Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பன்முக திறமையாளர், ‛நய்யாண்டி' அரசியல் நாயகன் சோ ராமசாமியின் பிறந்த தினம் இன்று....!

05 அக், 2023 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Multi-talented,-Satire-political-hero-Cho-Ramasamy-Birthday-today

நடிகர், நாடக கதாசிரியர், வக்கீல், பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், திரைக்கதாசிரியர் என்று பல்துறை வல்லுநராக வாழ்ந்து காட்டிய சோ ராமசாமி, கலை மற்றும் அரசியல் உலகின் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையன்று. பல துறைகளிலும் தடம் பதித்து நிபுணத்துவம் பெற்றவரும், "அரசியல் நய்யாண்டி"யின் ஆணி வேருமான நடிகர் சோவின் 89வது பிறந்த தினம் இன்று... கலை, அரசியல் உலகின் சகாப்தமான ‛சோ' ராமசாமியின் நினைவலைகளை பார்க்கலாம்...

1934 அக்., 15ல் சென்னையில் பிறந்தார். பெற்றோர் சீனிவாசன் - ராஜலட்சுமி. பி.எஸ்.சி., பி.எல்., படித்துள்ளார். வக்கீலாக தொழிலைத் தொடங்கினார். 1957 - 1962 வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். திறமையான வழக்கறிஞராக பணிபுரிந்தார். டி.டி.கிருஷ்ணமாச்சாரி கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர். 1966ல் திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

"கல்யாணி" என்ற மேடை நாடகத்தின் மூலம் நாடக நடிகராகவும் அறியப்பட்டார். பகீரதன் என்பவர் எழுதிய "தேன் மொழியாள்" என்ற நாடகத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சோ'. பின்னாளில் அதுவே அவரது பெயராக நிலைத்தது.

"பெற்றால்தான் பிள்ளையா" என்ற மேடை நாடகத்தில் கார் மெக்கானிக்காக நடித்திருந்தார் சோ. அதே நாடகம் "பார் மகளே பார்" என்ற பெயரில் திரைப்படமாக வந்தபோதும் அதே கார் மெக்கானிக்காக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து "மறக்க முடியுமா", "தேன்மழை", "நினைவில் நின்றவள்", "மனம் ஒரு குரங்கு", "கலாட்டா கல்யாணம்", "பொம்மலாட்டம்" என ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

மற்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பையும், உடல் மொழியையும், வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தினார் சோ. அரசியல் கிண்டல், நய்யாண்டியோடு வந்த இவரது படங்களின் நகைச்சுவை, ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர்களையும் கவர்ந்தது.

சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார். சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கும் நேரம், இறைவன் இறந்துவிட்டானா, உண்மையே உன் விலை என்ன, மெட்ராஸ் பை நைட் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி தயாரித்துள்ளார்.

14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். 10 நாவல்களை எழுதியுள்ளார். மகாபாரதத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். ராமாயணத்துக்கும் அவர் விளக்கம் எழுதினார். விவேகா நுண்கலை என்ற 40 பேர் குழுவை வழிநடத்தினார். 20 நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். 27 டிவி தொடர்களுக்கு எழுதி, நடித்து சின்னத்திரையிலும் தனி முத்திரை பதித்தார் சோ.

1970ல் "துக்ளக்" என்ற பெயரில் வார இதழ் ஒன்றை துவங்கி, பத்திரிகை துறையில் தடம் பதித்தார். அரசியல் தலைவர்களை தனக்கே உரித்தான நய்யாண்டியோடு விமர்சனம் செய்தார். உண்மை என தோன்றியதையும் எழுதத் தயங்கவில்லை அவரது பேனா.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெயலலிதா, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் 200 படங்கள் நடித்துள்ளார். "முகமது பின் துக்ளக்", "உண்மையே உன் விலை என்ன?", "மிஸ்டர் சம்பத்", "யாருக்கும் வெட்கமில்லை" ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான இவர் அவருக்கு அரசியல் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். எந்த அரசியல் கட்சையும் சாராதவராக இருந்த இவர் பா. ஜ.க., தலைவர்களிம் மட்டும் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1999 முதல் 2005 வரை பொறுப்பு வகித்தார் சோ. "ஹால்டி காட்டி விருது", "வீர கேசரி" விருது, "கொயாங்கா விருது", "நச்சிக்கேதஸ் விருது" போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

2016ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டசோ, சிகிச்சை பலனின்றி 82வது வயதில் காலமானார். சோ மரணிப்பதற்கு இரு நாள் முன்னர் தான், ஜெயலலிதா அதே அப்பல்லோ மருத்துவமனையில் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோவின் மரணத்திற்குப் பின் 2017ல் "பத்மபூஷண் விருது" வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

சோவின் அரசியல் நய்யாண்டியை எதிர்பார்த்த அரசியல் தலைவர்கள் ஏராளம் என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛மார்கழி திங்கள்' அக்.,20ல் ரிலீஸ்‛மார்கழி திங்கள்' அக்.,20ல் ரிலீஸ் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் நடிக்கும் ரியாஸ் கான் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in