Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

யட்சன்

யட்சன்,Yatchan
24 செப், 2015 - 13:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யட்சன்

தினமலர் விமர்சனம்


இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் இயக்கத்தில் அவரது ஆஸ்தான நாயகர் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பியும், வளரும் இளம் நாயகருமான கிருஷ்ணாவும் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் "யட்சன்".


தூத்துக்குடி பகுதியில் தல அஜித்தின் தீவிர ரசிகராக சின்ன சின்ன ரவுடியிசம், சீட்டாட்டம் என வாழ்க்கையை நகர்த்தும் சின்னா - ஆர்யா., வாங்கிய கடனுக்கு வட்டி கேட்டு வந்த பெரிய ரவுடியின் கையாள், தன் கையில் இருந்த தல பட டிக்கெட்டை கிழித்தெறிந்த காரணத்திற்காக அவனை ஒரே அடியில் சாய்த்துவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.


அதேநேரம் பழநியில் பிரபல பஞ்சாமிர்த கடை நடத்தும் அழகம்பெருமாளின் ஒற்றைவாரிசு கார்த்திகேயன் - கிருஷ்ணா, அப்பாவின் பிசினஸ் பிடிக்காமல் சினிமா நடிகராகும் ஆசையில், காதலி தீபா எனும் ஸ்வாதிரெட்டியின் சப்போர்ட்டில் சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.


சென்னையில், ஆர்யாவுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் ஐக்கியமாகி இருக்கும் சுவேதா எனும் நாயகி தீபா சன்னதியை தீர்த்துகட்ட வேண்டிய அசைன்மெண்ட் தெரிந்தவரான தம்பிராமைய்யா மூலம் தரப்படுகிறது. கிருஷ்ணா தன் காதலி ஸ்வாதி சிபாரிசில், போட்டோகிராபர் லோகு எனும் ஃபைவ்ஸ்டார் கிருஷ்ணகுமார் மூலம், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார். ஆர்யா கொலை செய்யவேண்டிய தேதியும், கிருஷ்ணா ஷூட்டிங் போக வேண்டிய தேதியும் ஒரே நாள். இவர் போகவேண்டிய காரில் ஆர்யாவும், ஆர்யா போகவேண்டிய காரில் கிருஷ்ணாவும் ஏற அந்த ஆள்மாறாட்டத்தால் விளையும் குழப்பமும், கொந்தளிப்பும் தான் யட்சன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!.


ஆர்யா - சின்னாவாக கொஞ்சம் தாடியும் செம்பட்டை தலையுமாக நாயகியை கொல்ல துரத்துவதும் அந்த துரத்தலிலேயே அவர் மீது காதல் கொள்வதும், அஜித் பட டிக்கெட்டை கிழித்தவனை ஓங்கி அடித்து மூர்ச்சை ஆக்குவதிலும் இயக்குநர் சொன்னதை சிறப்பாக செய்திருக்கிறார்.


கிருஷ்ணாவும், கார்த்திக் அலைஸ் கார்த்திகேயனாக ஸ்வாதிரெட்டி கொடுத்த தைரியத்தில் அப்பாவை எதிர்த்து நடிக்க புறப்படுவதும், வந்த இடத்தில் ஆர்யாவுக்கு பதில் தீபா சன்னதியை கொல்ல போய், அவரை காப்பாற்ற துடிப்பதும் அதை தவறாக கருதும் ஸ்வாதிரெட்டியிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் புதுசாக இருக்கிறது. ஆனால், அவரது பாத்திரத்திற்கான வாய்ஸ் (டப்பிங்) விளையாட்டுத்தனமாக இருப்பது பலவீனம்!


தீபா சன்னதி, ஸ்வாதிரெட்டி இருவரில் முன்னவர் பயந்தபடியும், பின்னவர் பாய்ந்தபடியும் நடித்திருப்பது வித்தியாசம். தீபா சன்னதி பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவது ஏற்கனவே சில் படங்களில் பார்த்த விஷயம் என்பதால் சலிப்பு!


வில்லன் அடில் ஹூசைன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், அழகம்பெருமாள், அஜய்ரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சென்ட்ராயன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர்களும் டபுள் ஓ.கே.


ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு, யுவன்சங்கர் ராஜாவின் இசை இரண்டும் யட்சனின் பலம்!


எழுத்தாளர்கள் சுபா - இயக்குநர் விஷ்ணுவர்தனின் எழுத்தில் "ஒரு பெண்ணின் அமானுஷ்ய கனவில், தான் கொலைகாரன் எனும் உண்மை தெரிந்ததால் அவளை தீர்த்துக்கட்ட அந்த சகல வல்லமையும் பொருந்திய, சட்டத்தையே வளைக்கக்கூடிய வில்லன்., சாட்சிகளே இல்லாத அந்த கொலை சங்கதிக்காக, அந்த பெண்ணை தனது ஆள் அம்புகளை அனுப்பி கொல்லத் துரத்துவதும், துடிப்பதும்., ஆள்மாறாட்டமாக தெரியாது கார் மாறி ஏறும் கிருஷ்ணாவின் கையிலேயே வில்லனின் ஆட்கள் தாறுமாறாக கத்தியை கொடுத்து தீபா சன்னதியை கொல்ல வற்புறுத்துவதும், கொலை செய்ய புறப்படும் ஆர்யா - அஜித் படத்தில் கிருஷ்ணாவிற்கு பதில் எந்தவித ஆடிசனும் இல்லாது நடிக்க கமிட் ஆவதும் (அதுவே கிருஷ்ணாவை போட்டோ ஷூட், ஆடிசன்...என அந்தபாடு படுத்தியவர்கள்...) அதன்பின், இவர்களெல்லாம் தீபா சன்னிதி கனவில் கண்ட கொலைக்கு சாட்சியாகி விட்டதாக வில்லன் குரூப் தீபா சன்னதியோடு சேர்த்து இவர்களை தீர்த்து கட்ட துணிவதும் அபத்தமாக இருக்கிறது. "யட்சன் படத்தில் காமெடி போர்ஷன் இல்லாத குறையை இதுமாதிரி சீரியஸ் காமெடிகள் தீர்த்துவைத்தாலும், இதுமாதிரி குறைகளால் யட்சனை ரசிகர்கள் ரட்சிப்பார்களா? என்பது கேள்விக்குறியே.?!


ஆக மொத்தத்தில், விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் "யட்சன் - யதேச்சிகாரன் (சர்வாதிகாரன்) என்றாலும் ஒருவகையில் வெற்றி வேண்டி ரசிகனிடம் யாசகன் தான்!!"


-------------------------------------------------------------------


கல்கி திரைவிமர்சனம்


பொதுவாக ஆள்மாறாட்டக் கதைகளில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருப்பார்கள். இதில் இரு வேறு நபர்களே மாறி இருப்பது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. மின்னல் தாக்கியதால் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் கதாநாயகி தீபாசன்னதிக்கு வருகிறதாம். சரி! வந்ததுதான் வந்தது. முழுமையாக வந்ததா என்றால் அதுவும் கிடையாது. இறப்பார்கள் என்று அவர் கணித்த சிலர், படம் முடியும் போது குத்துக்கல் போன்ற ஜம்மென்று இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் இறக்கிறார். அவரையும் மின்னல் தாங்கியால் சரியாகக் கணிக்க முடியவில்லை. அதை விடுங்கள்... மெயின் கதைக்கு வருவோம்.


ஆர்யாவும், கிருஷ்ணாவும் வண்டி மாறி ஏறிக் கொள்வது பிசிறில்லாமல் காட்டப்படுகிறது. தன்னுடைய ஆதர்ச நாயகன் தல படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததும் தன்னுடைய கடமையைப் புறக்கணித்து, ரூட் மாறுவதை ஆர்யா அருமையாகச் செய்திருக்கிறார். அது சரி.. ஆர்யாவின் கடமை என்னவென்றுதானே கேட்கிறீர்கள்... வேறொன்றுமில்லை பாஸு.. பணம் வாங்கிக் கொண்டு ஆளை காலி செய்வதுதான்.


அமானுஷ்யம், சீரியஸ் கதை, துக்கடா காமெடி என்று ஒன்றுக்கொன்று சரியாக ஒட்டாமல் திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது. டாக்குமென்டரி படங்களில் கேட்டிருப்பீர்களே...


பீகாரில் வௌ்ளம். பிரதமர் பார்வையிட்டார் என்று அதேமாதிரி சாயலுள்ள குரலுடன் ஓட்டேரி ரவியாக நடிப்பவரும், தீபா சன்னதியின் ஒருதலைக் காதல் உறவினரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.


டைட்டிலில் யுவன் ஷங்கர் ராஜாவின் பெயரைப் போடும்போதே கைதட்டல் ஒலிக்கிறது. துறுதுறுவென்று இருக்கும் ஸ்வாதிக்கு இன்னும் அதிகமாக வாய்ப்புத் தந்திருக்கலாம். எழுத்தாளர்கள் சுபாவின் கதையைப் படிக்கும் போதிருந்த சுவாரசியம் படம் பார்க்கும்போது இல்லை.


யட்சன் - சராசரி மனுஷன்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in