குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
பார்த்ததும் 'ஹாய்' சொல்ல தோன்றும் வசீகர முகம். பேசி பேசி சிரிக்க வைக்கும் கலகல பேச்சு. எந்த கேரக்டருக்கும் பொருந்தக்கூடிய தோற்றம் என நாடகம், குறும்படம், சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வலம் வருபவர் சவுந்தர்யா. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.
''நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான். சின்ன வயசில் இருந்தே நடிப்பு மேலே ஒரு ஈர்ப்பு இருந்தது. நான், அப்பா மகேஷ்பாபு எல்லாம் அப்பவே குடும்பத்தினர், சொந்தக்காரங்ககிட்ட நடித்து காட்டுவோம். அதைதான் இப்போ 'ரீல்ஸ்'னு சொல்றாங்க. கல்லுாரி படிக்கும்போது கலை விழாவில் என் நடிப்பை பார்த்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த 'பாம்பே' ஞானம், 'நீ நல்லா நடிக்கிறீயே. நாடகத்தில் ஏன் நடிக்கக்கூடாது' எனக்கேட்டார். எனக்கு அது உத்வேகத்தை தந்தது. அவரது குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இந்த குழுவுக்கு என்ன சிறப்புனா, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிப்பார்கள். நானே 3 கேரக்டர் வரை நடித்தேன்.
இதற்கிடையே காதல் திருமணம் நடந்தது. கணவர் சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ.,வாக உள்ளார். என் ரசிகராக இருந்து நாடகங்களை பார்த்து திருமணம் செய்து கொண்டவர். இரு மகன்கள் உள்ளனர்.
கணவர் வேலை விஷயமாக சில ஆண்டுகள் புனேவிற்கு செல்ல நேரிட்டது. குடும்பத்திற்காக அங்கு நேரத்தை செலவிட்டேன். ஒரு கட்டத்தில் மீண்டும் நடிப்பின் மீது ஆசை துளிர்விட்டது. 2017ல் மேயாத மான் படத்திற்கான ஆடிஷன் நடந்தது. நடித்து காட்டினேன். செலக்ட் செய்தார்கள். அடுத்தடுத்த வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த நேரத்தில் கொரோனா வந்தது. சினிமா தொழிலே முடங்கி இருந்ததால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சமூகவலைதளங்கள் மூலம் மக்களிடம் நல்லா 'ரீச்' ஆகி எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. கோமாளி, ஜெயில், வெந்து தணிந்தது காடு, மாவீரன், லவ் டுடே, வேட்டையன் வரை நடித்து விட்டேன். ஒரே மாதிரியான கேரக்டர் வந்தால் தவிர்த்து விடுகிறேன். சின்ன சின்ன கேரக்டர் என்றாலும், கதைக்கு ஏற்ற கேரக்டரா என பார்த்து 'ஒ.கே.' சொல்லி வருகிறேன். இப்போ சில படங்கள் ஷூட்டிங் போயிட்டு இருக்கு.
சில கேரக்டர் எல்லாம் வேண்டாம் என நான் தயங்கிபோது, கணவர் சரவணன் 'நல்ல கதை போல் தெரிகிறது' என்பார். அப்படி நான் யோசித்து பிறகு 'கமிட்' ஆன படம்தான் ராயன். அந்த படம் எனக்கு நல்ல பேரை வாங்கிக்கொடுத்தது. அம்மா, அக்கா, அத்தை, மனைவி என எந்த கேரக்டர் என்றாலும் எனக்கு 'செட்' ஆகிடும்.
நான் ஒரு யோகா மாஸ்டரும் கூட. 10 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன். சினிமாவில் 'பிஸி'யாக இருப்பதால் மாஸ்டராக இருந்து மற்றவர்களுக்கு சொல்லித்தர முடியவில்லை. அதேசமயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் யோகா செய்ய தவறுவதில்லை. என் இளமைக்கு அது ஒரு காரணம். யோகாவில் இப்போ பிஎச்.டி., பண்ணிட்டு இருக்கிறேன். தவிர ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறேன்'' என ஆச்சரியப்பட வைக்கிறார் சவுந்தர்யா.