பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரம்மோற்சவம் படத்தின் அத்தனை எதிர்பார்பிற்கும் ஒரே காரணம் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தான். பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
மிக சாதாரண கதைதான், சத்யராஜின் கூட்டு குடும்பம் தான் கதைக்களம். ராவ் ரமேஷும் இந்த குடும்ப உறுப்பினரே. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் ராவ் ரமேஷிற்கு மட்டும் மனதில் சிறு உறுத்தல். தான் எல்லாவற்றிற்கும் சத்யராஜை சார்ந்து இருப்பதாக எண்ணுகிறார் மேலும் தான் முக்கிய நபராக மாற தன் மகள் ப்ரணிதாவை, சத்யராஜின் மகன் மகேஷ்பாபுவிற்கு மணம் முடிக்க நினைக்கிறார்.
இந்த நிலையில் தான் மகேஷ் பாபு, காஜல் அகர்வாலை காதலிக்கிறார் என்கிற உண்மை தெரிய வருகிறது. கொத்திதெழுகிறார் ராவ் ரமேஷ். இதை தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதை எப்படி மகேஷ் பாபு கையாண்டார். இதில் சமந்தாவின் காதாபாத்திரம் என்ன என்பதை அழகான செண்டிமெண்ட் டிராமாவாக கொடுத்திருக்கார்கள்.
படத்தின் மிகபெரும் பலம் நட்சத்திர பட்டாளமும், அதில் மகேஷ் பாபு தனியாக தெரிவதும் தான். அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் ரசிகர்களை மெஸ்மரிசம் செய்கிறார். ராவ் ரமேஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார், நடை உடை பாவனை என அத்தனையும் கட்சிதம்.
சத்யாரஜ் மற்றும் மகேஷ் பாபுவிற்கு இடையேயான காட்சிகள் அருமை. படத்தில் செண்டிமென்ட் காட்சிகளுக்கு பஞ்சமே கிடையாது. அதே நேரத்தில் அப்படி இடம் பெரும் காட்சிகள் ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. முதல்பாதி படம் அழகாக ரசிக வைத்து நகர்கிறது. படத்தின் பிரச்சனை என்று பார்த்தால் அடுத்து இது தான் வரும் என்று ரசிகர்காளால் யூகிக்க முடிந்த திரைக்கதை. இது பழக்கப்பட்ட கதை தான் என்பதால் அதை தவிற்க முடியவில்லை.
மேலும் படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை இரண்டாம் பாதியில் தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் சில நிமிடங்களேனும் திரைக்கதை தள்ளாடுகிறது. அதை சற்றே கவனித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மிக்கி ஜெ.மேயரின் இசையும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மொத்தமாக இயக்குனர் ஒரு முழு குடும்ப பொழுது போக்கு சித்திரமாக பிரம்மோற்சவம் படத்தைக் கொடுத்துள்ளார்
பிரம்மோற்சவம் - உணர்வுகளின் பின்னல்