தினமலர் விமர்சனம் » கும்கி
தினமலர் விமர்சனம்
தன் எஜமானுக்கு காதல் மதம் பிடித்ததால், தன் உயிரை தியாகம் செய்து அவனையும், அவனது காதலையும் காப்பாற்றும் யானையின் கதைதான் "கும்கி" மொத்தமும்!
கதைப்படி, மூன்று மாநில மலை கிராம மக்களின் வாழ்க்கையையும், அவர்களது விளைநிலங்களையும் அடிக்கடி அடித்து துவம்சம் செய்யும் ஒற்றைகாட்டு யானை கொம்பனால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு கிராமத்து மலைவாழ் மக்கள், கொம்பனை "கும்கி" யானையை வைத்து தீர்த்து கட்ட திட்டமிடுகின்றனர்.
அதன்படி, காட்டு யானையை விரட்டி அடிக்கும் பயிற்சி பெற்ற "கும்கி" யானைக்காக அந்த கிராமமே பணம் திரட்டி அதை யானை முதலாளியிடம் கொடுக்கிறது. அவரும் "கும்கி" யானையை அனுப்பி வைப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிவிடுகிறார். ஆனால் சொன்னநாளில் "கும்கி" யானை பாகனின் குடும்ப சூழலால் யானை அந்த கிராமத்திற்கு போகமுடியாத நிலை. அதற்குபதிலாக விக்ரம் பிரபு, அவரது தாய்மாமன் தம்பிராமையா, "உண்டியல் அஸ்வின் ஆகியோர் அந்த கிராமத்திற்கு தங்கள் யானையுடன் போகின்றனர்.
ஒரு இரண்டு நாளைக்கு "கும்கி" யானை வரும் வரை ஒரு ஷோவிற்கு அந்த கிராமத்திற்கு போகும் விக்ரம் பிரபு, ஊர் தலைவரின் மகளான லஷ்மி மேனன் மீது கொண்ட காதலால் அந்த ஊரிலேயே டேரா போட திட்டமிடுகிறார். அவரது திட்டத்திற்கும், கொட்டத்திற்கும் சகோதரனாய் பழகிய யானையும், பக்க பலமாய் வாழும் தாய்மாமன், உடன் இருக்கும் நண்பனும் என்ன ஆகிறார்கள்...? என்பது க்ளைமாக்ஸ்!
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், இளைய திலகம் பிரபுவின் புதல்வன் என எக்கச்சக்க அடையாளங்களுடன் களம் இறங்கியுள்ள விக்ரம்பிரபு, யானை பொம்மனாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். யானையின் தந்தத்தின் மீது ஏறியபடி அவர் உடற்பயிற்சி செய்யும் போதும், கோயில் திருவிழா யானையை கும்கி யானையாக்க அவர்படும் பாடும் பிரம்ப்பை ஏற்படுத்துகின்றது. லஷ்மி மேனனுடன் அவர் பண்ணும் ரொமான்ஸூம் பிரமாதமப்பு! ஆனால் இவையே திரும்ப திரும்ப என்பது தான் சற்றே சலிப்பு!
"சுந்தரபாண்டியன்" லஷ்மி மேனன் இனி, "கும்கி" லஷ்மி மேனன் ஆவது நிச்சயம்! படத்திற்கு அம்மணியின் பார்வை கவர்ச்சியே பெரும்பலம்! வள்ளியாகவே வாழ்ந்திருக்கிறார் அம்மணி!
தம்பிராமையாவின் சரவெடி காமெடியும், அவருக்கு அடிக்கடி கவுண்ட்டர் கொடுக்கும் உண்டியல் அஸ்வினும் தியேட்டரில் அடிக்கடி சிரிப்பலையை ஏற்படுத்துகின்றனர். லஷ்மியின் அப்பா மாத்தைய்யனாக வரும் ஜோ மல்லூரி, ஜூனியர் பாலைய்யா உள்ளிட்டோரும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்.
டி.இமானின் இசையும், எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், பிரபுசாலமனின் எழுத்து-இயக்கத்தில் மற்றுமொரு "மைனா"வை தந்திருக்கின்றன என சொல்லாமென்றால் அதற்கு தடையாக இருப்பது சிஜி - கிராபிக்ஸில் உருவான க்ளைமாக்ஸ் யானை சண்டை காட்சிகளும், ஆங்காங்கே இழுவையாக இருக்கும் இன்னும் சில காட்சிகளும் தான். அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால்
"கும்கி", தமிழ்சினிமாவில் புதிய அத்தியாயம் படைக்கும் "கீ" (KEY)!!-------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
எல்லோருமே நல்லவர்களாக காட்சியளிக்கும் இப்படி ஒரு படத்தை பார்த்து ரொம்ப நாளாயிற்று. யானையின் கண்களை போல சிறிய ஆனால் கூர்மையான கதை.
