தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிக்க போராடி வருகிறவர்களில் ஒருவர் ஜோதிஷா. நலம்தானா உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இசை ஆல்பங்களில் நடித்தார். சில படங்களில் 2வது நாயகியாக நடித்தார். இப்போது மீண்டும் புறாக்கூண்டு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சார்லஸ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜி எக்ஸ்போர்ட், ஜி கிரியட்டிவ் நிறுவனத்தின் சார்பில் குளோரியா பெர்னாட், சிமோக்ஷன் தயாரிக்கிறார்கள், நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். தீபக் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இதயதீபன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது அடிதட்டு மக்களின் காதலை சொல்லும் படம். பணக்கார பெண்கள் யாரும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதில்லை. நடுத்தர குடும்பத்து பெண்களும், அடித்தட்டு குடும்பத்து பெண்களும் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஏன் என்பது தான் படத்தின் கரு. காதல் என்றாலே பிரச்னைகளை சந்திக்கும் குடும்பங்கள், ஒரு தற்கொலையால் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கும் என்பதை யதார்த்தமாக சொல்கிற படம். என்றார்.