தமிழ் சினிமாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டைட்டில் பஞ்சம் நிலவுகிறது. ஒரே டைட்டிலுக்கு பலர் உரிமை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் பழைய படங்களின் டைட்டில்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டைட்டில் என்கிற பெயரிலேயே ஒரு படம் தயாராகியுள்ளது.
டிபிகே இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் டில்லிபாபு தயாரிக்கும் படத்திற்கு டைட்டில் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். விஜித் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர மைம் கோபி, மாரிமுத்து, ரோபோ சங்கர், மதுமிதா, பிளாக் பாண்டி, ரேகா, கூல் சுரேஷ் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம்.தங்க பாண்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், அனல் ஆகாஷ் இசை அமைத்திருக்கிறார்.
புதுமுகம் ரகோத் விஜய் இயக்கி இருக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, கொடுக்கும் கும்பலுக்கும், விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள்தான் படம். இது விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது. படத்தை டிசம்பர் மாதம் திரையிட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடக்கிறது. என்றார்.