கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன் நடிப்பில் அஞ்சாம் பாதிரா என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கிய இந்தப்படம் தொடர் கொலைகளை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனையும், ஒரு கிரிமினாலஜிஸ்ட்டான குஞ்சாக்கோ போபன் எப்படி இந்த கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றிய திரில்லர் படமாக உருவாகி இருந்ததால் இந்தப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்தப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதன் இந்தி ரீமேக் உரிமையை ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் தற்போது இந்தபடம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடியுள்ள படக்குழுவினர், அஞ்சாம் பாதிராவின் அடுத்த பாகமாக ஆறாம் பாதிரா படம் உருவாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே நடந்த கதையின் தொடர்ச்சியாக அல்லாமல், புதிய கொலை, புதிய வழக்கு என ஆறாம் பாதிரா படம் உருவாக இருக்கிறதாம். கிரிமினாலஜிஸ்ட்டான குஞ்சாக்கோ போபன் இதிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்