நடிகர்கள் : டொவினோ தாமஸ், சம்யுக்தா மேனன், ஹரிஷ் உத்தமன், ஷிவஜித் பத்மநாபன் மற்றும் பலர்..
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : கௌதம் சங்கர்
டைரக்ஷன் : பிரவீன் பிரபாராம்
வளர்ந்து வரும் ஒவ்வொரு இளம் கதாநாயகனுக்கும் ஒரு அதிரடியான போலீஸ் படம் அமைந்துவிட்டால், அந்த படம் வெற்றியும் பெற்றுவிட்டால் அவர் கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தைப் பெற்று விடுகிறார்.. அதன்படி தமிழில் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த வரும், மலையாள திரையுலகில் இளம் காதல் நாயகனாக முன்னேறி வருபவருமான டொவினோ தாமஸ், முதல்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து வெளியாகியுள்ள படம் தான் கல்கி.. இந்த படம் அவரை கமர்ஷியல் ஹீரோ ஆக்குமா..? பார்க்கலாம்.
கேரள தமிழக கர்நாடக எல்லைகளின் அருகில் உள்ள ஊர் நஞ்சங்கோடு.. இந்த ஊரில் ஒரு குறிப்பிட்ட காலனியில் வசிக்கும் தமிழர்களை அடித்து துன்புறுத்தி அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வில்லன் அமர்நாத். அவரது அராஜகத்தை தாங்க முடியாமல் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் ஊரையே காலி செய்து கிளம்புகின்றனர். அமர்நாத்தை எதிர்க்க முடியாமல் அந்த ஊர் எஸ்.ஐ தற்கொலை செய்து கொள்ள அந்த இடத்திற்கு புதிதாக வருகிறார் டொவினோ தாமஸ்..
அமர்நாத்தின் மாமா அந்த பகுதியின் எம்பியாக இருக்கும் நிலையில், அமர்நாத்தின் கையாளாக ஹரிஷ் உத்தமன், அந்த ஊரையே பயத்தில் மிரட்டி வைத்திருக்கும் நிலையில் இவர்கள் அனைவரையும் எதிர்த்து, டொவினோ தாமஸால் அங்கே தாக்கு பிடிக்க முடிந்ததா..? அமர்நாத்தின் கொட்டத்தை அடக்கி, அகதிகளாக வெளியேறிய மக்களை மீண்டும் அழைத்து வந்து அந்த பகுதியில் குடியமர்த்த முடிந்ததா என்பதே மீதிப்படம்.
ஒரு அதிரடி போலீஸ் படத்திற்கான அனைத்து இலக்கணங்களும் இந்த படத்தில் அமைந்திருப்பதுடன், ஒரு போலீஸ் அதிகாரியான அனைத்து லட்சணங்களும் டொவினோ தாமஸுக்கும் அம்சமாக பொருந்தியுள்ளது. இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். அவர் போலீஸ் ஸ்டேஷனில் நுழையும் அந்த முதல் காட்சியிலேயே அதிரடி ஆரம்பம் ஆகிவிடுகிறது.. எதிரிகள் ஒவ்வொருவரையும் அவர் கையாளும் விதமும் பதிலடி கொடுக்கும் விதமும் இதுவரை வந்த மலையாள படங்களில் மட்டுமல்ல, நம் தமிழ் சினிமாவில் கூட இதுவரை வராத காட்சிகள்.. சாமி விக்ரமுக்கு பிறகு பொறுக்கி போலீஸ் என்கிற அந்த கேரக்டரில் டொவினோ தாமஸ் கன கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நிச்சயமாக இனி ஆக்ஷன் கதைகள் டொவினோ தாமஸை தேடி வரும் என்பது உறுதி.
படத்தில் கதாநாயகனுக்கு ஜோடி இல்லை.. அதேசமயம் வில்லன்கள் கூட்டத்தில் முக்கியமான ஒரு நபராக வில்லித்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார் நடிகை சம்யுதா மேனன்.. அவரது முகபாவம் அதற்கு ஓரளவுக்கு உதவி செய்தாலும், அவருக்கான காட்சிகள் ரொம்பவே குறைவு என்பதால் நம் மனதில் நிற்காமலேயே போய்விடுகிறார்.. படத்தில் நாயகனுக்கு சமமான வில்லன் அமர்நாத் கதாபாத்திரத்தில ஆஜானுபாகுவான தோற்றத்துடன் மிரட்டுகிறார் ஷிவஜித்.. டொவினோ தாமஸுடன் மோதும் அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் உக்கிரம் காட்டுகிறார் மனிதர்.
வில்லனின் கையாளாக முக்கிய கேரக்டரில் ஹரிஷ் உத்தமன், வழக்கம்போல ஒரு அடியாள் வேலைகளை திறம்பட செய்திருக்கிறார். அதேசமயம் டொவினோ தாமஸுக்கு ஆப்பு வைப்பதாக நினைத்துக் கொண்டு அதற்காக ஒருமுறை அல்ல இருமுறை நன்றாக வாங்கியும் கட்டிக் கொள்கிறார். ஆடியன்ஸ் நான்ஸ்டாப்பாக விசிலடிக்கும் காட்சிகள் அவை.. மக்களை ஒன்று திரட்டி போராட முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட் போராளி கதாபாத்திரத்தில் சைஜூ குறூப்.. பலமுறை அவர் நடித்த கதாபாத்திரம் என்பதால் அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி பிட்டாக பொருந்தியிருக்கிறது. மற்ற துணை கதாபாத்திரங்களில், காவல் நிலையத்தில் சக போலீஸ்காரர்களாக வரும் ஒவ்வொருவரும் மனதில் நிற்கும்படியான நடிப்பை வழங்கியுள்ளனர்.
கே.ஜி.எப் படத்திற்கு பிறகு அதேபோன்ற ஒரு கதைக்களத்திற்குள் வந்துவிட்டோமோ என்கிற பிரமிப்பை தனது ஒளிப்பதிவால் ஏற்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவுதம் சங்கர்.. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆக்சன் படத்திற்கு ஏற்ற மாதிரி அதிரவைக்கிறது.
மக்கள் அநீதியால் பாதிப்புக்கு ஆளாகும்போது அவர்களை காக்க கல்கி அவதாரம் எடுப்பார் என சொல்லும் விதமாக இந்தபடத்தின் கதையி உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரவீன் பிரபாராம். அறிமுக இயக்குனர் என்று சொல்ல முடியாதபடி தனது முதல் படத்திலேயே ஒரு பக்காவான போலீஸ் கதையை மிக அருமையாக கையாண்டு நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.. போலீஸ் படங்கள் பார்க்க வரும் ரசிகர்கள் எப்படிப்பட்ட காட்சிகளை ரசிக்க விரும்புவார்களா அதற்கு ஏற்ப மாஸ் காட்சிகளாக கால் மணி நேரத்திற்கு ஒருமுறை புல்லரிக்கும் விதமாக உருவாக்கியிருக்கிறார்..
மொத்தத்தில் கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் விதமாக ஒரு வெற்றிப்படமாக இந்த கல்கி ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.