தினமலர் விமர்சனம்
சவாலே சமாளி, ஜீவனாம்சம் படங்களின் இயக்குனரும் துலாபாரம் படத்தின் கதாசிரியருமான மறைந்த பழம்பெரும் இயக்குனர் மல்லியம் ராஜகோபாலின் வாரிசு ராஜ்பரத், கதாநாயகராக அறிமுகமாக, அவரது உறவினரும், கண்ணெதிரே தோன்றினாள்", சந்தித்த வேளை, "மஜ்னு... உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான ரவிச்சந்திரனின் இயக்கத்தில் சற்று பெரிய இடைவெளிக்குப் பின் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "நட்பதிகாரம் - 79".
கதைப்படி, ஒரு நடுத்தர வர்க்கத்துபையனுக்கும், மேல்தட்டு பெண்ணுக்குமிடையில் ஒரு காதல். அதே மாதிரி, ஒரு மேல்தட்டுபையனுக்கும், நடுத்தர வர்க்கத்து பொண்ணுக்குமிடையே மற்றொரு காதல். இந்த இரண்டு காதல் ஜோடிகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்பு.
ஒரு சமயத்தில், இருகாதல் ஜோடிகளுக்குள்ளும் ஒருத்தருக்கு ஒருத்தர் எதிர்பாராமல் ஏற்படும் மனவருத்தம், காதலர்களிடையே பிரிவை ஏற்படுத்தி., சந்தர்ப்பவசத்தால், நட்பில் களங்கத்தை கற்பிக்க பார்க்கிறது. அந்த இக்கட்டான சூழலில் நட்பு ஜெயித்ததா?, காதல் ஜெயித்ததா.?, நட்பு, காதல் இரண்டும் ஜெயித்ததா..? எனும் கேள்விகளுக்கு வித்தியாசமும், விறுவிறுப்புமாக பதில் சொல்ல முயன்று அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றிருக்கிறது "நட்பதிகாரம் - 79 " படத்தின் மொத்த கதையும், காட்சி அமைப்புகளும்...
மெரைன் இன்ஜினியரீங் படித்து விட்டு கப்பல் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு காத்திருக்கும் ஜீவா எனும் பாத்திரத்தில் புதியவர் ராஜ்பரத் செம - கெத்து காட்டி நடித்திருககிறார். இவரது ஹைட், வெயிட், நடை, உடை, பாவனை எல்லாம் அர்விந்த்சாமிக்கு அப்புறம் தமிழ் சினிமாவில் அழகான நடிகர் எனும் அளவிற்கு ஏதோ ஒரு வசீகரம் இவரிடம் இருக்கிறது.
உனக்கு பிரண்ட்ஸ் முக்கியமா, நான் முக்கியமா ? என நாயகி பூஜா கேட்க, ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருத்தர் முக்கியம்... என பொறுமையாக பதில் சொல்லும் ஹீரோ, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து என் பிரண்ட்ஸ் தான் முக்கியம் போடி... என பொங்கி எழும் காட்சியில் தியேட்டரில் விசில் சப்தம் காதை கிழிக்கிறது.
அவரது நண்பராக இன்னொரு நாயகராக அரவிந்த் பாத்திரத்தில் வரும் அம்ஜத்கானும் கணக்கச்சிதம். இருவரது நட்பும் , நடிப்பும் தான் நட்பதிகாரம் படத்தின் பெரியபலம்!
மகா-ரேஸ்மிமேனன், பூஜா - தேஜஸ்வி இருவரில் மகா-ரேஸ்மி , ஹோம்லியில் பிய்த்து பெடலெடுத் திருக்கிறார். பூஜாவாக வரும் தேஜஸ்வி கிளாமரில் கிளப்பி இருக்கிறார் பட்டையை.. ஆக மொத்தத்தில் இருவரது நடிப்பும், இளமை துடிப்பும் ரசிகனுக்கு பக்கா விருந்து.
எம்.எஸ்.பாஸ்கர், சுப்பு பஞ்சு, வினோதினி, விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்டவர்களும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர்களும் கூட கச்சிதம். அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் பாசக்கார பிராமனத் தந்தையாக மிரட்டியிருக்கிறார் மிரட்டி.
சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும், ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் பக்கா, பளிச்!
தீபக் நிலம்பூரின் இசையில் ஆறு பாடல்கள்.... அதில் இப்பட இயக்குனர் ரவிச்சந்திரன் எழுதியுள்ள எந்தன் ஜீவன்.. , ஷைலாமைஷைலா.. , சொல்லு சொல்லு செல்லம்மா.... பாடல்களும், மா.சிவசங்கர் எழுதியுள்ள பெண்ணே நீ காதல் வலை... ", எனத் தொடங்கித் தொடரும் பாடலும், மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம்!பின்னணி இசையும் படக்காட்சிகளுக்கு ஏற்ப இசைந்து இசைத்திருப்பது பிரமாதம்..
