியின் பாத்திரமும், லட்சுமிமியின் நடிப்பும், இளமை துடிப்பும் கச்சிதம்!
ராஜ்கிரண் - மாமனார் முத்தைய்யாவாக தங்களுக்கு இப்படி ஒரு மாமனார் கிடைக்கவில்லையே என ரசிகர்களை ஏங்க வைக்கிறார். ஆனால், கணவருடனான குடும்ப சண்டையில் மகள் லட்சுமி மேனனையும் தன்னுடன் எந்தவித எதிர்ப்பும் கூறாது அவரது புருஷன் கார்த்தியை விட்டு அழைத்து செல்வது அபத்தமாக இருக்கிறது.
கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமைய்யா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மாரி முத்து, சூப்பர் சுப்பராயன், ஐ.எம்.விஜயன், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட ஒவ்வொருவரது இயல்பான பாத்திரமும் தென்மாவட்டத்தை சார்ந்தவர்களை சரியாக பிரதிபலித்திருப்பது கொம்பனின் பெரும் பலம்!
வேல்ராஜின் இயற்கை எழில் கொஞ்சும் ஔிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் கிராமிய மனம் கமழும், கறுப்புநிறத்தழகி... உள்ளிட்ட பாடல்கள் ஆகிய ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், இயக்குநர் எம்.முத்தையாவின் எழுத்து இயக்கத்தில், பொண்ணு கொடுத்த மாமன், எல்லா மருமகன்களுக்கும் ஒருவகையில் அப்பன்... தான் எனும் மெஸேஜ் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் விதமும், நல்லவன் சாகவும் கூடாது, தப்பானவன் வாழவும் கூடாது... எனும் பன்ச் டயலாக் மற்றும் கிளைமாக்ஸில் ராஜ்கிரண்-கார்த்தியின் சாமியாடல் வேட்டை... உள்ளிட்ட விஷயங்கள் புத்தம் புதுசாக இருப்பது கொஞ்சமே கொஞ்சம் வம்பனாக தெரியும் கொம்பனை ரசிகர்களின் அன்பனாக, நண்பனாக ஆக்கிவிடுகிறது என்றால் மிகையல்ல!
மொத்தத்தில், கொம்பன் - வம்பன் என்றாலும் ரசிகர்களின் அன்பன் - நல் நண்பன்!!
குமுதம் சினி விமர்சனம்
கொம்பன்
ஒரு சின்ன கத்தியில் இந்தக் கதையை எழுதிவிட முடியும்.
மாமனாருக்கும் மருமகனுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பை ஏகப்பட்ட ரத்தக் களறிகளுக்கிடையேசொல்லும் படம் இது.
வீட்டோடு மாமனாராக வருகிறார் ராஜ்கிரண். மாப்பிள்ளை கார்த்தி, ஒரு கோப தருணத்தில் மாமாவைத் தாக்கிவிட, அப்புறம் என்ன? அவர் வீட்டை விட்டு தன் மகளுடன் வெளியேற, மாமாவின் அருமை புரிந்து, அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.
பருத்திவீரனை நினைவு படுத்தும் கார்த்தி. பொசுக் பொசுக்கென கோபப்படுவது ரொம்ப இயற்கை. சண்டைக்காட்சிகளில் சுறுசுறு. ஆனால், ஒரே மாதிரியாக பத்து நிமிடத்துக்கு ஒரு சண்டை வைப்பது போதும்டா சாமி என்று சொல்ல வைக்கிறது.
'கும்கி' லட்சுமி, க்ளாமர் குளத்துக்குள் குதித்து விட்டார். (சந்தோஷம்தானே?) தந்தைப் பாசத்துக்கும் கணவன் பாசத்துக்குமிடையே தள்ளாடுவது க்யூட்.
ராஜ்கிரணை வீணடித்து விட்டார்களோ என்ற முன்பாதியில் நினைக்கத் தோன்றுகிறது. அதன்பிறகு மனிதர் விஸ்வரூபமெடுக்கிறார்.
'கோவை' இல்லாத சரளாவிடம் மனோரமா வாசனை!
தம்பி ராமய்யா தன் ட்ரெண்டடை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. 'ஆளுக்கு ஆள் அடிக்கிறதாலதான் ஆல்கஹால்னு பேர் வச்சுருக்காங்க' - சொல்லும்போது மட்டும் தியேட்டர் வெடிக்கிறது.
கொடூர வில்லனாக வரும் சுப்பராயன் சூப்பர்! ஜி.வி.யின் 'ஹாட்'டான ஒரு பாடல் செமை கூல்!
கொம்பன் - இன்னும் கொஞ்சம் கூர்மையாக கொம்பு சீவியிருக்கலாம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே