சுப்ரீம் படத்தில் அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்த சாய் தரண் தேஜ் இம்முறை காமெடி ஹீரோவாக நடிக்க முயற்சித்திருகிறார். சாய் தரணின் முயற்சி எந்த அளவிற்கு பலித்துள்ளது என பார்க்கலாம்.
தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஆதித்யா(சாய் தரண் தேஜ்) நாயகியான அஞ்சலியை(லரிஷா) உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஆனால் ஆதித்யா காதலில் சின்சியராக இல்லை என நினைக்கும் அஞ்சலி உறவை முறித்துக்கொள்ள நினைக்கிறார். அவர்களுக்கு இடையே உருவாகும் சிறு சண்டை அவர்களை நிரந்தரமாக பிரித்து விடுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருக்கும் ஆதித்யா, நண்பர்களுடன் பிரேக்-அப் பார்ட்டியில் கலந்து கொள்கிறார். அந்த ப்ரேக்-அப் பார்ட்டி ஆதித்யாவின் வாழ்வை மேலும் சிக்கலாக்கி விடுகிறது. பார்ட்டியில் குடி போதையில் ஆதித்யா மற்றும் நண்பர்களும் சில நபர்களுடன் தகராறு ஏற்படுகிறது. விளைவு அருகிலிருக்கும் பெட்ரோல் பங்க் தீபிடிக்க மேலும் விபரீதம் நிகழ்கிறது. குழப்பங்களிலிருந்து ஆதித்யா மீண்டாரா, அஞ்சலியுடன் இணைந்தாரா என ரசிகர்களையும் குழப்பி பதில் சொல்கிறது படத்தின் இரண்டாம் பாதி.
சாய் தரண் தேஜ் ஆதித்யாவாக முழு படத்தையும் கரைசேர்க்க பெரும் முயற்சி செய்திருக்கிறார். காதலில் குதூகலமாக காணப்படும் போதும், காதல் முறிவிற்கு பின்னர் சோகமுகத்துடனும், பார்டியில் குடித்துவிட்டு ரகளை செய்வதிலும், பின்னர் குழம்பி தவிப்பதிலும் சாய் தரண் தேஜ் பக்காவக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். குடிபோதையில் ஏற்படும் ரகளைக்கு திரையரங்கில் சிரிப்பொலி நிறைகிறது. நகைச்சுவை நடிகர் சத்யாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை வசனங்கள் மட்டுமல்லாது அவற்றுக்கு ஏற்ப பாவனைகளை வெளிப்படுத்தியும் சத்யா சிரிக்க வைக்கிறார். அழகாக வந்து போகும் நாயகி லரிஷாவிற்கு படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. ஏகபட்ட கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுனில் ரெட்டி, அவர்களை சரியாக கையாளவில்லை.
முதல் பத்து நிமிடங்களை தவிர படத்தில் எதுவும் சொல்லும்படி இல்லை. அடுத்தடுத்து வரும் இரண்டு பாடல்கள் பொறுமையை மேலும் சோதிக்கிறது. டிரைலரில் வித்தியாசம் காட்டிய இயக்குனர் சுனில், அதை முழுவதுமாக திரையில் காட்ட தவறிவிட்டார். சிறிய வேடத்தில் வந்து போகும் மற்றொரு நாயகி மன்னாரா சோப்ரா படத்திற்கு அவசியம் தானா என கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.
பின்னணி இசையில் சுமாராக வாசித்துள்ள இசையமைப்பாளர் தமன், இரண்டு பாடல்களுக்கு மட்டும் சூப்பராக வாசித்துள்ளார். படத்தில் ஒளிப்பதிவு மற்றும் வசனங்களை சுமார் ரகமே. குழப்பமான சூழ்நிலையில் நகைச்சுவை உருவாக்க நினைத்த இயக்குனர் சுனில், நகைச்சுவை பிரமாதப்படுத்தியிருப்பினும் அவரே குழம்பிவிட்டது திரைக்கதையில் தெளிவாக தெரிவது பலவீனம். மொத்ததில் சாய் தரண் தேஜின் நகைச்சுவை நாயகன் முயற்சி பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.