தினமலர் விமர்சனம் » இன்னொருவன்
தினமலர் விமர்சனம்
குப்பை பொறுக்கும் பையன் குபேரனாக ஆசைப்படுவதும், அதற்கு விசுவும், விவேகானந்தரும் உறுதுணையாக இருப்பதும்தான் இன்னொருவன் படத்தின் மொத்த கதையும்!
குப்பை பொறுக்கிக் கொண்டு விளையாட்டு பிள்ளையாக திரியும் புதுமுகம் ஆதித்யாவை விவேகானந்தர் பொன்மொழிகளை கூறி லட்சிய பாதைக்கு தள்ளி விடுகிறார் பெரியவர் விசு. நம்பிக்கை வைத்தால் முடியாதது எதுவும் இல்லை எனும் விவேகானந்தர் பொன்மொழியை வேத வாக்காக ஏற்றுக் கொள்ளும் ஆதித்யா, அடையத் துடிக்கும் பேப்பர் மில்லும், ஹீரோயின் மனோஹாவும் அவர் வசம் ஆவது எப்படி? என்பதை சூடாகவும், சுவையாகவும் சொல்லி சபாஷ் வாங்குகிறது இன்னொருவன் டீம்.
புதியவர் ஆதித்யா சில காட்சிகளில் அழகாக தோன்றி, ஆடியும் பாடியும் பல காட்சிகளில் நடித்தும் படத்தையும், நம்மையும் காப்பாற்றி விடுகிறார். ஆனால் காமிராவிற்கு ஏற்ற முகவெட்டிற்கு இன்னும் சற்று உழைக்க வேண்டும் ஆதி! கதாநாயகி மனோஹா பதுமையாக வந்து போகிறார். வில்லன் காதல் தண்டபாணி, அவரது கையாள் மணிவண்ணன், இவர்களைக் காட்டிலும் விசு, விசுவைக் காட்டிலும் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், ஜோதிஷா அண்ட் கோவினர் படத்தை தூக்கி நிறுத்த படாத பாடு பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
பெரிய, பெரிய படங்களிலேயே பெரிய பெரிய குறைகள் இருக்கும்போது, இந்த சின்ன படத்தில் இருக்கும் சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் எஸ்.டி.குணசேகரனின் இயக்கத்தில் இன்னொருவன் - ரொம்ப நல்லவன்!