ரவிச்சந்திரனின் எழுத்து, இயக்கத்தில், பெண்ணிடம் நட்புடன் ஆண் கொடுக்கும் பூங்கொத்தில் உள்ள வெள்ளை, மஞ்சள் பூக்களுக்குரிய அர்த்தம் சொல்லும் இடம், அப்பா மகனுக்கு சரக்கும், தம்மும் அடிக்கக் கொடுத்து, "லவ்வர்தான் பிரண்ட் ஆயிடக் கூடாது ... பிரண்ட் லவ்வர் ஆவதில் தப்பில்லை.. எனும் ஏரியாக்கள் நச் ... என்று படமாக்கப்பட்டிருந்தாலும்., லண்டனில் திடீரென இரண்டாவது நாயகர் அரவிந்த் - அம்ஜத்தின் அப்பா விசா மோசடியில் சிக்குவதும், அதற்காக, வீட்டில் பெற்ற அப்பாவுக்கு லெட்டர் எழுதி வைத்துவிட்டு, நந்தனம் - ரிஜிஸ்தர் ஆபிஸில் காத்திருககும் உயிருக்கு உயிரான காதலி மகாவிற்கு தகவல் தர முயற்சிக்காமல், அல்லது அம்ஜத் தகவல் தர முயற்சிக்கும் காட்சி, போன், செல்போன், இரு பக்கமும் ஏகப்பட்ட நண்பர்கள்... என எத்தனையோ வசதிகள் இருந்தும் சரியாக சொல்லப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதில் இடைவேளை சமயம் பொத்தென சறுக்கி விழும் நட்பதிகாரம் - 79 அதன்பின் , எத்தனையோ முறை எழுந்து நடை போட முயன்றும் ., அது முடியாமல் தடுமாறும் காட்சிகள் இப்படத்திற்கு பலமா, பலவீனமா ? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்!
மற்றபடி, "நட்பதிகாரம் - 79, சற்றே காரம் குறைவென்றாலும், நட்பு, காதல் குறித்து நற்கருத்து கூறியிருக்கும் நல்அதிகாரம் - 2016" எனலாம்!
---------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
ஒரு ஃப்ரெண்ட், காதலியாகலாம் ஆனால் ஒரு காதலி ஃப்ரெண்டாகி விடக்கூடாது என்ற ஒற்றை வரிக் கதையை யூத்ஃபுல்லாகக் கொடுத்திருக்கிறார் 'கண்ணெதிரே தோன்றினாள்' ரவிச்சந்திரன்.
திருக்குறள் அதிகாரத்தின் தலைப்பையே படத்தின் பெயராக வைத்ததற்காக ஒரு ஷொட்டு!
படத்தில் எல்லோருமே பளிச் முகங்கள். தோழமையுடன் இரண்டு காதல் ஜோடிகள். வீட்டாரின் குழப்பத்தால் முதலாமவனுக்கு இரண்டாமவனின் காதலியை நிச்சயம் செய்துவிட, அதிலிருந்து மீண்டார்களா? காதல் ஜெயித்ததா? நட்பு இணைந்ததா? என்பதுதான் கதை!
ராஜ்பரத், அம்ஜத்கான் இரண்டு ஹீரோக்களுமே பொருத்தம். கோபம், சோகம் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
தேஜஸ்வி, ரேஷ்மிமேனன் இரண்டு நாயகிகளில் முதலாமவர் குத்தாட்டம் அடுத்தவர் குத்துவிளக்கு. முதலாமவர் சிரித்தாலும், இரண்டாமவர் அழுதாலும் பார்க்க நன்றாக இருக்கிறது.
இன்றைய இளசுகளின் அலட்டிக்கொள்ளாத வாழ்க்கை எதற்கும் கவலைப்படாமல் ஊர் சுற்றுதல், நட்பு போன்றவற்றை நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் எப்போதும் தம், தண்ணி என்று இருப்பது ஓவர்.
பாசத்துக்கு எம்.எஸ். பாஸ்கர்.
படத்தின் பலம் குருதேவின் கேமரா. எல்லாக் காட்சியிலும் ஒரு ஃப்ரெஷ்னெஸ்!
'பெண்ணே நீ' பாடல், இசையமைப்பாளர் தீபக் யார் என்று கேட்கவைக்கிறது.
காதலித்தவர்களும் வீட்டாரும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதை எப்பாடுபட்டேனும் புரியவைக்காமல் ஆளாளுக்கு கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு திரிவது செமை போங்கு!
நட்பதிகாரம் - இளமைத் திருவிழா
குமுதம் ரேட்டிங்: ஓகே