நடிகர்கள் : நேகா சர்மா, ஆஷிம் குலாதி, ஆதித்யா சீல்
இயக்கம் : அனுபவ் சின்ஹா
2001-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற தும் பின் படத்தின் இரண்டாம் பாகமாக 16 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள முக்கோண காதல் திரைப்படம் ‛தும் பின் 2''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
ஸ்காட்லாந்தில் படத்தின் கதை நகருகிறது. அமர் எனும் ஆஷிம் குலாதி, தரண் எனும் நேகா சர்மாவுடன் காதல் வயப்படுகிறார். இருவரும் காதலில் கசிந்து உருகி வரும் வேளையில் எதிர்பாராத ஒரு விபத்தில் அமர் இறந்து விடுகிறார். இதன்பின்னர் அமரின் நினைவில் வாழும் தரணுக்கு சேகர் எனும் ஆதித்யா சீலின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கிறது. சேகர், தரணை காதலிப்பதாக கூறுகிறார். முன்னாள் காதலனை மறக்கவும் முடியாமல், தற்போது கிடைத்த அன்பை ஏற்கவும் முடியாமல் தவிக்கும் தரண், ஒருக்கட்டத்தில் சேகரின் காதலுக்கு ஓகே சொல்கிறார். இருவரும் திருமணம் செய்யும் கொள்ளும் வேளையில் திடீர் திருப்பமாக இறந்ததாக கருதப்பட்ட அமர் உயிரோடு வர அதன்பின், என்ன நடக்கிறது... தரண் யாரை மணந்தார் என்பது தும் பின் 2 படத்தின் மீதிக்கதை.
நேகா சர்மா, ஆஷிம் குலாதி, ஆதித்யா சீல் மூவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை ரொம்ப சிறப்பாகவும் செய்யவும், அதற்காக சோடையும் போகவில்லை, சுமார் என்ற அளவிலேயே தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கண்ணுக்கு அழகை தரும் ஸ்காட்லாந்தில் அழகான லொகேஷனை அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எவான் முலிகன். அங்கித் திவாரி மற்றும் நிகில் வினய் பாடல்கள் பதிவும், பின்னணியும் சிறப்பு.
தும் பின் படத்தில் தனது மேஜிக்கை நிகழ்த்திய இயக்குநர் அனுபவ் சின்ஹா இம்முறை அந்த மேஜிக்கை காட்ட தவறிவிட்டார். வளவளவென்று இழுக்கும் படத்தின் கதையும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த கிளைமாக்ஸூம் ரசிகனை ஏமாற்றம் அடைய செய்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த முக்கோண காதல் கதையை பார்க்கும் ஆங்காங்கே பல குறைகள் இருந்தாலும் காதலர் பிரியர்களுக்கு இந்தப்படம் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்.