காட்டு கிராமத்துக்குள் புகுந்து களேபரம் பண்ணும் முரட்டு யானையை விரட்ட பழகிய வீரமுள்ள யானையை உதவிக்கு அழக்கிறார்கள். அதன் பெயர் தான் கும்கி. சூழ்நிலையால் அந்த யானை கிடைக்காமல் போக கோயில், திருவிழா என்று சுற்றும் பயந்தாகொள்ளி யானையோடு கிராமத்துக்குள் நுழைகிறான் ஹீரோ. அங்கே ஒரு பெண்ணுடன் காதல். காதலும் காட்டு யானையும் என்ன ஆனது? என்பது தான் கும்கி.
விக்ரம்பிரபுவுக்கு தாத்தா சிவாஜியின் ஜாடையும் இல்லை. அப்பா, பிரபுவின் ஜாடையும் இல்லை. ஆனால் பாத்திரத்தோடு ஒன்றிப்போகும் குடும்ப வாசனை மட்டும் செமத்தியாக கை கொடுக்கிறது. மனிதர் யானைப் பாகனாகவே மாறியிருக்கிறார். முதல்படம் என்று சொல்லவே முடியாது.
கொய்யப்படாமல் வளர்ந்த காட்டு மல்லி மாதிரி ஜிவ்வென்று மணக்கிறார் லட்சுமிமேனன். எவ்ளோ பெரிய கண்கள் காட்டு ராணி வேடம் கச்சிதம்.
வழக்கம்போல் தம்பி... இல்லை அண்ணன் ராமய்யா படம் முழுக்க அவருக்கு மைண்ட் வாய்ஸ் தான். ஒவ்வொரு மைண்ட் வாய்ஸுக்கும் கைத்தட்டல். அவரை பெரிய பாகனாக மக்கள் நினைக்க, ஆனால் தான் ஒரு அல்லக்கை என்பதை உணர்ந்து அவர் நடுங்குவது அழகு. அவருக்கு ஈடு கொடுத்து கலகலக்க வைக்கிறார். உண்டியலாக வரும் குண்டுபையன் பாஸ் என்கிற பாஸ்கரன் அஸ்வின்.
யானையை வைத்து காமெடியும் பண்ணியிருப்பது ரசிக்க வைக்கிறது. அந்த அப்பாவி யானைக்கு வீரம் கூட்ட, ஒரு எருமை மாட்டை கட்டி வைத்து முட்டச்சொல்ல, எருமை உறும, நம் யானை பின்னங்கால் பிடறியில் பட ஓடுவது செமை கலட்டா.
காடு, மலை, அருவி, வயல் என்று சுகுமாரின் கேமரா செமை கூல். தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது தான் நிஜ உலகம் ஒன்று இருப்பதே நினைவுக்கு வருகிறது.
அந்த காட்டு யானையை பேய், அரக்கன் என்றெல்லாம் ஏகத்துக்கு பில்டப் தருகிறார்கள். ஆனால் அது சும்மா சண்டை போட்டு மண்டையை போடுவது ஏமாற்றம் தருகிறது. கிராஃபிக்ஸில் அதகளம் பண்ணியிருக்க வேண்டாமா?
ஊர்த்தலைவராக வரும் ஜோய் மல்லூரி கச்சிதம். ஊரெல்லாம் விவசாய நிலத்தை அழிச்சு கட்டிடமா கட்டற நீங்க, கடைசியில் கல்லைத்தாண்டா சாப்பிட போறீங்க. யானையோட பலம், பாகனோட தைரியத்துல தான் இருக்கு வசனம் பளிச்.
இமானுக்கு இறகு, முளைத்திருக்கிறது. சொய்ங், சொய்ங், பாட்டில் தியேட்டர் அதிர்கிறது. சொல்லிட்டேனே ஒண்ணும் புரியல பாடல்களும் தேன்.
ஒன்று காதலர்கள் சேருவார்கள். அல்லது செத்து போவார்கள் என்ற தமிழ் சினிமாவின் வழக்கமான க்ளைமாக்ஸை மாற்றி விக்ரம் பிரபுவும், லட்சுமி மேனனும் தங்கள் சூழலை உணர்ந்து தாங்கள் பிரிந்து, காதலை வாழ வைப்பது துணிச்சலான க்ளைமாக்ஸ். பலே பிரபு சாலமன்.
கும்கி - ராஜ நடை.
நன்றி: குமுதம்