நடிகர்கள் : மம்முட்டி, கனிகா, அன்சன் பால், மஹ்பூல் சல்மான், ரெஞ்சி பணிக்கர், சித்திக், யோக் ஜேபி, சுதேவ் நாயர் மற்றும் பலர்
இசை : கோபி சுந்தர்
கதை : ஹனீப் அதேனி
டைரக்சன் : ஷாஜி படூர்
பெயர் தான் ஏதோ குடும்பக்கதை போல இருக்கிறதே தவிர படம் அக்மார்க், கிரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகையை சேர்ந்தது. அதில் அண்ணன், தம்பி சென்டிமென்ட்டை மிக்ஸ் செய்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி படூர்.
மிகவும் கண்டிப்பான நேர்மையான போலீஸ் அதிகாரி மம்முட்டி. அவரது தம்பி அன்சன் பால் தனது காதலியை கொலை செய்துவிட்டார் என சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், சாட்சிகள் அனைத்தும் தம்பிக்கு எதிராக இருக்கின்றன. ஒருக்கட்டத்தில் மம்முட்டியே தனது தம்பி கொலைகாரன் என நம்பும் சூழல் உருவாகிறது. இதனால் அவரே வழக்கை விசாரித்து தம்பிக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறார்.
இதனால் ஜெயிலில் இருந்து தப்பி தனது அண்ணனையே முதலில் பழிவாங்க துடிக்கிறார் அன்சன் பால். மம்முட்டியால் ஏற்கனவே மகன்களை இழந்து பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளான சித்திக்கும் யோக் ஜேபியும் அவர் மீது வஞ்சம் தீர்க்க, அன்சன் பாலை ஜெயிலில் இருந்து தப்புவித்து, மம்முட்டியை கொலை செய்ய ஏவுகின்றனர்.
அதேசமயம் அன்சன் பாலின் ஒரு நண்பன் மூலமாக, அவர் காதலியை கொலை செய்யவில்லை என்றும் அவர் நிரபராதி என்றும் மம்முட்டிக்கு தெரிய வருகிறது. ஆனால் தம்பியை காப்பாற்ற ஆதாரங்கள் இல்லாமல் தடுமாறுகிறார் மம்முட்டி. ஆனால், அண்ணனை புரிந்து கொள்ளாமல் மம்முட்டியை கொள்வதற்காக துப்பாக்கியை தூக்குகிறார் அன்சன் பால். இறுதியில் யாருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ்.
மிக புதிதான கதை என்று சொல்லிவிட முடியாது.. ஆனால் கதை ட்ரீட்மெண்ட்டில் வித்தியாசம் காட்டி, சில டுவிஸ்ட்டுகள் வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள். காக்கி யூனிபார்ம் மம்முட்டிக்கு புதிதா என்ன..? கம்பீரம், மிடுக்கில் அசத்துகிறார். அவ்வப்போது சில ஒன்லைன் வசனங்களின் மூலம் கைதட்டலையும் விசிலையும் பறக்க வைக்கிறார்.
மம்முட்டியின் தம்பியாக வரும் அன்சன் பாலுக்கு இதில் படம் முழுதும் வரும் கேரக்டர்.. கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். வக்கீலாக வரும் கனிகா, போலீஸ் அதிகாரிகளாக வரும் சித்திக், யோக ஜேபி ஆகியோர் மம்முட்டியின் மீதான பழைய வன்மத்தை வெளிப்படுத்துவதும், அவரிடம் நோஸ்கட் பெறுவதும் என சிம்பிளாக கடந்து போகிறார்கள். கொடூர கொலைகாரனாக வரும் சுதேவ் நாயர் கவனம் ஈர்க்கிறார். உயரதிகாரியாக ரெஞ்சி பணிக்கர் வழக்கம் போல மிடுக்கு.
ஆரம்பத்தில் சீரியல் கில்லிங், அதற்கான விசாரணை என நகர, சுவாரஸ்யமாக துவங்கிய கதை, கால் மணி நேரம் கழித்து அதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு ரூட்டிற்கு மாறும்போது, அப்படியானால் எதற்கு அந்த கால் மணி நேரத்தை வீணடித்தார்கள் என்கிற எண்ணமும் ஏற்படவே செய்கிறது. கிளைமாக்சில் கடைசி இருபது நிமிடம் விறுவிறுப்பாக செல்வதென்னவோ உண்மை.. சமீபகாலமாக சோர்வடைந்திருந்த மம்முட்டியின் ரசிகர்களை இந்தப்படம் உற்சாகப்படுத்தி இருப்பதை தியேட்டர்களில் கண்கூடாக பார்க்க முடிந்தது.