தினமலர் விமர்சனம்
நடிகர் மணிவண்ணன் இயக்குநராக இருந்த காலத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த மதுவண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் இருக்கும்படம் தான் "நலம்தானா".
கதைப்படி, தன் காணாமல் போன நண்பனைத்தேடி நகரத்திற்கு வரும் ஹீரோ ஸ்ரீகுமார், தான் நண்பன் தங்கியிருந்த வீட்டில், அவர் தங்கிய அறையிலேயே வாடகைக்கு தங்குகிறார். அந்த வீட்டு உரிமையாளரின் இரண்டு மகள்களில் ஒருத்தியை நண்பன் காதலித்திருப்பதும், அதனால்தான் தன் நண்பன் காணாமல் போயிருப்பதும், ஹீரோவுக்கு தெரிய வருகிறது. அதன்பின் அந்த பெண்களின் நடவடிக்கைகளை உற்று நோக்கும் ஹீரோவுக்கு அவரது நண்பர் விஷ்ணு-சுரேஷ் கிடைத்தாரா, இல்லையா...? என்பதை காமெடியாகவும், காமநெடி(ஜோதிஷா-சானியா என இரண்டு நாயகியர் ஆயிற்றே)யாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மதுவண்ணன்.
மணிவண்ணன் காலத்து இயக்குநர் என்பதாலோ, என்னவோ, மதுவண்ணனின் கதையில் இருக்கும் சுவாரஸ்யம் திரைக்கதையிலும், இயக்கத்திலும் இல்லாமல் போய், ரசிகர்களின் நலத்தை கேள்விகுறியாக்கிவிடுகிறது. புதுமுகங்கள் ஸ்ரீகுமார், விஷ்ணு, ஜோதிஷா, சானியா உள்ளிட்டவர்களில் சானியாவின் கவர்ச்சிக்கு மட்டுமே காசு கொடுத்த திருப்தி!
தர்மாவின் ஒளிப்பதிவு, சாணக்கியாவின் இசை எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாத குறை! ஆகமொத்தத்தில் நலம்தானா? படம்தானா...? எனும் ஐயத்தை கிளப்புவது நியாயம் தானே...? .