தினமலர் விமர்சனம் » எப்படி மனசுக்குள் வந்தாய்
தினமலர் விமர்சனம்
"காதலில் விழுந்தேன்" பட இயக்குநர் பி.வி.பிரசாத்தின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு காதல் சைக்கோ கதை தான் "எப்படி மனசுக்குள் வந்தாய்" மொத்த படமும்!
கதைப்படி, துணி வெளுக்கும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வசதியான வாழ்க்கைக்கும், வசதியான குடும்பத்து பெண்ணுக்கும் ஆசைப்படும் கேரக்டர் ஹீரோ சீனு எனும் விஷ்வாவினுடையது! அவர் எதிர்பார்த்த மாதிரியே அவருக்கு வசதியான மித்ரா எனும் தன்வி வியாஷின் நட்பும், காதலும் கிடைக்க, அதற்கு தடையாக இருக்கும் ஷாம் எனும் இர்பானை தீர்த்துகட்டவும் துணிகிறார் ஷீரோ சீனு அலைஸ் விஷ்வா! அப்புறம்? அப்புறமென்ன... சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து விஷ்வா தப்பித்தாரா...? மித்ரா எனும் தன்வி வியாஸை கைப்பிடித்தாரா...? என்பது தான் இப்படத்தின் கரு, கதை, களம், காட்சிகள்... இத்யாதி, இத்யாதி... எல்லாம்.
கதையின் நாயகராக சீனு எனும் விஷ்வா, கதையின் நாயகியாக மித்ரா எனும் தன்வி வியாஸ், நல்ல நண்பர் நட்புக்காக உயிரையும் கொடுத்திடும் ஷாமாக இர்பான், போலீஸ் அதிகாரி ரவிகாலே, சதீஷ், மகி, மகேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் பங்கை சரியா செய்திருக்கின்றனர்.
எஸ்.டி.விஜய் மில்டனின் பிரம்மாண்ட ஒளிப்பதிவு, ஏ.ஜெ.டேனியலின் இனிய இசை எல்லாம் படத்தின் பெரிய பலம் என்றாலும், காதலுக்காக நண்பனையே கொல்வது, அதை நியாயப்படுத்துவது, "ஊராக்காலி, ஊராக்காலி..." பாடல் "நாக்கமூக்க..." (காதலில் விழுந்தேன்) பாடல் சாயலிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதும், படம் பிடிக்கப்பட்டிருப்பதும் உள்ளிட்ட பலவீனங்கள், "எப்படி மனசுக்குள் வந்தாய்" படத்தை எப்படி எப்படியோ ரசிகர்களின் மனதிற்குள் வரவிடாமல் தவிர்க்கப் பார்க்கின்றன! ஆனால் அந்த, தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு ஏதோ ஒரு விதத்தில் "எப்படி மனசுக்குள் வந்தாய்" திரைப்படம் ரசிகர்களின் மனதிற்குள்ளும் வந்துவிடுகிறது என்பது தான் இப்படத்தின் வெற்றி!
ஆமாம்., எப்படி மனசுக்குள் வந்தது...?!