தினமலர் விமர்சனம்
உலகின் முதல் எச்.சி.எஸ்.எல்.ஆர். ஸ்டில் கேமராவினால் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட திரைப்படம் எனும் பெருமையுடன் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று திரைக்கு வந்திருக்கும் படம்தான் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி.
கொடைக்கானலில் இருந்து கிளம்பி வத்தலகுண்டில் காத்திருக்கும் காதலனை சந்தித்து, திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ள வருகிறார் கதாநாயகி. 2 மணிக்கு கொடைக்கானலில் இருந்து கிளம்பும் நாயகி 5 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அவர் ஏறி வந்த பஸ் திண்டுக்கல் வந்து சேர்ந்து வெகுநேரமாகியும் நாயகி வராதது கண்டு பதறுகிறார் நாயகர். நண்பரின் பைக்கில் நாயகியை தேடி கொடைக்கானல் போகும் நாயகர், அவரது வீட்டிலும் நாயகி இல்லாதது கண்டு அதிர்கிறார். அவர் அச்சப்பட்டு அதிர்ந்தது மாதிரியே நாயகி காணால் போன தகவல் காவல்துறைக்கு போகிறது. காவல்துறை என்ன செய்கிறது? கதாநாயகர் என்ன செய்கிறார்? கதாநாயகி என்ன ஆனார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடை சொல்கிறது சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படத்தின் மீதிக்கதை!
படத்தின் கதாநாயகராக வலம் வரும் சக்தி சரத், பாத்திரத்திற்கு ஏற்ற பதறும் நடிப்பை வெளிப்படுத்தி பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். ஆனாலும் நாயகியின் உறவுக்காரர் வீட்டிற்கு அருகில் உள்ள வாலிபர் எனும் முறையில் போலீஸ் விசாரிக்கும்போது தன்னைத்தான் தேடி நாயகி வந்தார் எனும் உண்மையை மறைப்பது ஏன் என்பது புரியாத புதிர். அதேமாதிரி நாயகியின் தாய்மாமாதான் அந்த கேஸை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் எனும்போது, இவர் உண்மையை ஆரம்பத்திலேயே சொல்லி நாயகி கிடைக்க உதவுவதை விட்டு விட்டு, காட்டிக் கொடுத்த செல்போன் எண்ணால் உதைபடுவது பரிதாபத்திற்கு பதில் எரிச்சலையேஏற்படுத்துகிறது. அதை மாதிரி நான் எந்த தப்பும் பண்ணலை... என அடம் பிடிப்பதும் அபத்தமாக இருக்கிறது. தாய்மாமா, பயப்படாம இரு அக்கா என நாயகியின் தாயிடம் அடிக்கடி சொல்லி போரடிப்பதும் அலுப்பு தட்டுகிறது.
கதாநாயகி மகா மாலினி, கிராமங்களில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து பெண் மாதிரி சாதாரணமாக இருக்கிறார். ஆனால் சவாலான பாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்து தோழின் தந்தையாலேயே கொலையாவது கொடூரம். நாயகியை காட்டிலும் தோழி தனம் மாலதி சில காட்சிகளில் பளீச் என நடித்து வெளிச்சத்துக்கு வந்து விடுகிறார்.
இவர்களைப் போன்றே நாயகியின் தாய் மீரா கிருஷ்ணன், காமெடி கண்ணாடி கோபியாக வந்து கடிக்கும் இப்பட திரைக்கதையாளர் டைரக்டர் ரதிபாலா, பெருமாளாக வரும் செல்வம் தோழி தனத்தின் அம்மா ராதா, தனத்தின் அப்பா கேப்டன் கணேசன், சுப்பு என எல்லோரும் பர்ஸ்ட் கிளாஸ் இல்லை என்றாலும் பாஸ் எனும் அளவில் நடித்து ரசிகர்களை காபந்து செய்து விடுகி்னறனர் பேஷ்.. பேஷ்..!
எச்.சி.எஸ்.எல்.ஆர். கேமிராவில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்திருக்கும் எஸ்.பி.எஸ்.குகனுக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட் அடிக்கலாம். ஜே.வி.,யின் இசையும் புதுமை! ரவிபாரதியின் இயக்கத்தில், இப்படியும் இறப்பு வரலாம்... எனும் டாகுமெண்ட்ரி படமாக வேண்டுமானால் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணியை ரசிக்கலாம். திரைப்படமாக?