இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த வருடம் ஏற்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கும் தற்போது வரை தொடர்ந்து உதவி செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். அவரைப் போல களத்தில் இறங்கி வேறு எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனு சூட்டிடம் உதவி கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருகிறதாம். அது குறித்து டுவிட்டர் தளத்தில், “நேற்று மட்டும் 41,660 வேண்டுகோள்கள் வந்தது. ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், அது முடியாத ஒன்று. ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அதற்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் ஆகும், அதாவது 2035ல் தான் தொடர்பு கொள்ள முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பல பிரபலங்களுக்கும் கூட தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் சோனு சூட். அவர் களத்தில் இறங்கி உதவி செய்வதைப் பார்த்தும் கூட அவரை விட பல கோடி ரூபாய் அதிக சம்பளம் வாங்கும் சில நடிகர்கள் எந்த உதவியையும் செய்ய முன்வராமல் இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.