குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹா கதாநாயகராக அறிமுகமாகியிருக்கும் படம் தான் "என்னுள் ஆயிரம்.
அசோக் எனும் நாயகன் மஹாவின். கள்ளக்காதலுக்கும் , நல்ல காதலுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் என்னுள் ஆயிரம் படம் மொத்தமும் ... எனமுதல் பாதியை பார்த்து முடிவு செய்தோமென்றால் அது தவறு ... அதையும் தாண்டி இரண்டாம் பாதியில் நாயகனின் இழப்புகள், பாவமன்னிப்பு பரிதவிப்புகள் , அம்மா சென்டிமெண்ட் , கொலை குற்றம் ,போலீஸ் என்கவுண்ட்டர்.. எக்ஸட்ரா, எக்ஸட்ரா என ஏகப்பட்ட விஷயங்கள் ... படம் முழுக்க இழு ...க்கிறது . இருக்கிறது.
நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்க்கும் நாயகருக்கு ஒரு மழை நாளில் பிழை செய்ய ஏதுவாக ஒரு மாற்றான் தோட்டத்துமல்லிகை கிடைக்கிறார். அவரை பிரித்து மேய்ந்த அதே தருணத்தில் அழகிய காதலி ஒருவரும் கிடைக்கிறார். கடவுள் தன் விஷயத்தில் கொடை வள்ளலாக நடந்து கொள்வதாக மகிழும் ஹீரோவிற்கு அந்த மகிழ்ச்சி ஒரே இடத்தில் வசிக்கும் கள்ளக் காதலியாலும் , நல்லக் காதலி யாலும் நிலைத்ததா ?இல்லையா ..? என்னும் கதையுடன் ரசிகன் எதிர்பார்க்காத விதத்தில் அதையும் தாண்டி ., இரண்டாம் பாதியில், நாயகனின் ப்ளாஷ்பேக் அம்மா சென்டிமெண்ட் , படிக்காத நாயகன் நட்சத்திர ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த விதம் ,நாயகன் அறிந்தும் அறியாமலும் செய்த , செய்யும் கொலைகள், பாவமன்னிப்பு பரிதவிப்புகள் , தெரிந்தும் தெரியாமலும் போலீஸுடனான தேவையே இல்லாத மோதல் , அதைத் தொடர்ந்து ஆவேசமடையும் போலீஸின் போலி என்கவுண்ட்டர்.. உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை கலந்து கட்டி "என்னுள் ஆயிரம் படத்தினை தேவைக்கு அதிகமான மசாலாவை சேர்த்து செய்த சேட்டு கடை சமோசா (தக்காளி சாஸ் இல்லை என்றால் சாப்பிடவே முடியாது ...)மாதிரி உப்பலாக படைத்திருக்கின்றனர் பாவம்! அதுவும் பின்பாதி ரொம்பவும் உப்பல்.. ஊத்தல்!
நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்க்கும் அசோக்காக - மஹா கச்சிதம். காதல் , கள்ளக் காதல் காட்சிகளிலும் இயல்பாய் நடித்து ரசிகனின் இதயம் ஈர்க்கிறார். ஆனால் , அந்த சோகமூஞ்சும் ,முட்டை முழியும் அடுத்தடுத்து செய்யும் சாகசங்கள் நம்ப முடியவில்லை. அடுத்தடுத்த படங்களிலாவது நம்பும்படி செய்து மஹாமேலும் ரசிகர்களை ஈர்த்தால் சரி!
காதலி சுஹாசினியாக மெரீனா மைக்கேல் செம துறு, துறு ...
கள்ளக் காதலி ஆர்த்தியாக ஸ்ருதி யுகல் செம குறு குறு ... விறு விறு. இரலும் ரசிகனுக்கு செம கிளு கிளுப்பு !
சிவாஜி ,வின்சென்ட் அசோகன் , ரவிராஜ் கிருஷ்ணா , சூது கவ்வும் சிவக்குமார், டெலிபோன்ராஜ் ,அன்னா கேத்ரீனா உள்ளிட்ட பிற பாத்திரங்களும் பிரமாதம்.
