தினமலர் விமர்சனம் » 180
தினமலர் விமர்சனம்
"நூற்றெண்பதும்" - 180 படங்களுக்கு மேல் பார்த்து சலித்து போன, ஹீரோவுக்கு கேன்சர் எனும் "வாழ்வேமாயம்" பாணி ஸ்டோரி தான்!
முதல் காட்சியிலேயே இறுக்கமான முகத்துடன் காசி - கங்கையில் முழுக்கு போடும் ஹீரோ சித்தார்த், சென்னைக்குள் எண்ட்ரி ஆகி பேப்பர் போடும் சிறுவர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்கிறார். காய்கறி விற்கும் கிழவியை பைக்கில் ஏற்றிபோய் உதவுகிறார், சுண்டல் விற்கிறார், இஸ்திரி போடுகிறார், இன்னும் இத்யாதி, இத்யாதி என பல ஆச்சர்யப்படுத்தும் சம்பவங்களில் ஈடுபடுகிறார். இவரை இதுமாதிரி எக்கச்சக்க சம்பவங்களில் எதேச்சையாக பார்க்கும் பாத்திரிகையாளர் நித்யா மேனன், சித்தார்த்தின் இதுமாதிரி பொழுதுபோக்குகளையே புகைப்படங்களாக்கி, பத்திரிகை உலகில் புகழ் கொடி நாட்டுகிறார். கூடவே சித்தார்த்தை ஒரு தலையாக காதலிக்கவும் தொடங்குகிறார். அதை சித்தார்த் ஏற்றுக்கொள்ள மறுக்கும் காரணம் என்ன...? என்பது தான் 180 படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
ஹீரோ சித்தார்த், பாதிப்படம் அமெரிக்க அல்ட்ராமார்டன் டாக்டராகவும், மீதிப்படம் அவர் மாதிரி பெரிய டாக்டர்களாலேயே கைவிடப்பட்ட நோயாளியாகவும் பாத்திரத்திற்கேற்ப பளிச்சிட்டிருக்கிறார். அதற்காக அவர் ஆசை, ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்த அமெரிக்க மனைவியை அம்போவென விட்டுவிட்டு வேறு நாட்டிற்கு கிளம்புவதையும் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. வியாதி இருப்பவர்கள் எல்லாம் இப்படி வீட்டுக்காரியை விட்டு ஓட முடிவெடுத்தால், அப்புறம் குடும்பம், குழந்தை குட்டி என எந்த சமூக கட்டமைப்பும் இருக்கவே முடியாது என்பது ஏனோ இயக்குனருக்கு புரியவே இல்லை பாவம்!
சித்தார்த்தின் அமெரிக்க காதலி கம் மனைவி ப்ரியா ஆனந்த், இந்திய காதலி நித்யாமேனன் இருவரும் நடிப்பிலும், எம்.பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும் பளிச், பளிச் என மின்னுகின்றனர். மெளலி, தனிகல பரணி, கீதா, ஜானகி சபேஷ், லக்ஷமிராம கிருஷ்ணன், அமெரிக்க நண்பராக வரும் ஸ்ரீசரண் உள்ளிட்ட எல்லோரும் நடிப்பில் பின்னிபெடலெடுத்திருக்கின்றனர்.
படிக்க வேண்டிய வயசுல படிக்காம, ஊருக்கெல்லாம் பேப்பர் போடும் பசங்களை, அந்த பேப்பரிலேயே விளம்பரம் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்யும் நாயகன், நாயகியின் மூலம் இயக்குநரும், அவருக்கு பின்னால் இருக்கும் மற்றும் பலரும் தெரிவது "180" படத்தின் மற்றுமொரு பலம்!
ஷரத்தின் இசையில் "ரூல்ஸ் கிடையாது..." பாடல் சும்மா அதிருது. ஷரத்தின் இசை மாதிரியே எம்.பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, சுபாவின் எழுத்து எல்லாம் சேர்ந்து ஜெயேந்திராவின் இயக்கத்திற்கு மேலும் மெருகு சேர்க்கின்றன!
மொத்தத்தில் "நூற்றெண்பது" டெக்னிக்கலாக "நன்றென்பது" ரொம்ப சரி!
---------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
இரண்டு விபத்துகளால் பற்றிக் கொள்ளும் இரண்டு காதல்களும்.... இரண்டோடு சம்பந்தப்பட்ட, ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழக்கூடிய, அமெரிக்க வாழ் தமிழ் டாக்டரின் மனப்போராட்டங்களும்தான் நூற்றெண்பது.
அடுத்து என்ன என யூகிக்க முடியாதபடி விறுவிறுப்பாக இயக்கியிருக்கும் ஜெயேந்திரா நம்பிக்கையான வரவு. சித்தார்த், டாக்டராகவும், சென்னைப் பையனாகவும் சின்னச் சின்ன மேனரிஸங்களில் ஸ்கோர் செய்கிறார். ப்ரியா ஆனந்த் - நித்யா மேனன் இருவரும் அவரவர் கேரக்டர்களுக்குள் அட்டகாசம். எனினும் ப்ரியா ஆனந்த், காதல் காட்சிகளில் செய்யும் மிமிக்ரி சேட்டைகளாலும், கணவனுக்காக ஏங்கித் தவிக்கும்போது கூடுதலாய் மனசுக்குள் பதிகிறார். அதுவும் இரண்டு பேரும் சொந்தக் குரலில் டப்பிங் பேசி அசத்தி இருப்பது நம்ப வேண்டிய ஆனால் நம்ப முடியாத ஆச்சர்யம்.
பாலசுப்ரமணியம் கேமரா 180 டிகிரியையும் தாண்டி விரிகிறது. அதிலும், கங்கையும் அமெரிக்காவும், சென்னையும் கண்களுக்குள் கவிதையாய் நிறைகின்றன; ரெட் டிஜிட்டல் கேமராவாம். ஷரத் தம் பின்னணி இசையால் உள்ளேன் ஐயா என்கிறார். பாடல்களில் இன்னும் ஏதேதோ தேவைப்படுகிறது இவருக்கு. முதல் பாதி விறுவிறுப்பு, கலகலப்பு, மறுபாதியில் சுணக்கமென நகரும் திரைக்கதையில் அவ்வப்போது கிச்சுக்கிச்சு மூட்டுகிறது சுபாவின் வசனங்கள்.
நூற்றெண்பது வசீகரம்.