தினமலர் விமர்சனம் » ஆறுபடை
தினமலர் விமர்சனம்
அனாதை ஆசிரமம், சிறுவர் காப்பகம் போன்றவற்றை நடத்தி சமூக சேவை செய்வதாக காட்டிக் கொள்ளும் ஊர் பெரிய மனிதர் அங்கு வளரும் சிறுமிகளை கற்பழித்து, கொடூர கொலைகளையும் செய்கிறார். அவர்தான் அப்படி என்றால்... அவரது ஒரே வாரிசான மகனும் மாடலிங் ஸ்டூடியோ நடத்துவதாக கூறிக் கொண்டு, அங்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் நிர்வாண படம் எடுத்து, அவர்களிடம் அத்துமீறுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார். அந்த அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த ஆண்கள் சிலர் இந்த உண்மைகளை கண்டுபிடித்து அப்பனை பழிவாங்க பிள்ளையை போட்டுத் தள்ள களம் இறங்குகின்றனர். ஆனால் அவர்களது எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டு, பெரிய மனிதரின் பிள்ளையை காபந்து செய்யும் ஆறுபடை பட நாயகர் குருவே ஒரு கட்டத்தில் பெரிய மனிதரின் வாரிசை போட்டுத் தள்ளுகிறார். அது ஏன்? என்பதும், பெரிய மனிதர் குருவை பழி தீர்த்தாரா? என்பதும் ஆறுபடையின் சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்!
நாயகன் குருவாக புதுமுகம் குருவே நடித்திருக்கிறார். பழகிய முகம் இல்லை என்றாலும் நடிக்கத் தெரிந்த புதுமுகம்! புதுமுக நாயகி ஆஷாவும் பேஷா நடித்திருக்கிறார். மலேசிய நடிகை சாரா, ஒத்தப்பாட்டுக்கு குத்து டான்ஸ் போட்டிருக்கும் வாள மீனு மாளவிகா, லக்ஷா என நடிகைகள் அனைவரும் நம் கவனத்தை கவருகிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரியாக வரும் தென்னவனைத் தவிர கஞ்சா கருப்பு, மயில்சாமி, முத்துக்காளை, பெஞ்சமின், கொட்டாச்சி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் காமெடி எனும் போர்வையில் கடித்து... குதறி... கடுப்பேற்றுகின்றனர்.
குரு - ஆஷா ஜோடியின் காதல் காட்சிகளும், ஊர் பெரிய மனிதர் மற்றும் அவரது வாரிசின் வில்லத்தனங்களும் பல படங்களில் பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகள் என்பதால் சுத்த போர். அவற்றை எடிட்டர் சுரேஷ்ராஜன் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். புதியவர் ஆழ்வார்ஸ்ரீயின் இசையில் பாடல்கள் இனிமை! பின்னணி இசை பழமை! வில்லாளனின் ஒளிப்பதிவில் வித்தியாசமாக எதுவுமில்லை.
கே.பி.சர்வ தீர்த்தவனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆறுபடை படத்தில் கதையிலும், திரைக்கதையிலும் இருக்கும் புதுமைகூட வசனத்திலும், இயக்கத்திலும் இல்லாதது கொடுமை!
ஆறுபடை : சினிமாவின் புறநானூற்று அகநானூற்று காலத்து பழைய படை.