தினமலர் விமர்சனம் » ஏன் இந்த மவுனம்
தினமலர் விமர்சனம்
சுனாமியால் பெற்றோரையும், சொந்த பந்தங்களால் சொத்துக்களையும் இழக்கும் சினேகா, ஊர் கோயிலில் தங்கி சேவகம் செய்து வருகிறார். அந்த கோவிலுக்கு வரும் சினேகாவின் பூர்வீகம் தெரிந்த பெரிய மனிதர் சரத்பாபு அம்மணியை தன்னோடு அழைத்து போகிறார். அங்கு பல சோதனைகளையெல்லாம் கடந்து சரத்பாபுவின் மகன் விக்ரமாதித்யாவையே கரம் பிடித்து சாதனை நாயகி ஆவதுதான் ஏன் இந்த மவுனம் படத்தின் மொத்த கதையும்.
குடும்ப பாங்கான சினேகா, பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி எனும் போர்வையில் கொடுமை பாங்கை காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக பளிச்சிடுவது சபாஷ் போட வைக்கிறது. அவரை மாதிரியே ஐஸ்வர்யா, சந்தனா, அம்பிகா என சகல நடிகைகளும் தங்களது பங்கை சரியா செய்திருக்கிறார்கள். ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும், ஹீரோ விக்ரமாதித்யா (விசில் பட நாயகர்) கிடைத்த இடத்தில் நடித்திருக்கிறார். பெரிய மனிதராக வரும் சரத்பாபுவும் அப்படியே! பாண்டு, சிவசங்கர் மாஸ்டர், சந்திரா, ஸ்ரீராம் ஆகியோரும் கடிக்காமல் நடித்திருக்கிறார்கள். ஆனால் ரமேஷ் கண்ணா காமெடி எனும் பெயரில் கடித்து கொல்வதை தவிர்த்திருக்கலாம்.
சரத்பாபுவின் மனைவியாக வரும் சந்தனாவை கடைசி வரை வில்லி போன்று காட்டி, கடைசியில் நல்லவராக்கி இருப்பது எதிர்பாரா சபாஷ் சஸ்பென்ஸ்! வைரமுத்துவின் பாடல் வரிகள், பிறைசூடனின் வசனம், கே.எம்.,ராதாகிருஷ்ணனின் இசை, பரணி கே.தரணின் ஒளிப்பதிவு இவை நான்கும் இப்படத்திற்கு பலம். இயக்குனர் நாகபூஷணத்துக்கு கை கொடுத்திருப்பவர்களும் இவர்களே...1
ஏன் இந்த மவுனம் : நல்ல குடும்ப கானம்!