பங்கிஸ்தான் நாட்டின் பெயருடன் படத்தின் முதல் காட்சி துவங்குகிறது. பங்கிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் இந்துக்களும், வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களும் வாழ்ந்து வந்தனர். இவ்விரு பகுதிகளுக்கும் இடையே அடிக்கடி யுத்தம் நடைபெற்று வந்தது. கால் சென்டர் பணியாளர் ஹபீஜ் பின் அலி (ரித்தேஷ் தேஷ்முக்), தன் பணியிடத்தில் மதரீதியாக அவமதிக்கப்பட்டதையடுத்து, அந்த வேலையை, ஹபீஜ் ராஜினாமா செய்கிறார். பின் அவரது மத தலைவர் அல் காம் தமாமை சந்திக்கும் ஹபீஜ், அவரால் மூளைச்சலவை செய்யப்பட்டு, தற்கொலைப்படை பயங்கரவாதியாக மாற்றப்படுகிறார். பின் இந்துவேடம் தரித்து, தன் பெயரை ஈஸ்வர்சந்த் சர்மா என்று மாற்றிக்கொண்டு, விரைவில் நடைபெற உள்ள அமைதி மாநாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மற்றொரு பக்கம், பிரவீன் சதுர்வேதி (புல்கிட் சாம்ராட்), இதே காரணத்திற்காகவே, முஸ்லீம் வேடம் தரித்து தன் பெயரை அல்லா ரஹ்ஹா கான் என்று பெயரை மாற்றிக்கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார். இவ்விரு பயங்கரவாதிகளின் எண்ணம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை, கரு, களம் எல்லாம்....
படத்தை இயக்கியுள்ள கரன் அன்சுமன், நடிகர், நடிகைகளிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொணர தவறிவிட்டார். படத்தின் பாடல்கள் மற்றும் இசை டிராக் படத்தோடு ஒட்டாமல், அதன் போக்கில் செல்வது படம் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைக்கிறது. படத்தின் பெரும்பகுதி போலந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டின் கொள்ளை அழகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதற்காக ஒளிப்பதிவாளர் ஜைமோன் லென்கோவ்ஸ்கிக்கு ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்...
இப்படத்தில், ரித்தேஷ் தேஷ்முக் நடித்தாரா என்று படம் பார்த்த அனைவரும் கேட்கும் அளவிற்கு உள்ளது அவரின் நடிப்பு. புல்கிட் சாம்ராட், சல்மான் கான் மேனரிசத்தை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று நம்மை எரிச்சலடைய செய்வது தான் மிச்சம். ஜாக்குலின் பெர்னான்டஸின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 15 நிமிஷம் வந்து போகிறார் அவ்வளவு தான்...
பொழுதுபோக்க எதுவும் கிடைக்காதபட்சத்தில், இப்படத்தை பார்க்கலாம். ஆனால் படம் பார்த்துவிட்டு எங்களை குற்றம் சொன்னால் பிச்சு...பிச்சு...
ரேட்டிங் : 2/5