அதிசயராஜ் ஒளிப்பதிவு அட்டகாச பதிவு . தள்ளு தள்ளு புல்லு தள்ளு... , அடடா அடடா ..." , காதல் கொல்லுதடி பெண்ணே .. " உள்ளிட்ட பாடல்கள் கோபி சுந்தரின் இசையில் மீண்டும் மீண்டும் கேட்கலாம். குக்கூ சண்முகம் வேலுச்சாமியின் படத்தொகுப்பு முன் பாதியில் பாராட்டப் பட வேண்டிய தொகுப்பு ! பின் பாதியில் பாடாவதி தொகுப்பு !
தான் சமையல் , சாப்பாடு சம்பந்தப்பட்ட பாத்திரங்களில் நடித்த படங்கள் எல்லாம் ஹிட்... என்பதாலோ என்னவோ., இப்படத் தயாரிப்பாளரும் , நாயகர் மஹாவின் அப்பாவாவுமான டெல்லி கணேஷ் ., மகனுக்காக இப்படக் கதையை சென்டிமெண்ட்டாய் தேர்வு செய்திருப்பார் போலும்.... ஆனால் , படத்தில் என்னதான் ஹீரோ ஹோட்டல் தொழிலாளி என்றாலும் வயிற்று பசி ஆற்றுவதை விட சுமார் இரண்டு மணி நேரம் இருபது நிமிட படத்தில் அதிகம் காம பசிக்கே உணவிடுகிறது இப்படக் கதையும் காட்சியமைப்புகளும்! ரசிகனும் ஆர்ப்பரித்து அதையே விரும்புகின்றான் என்பது இப்படத்திற்கு பெரும் பலம்! ஆனால் அது முன்பாதியில் ஓவர் டோஸா கவும் , பின்பாதியில் அவ்வளவாய் இல்லாமல் இருப்பதும் பலவீனம்.
மேலும் தற்கால தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்ப கள்ளக் காதலி இறந்ததும் அந்நாயகி பேய் , பிசாசாகி ஹீரோவுடன் காதல் டூயட் பாடுவார் என எதிர் பார்த்தால் .அவ்வாறு இல்லாது கதைவேறு வேறு டிராக்கில் பிரயாணிப்பது கொஞ்சம் ஹாஸ்யம்...!
பிரபல இயக்குனர் ஏ.எல் .விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமாரின் எழுத்து , இயக்கத்தில் ., தான் வேலை பார்க்கும் ஹோட்டல் ஸ்டோர் ரூமில் இருந்து ஜாலிக்காக பீர் திருடும் ஹீரோ .,அதை செக்கிங்கில் கண்டு பிடிக்கும் செக்யூரிட்டிக்கு ஒரு பாக்கெட் கிங்ஸ் சிகரெட் தருவது லாஜிக்காக இடிக்கிறது .... இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலை தான் இருக்கும் ...ஹீ....ஹீ...!
மேலும் ., ஹீரோ தன் அறையை சுற்றி போலீஸ் ரவுண்டு கட்டி நிற்பது தெரிந்திருந்தும் ., நேராக காதலியை கைப்பிடிக்க செல்லாமல், தன் உருவத்திற்கும் , உயரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் போலீஸை அடித்து விட்டு ஓடுவதும், பின் போலீஸ் அவரை காதலியுடன் சேரவிடாமல் சுட்டுக் கொள்வதும் வலிய திணிக்கப்பட்ட வம்படி, டிராஜிடி ...காட்சிகளாகவே தெரிவது பலவீனம்.
மற்றபடி ., என்னுள் ஆயிரம் படத்தை சீனியர் டெல்லியின் வாரிசுக்காக ஒருமுறையாவது., எல்லோரும் ரசிக்கலாம். பார்க்கலாம் ... என சொல்லலாம்( தப்பில்லை ..) !