அறிமுக பெண் இயக்குநர் நித்யா மெக்ரா இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா, கத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள ரொமான்ட்டிக் படம் தான் ‛‛பார் பார் தேக்கோ''.
‛பார் பார் தேக்கோ' படம் முழுக்க சித்தார்த் மல்கோத்ரா, கத்ரீனா கைப்பை சுற்றியே நடக்கிறது. கதைப்படி, ஜெய் வர்மா எனும் சித்தார்த் மல்கோத்ரா, கணித ஆசிரியர். தியா எனும் கத்ரீனா கைப் ஒரு கலைஞர். கத்ரீனாவிற்கு சித்தார்த்தின் அறிமுகம் கிடைக்க, அந்த அறிமுகம் பின்னாளில் காதலாக மாறுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சித்தார்த்திடம் கத்ரீனா கேட்கிறார், ஆனால் சித்தார்த்தோ தனக்கு தனது கேரீயர் தான் முக்கியம், இல்லற வாழ்வில் இப்போதைக்கு நாட்டம் இல்லை என்கிறார். இருந்தாலும் ஒருவழியாக சித்தார்த்தை சமாதானம் செய்து அவரை மணக்கிறார் கத்ரீனா. ஆனால் சித்தார்த் தொடர்ந்து கேரீயர் தான் முக்கியம் என்கிறார். அவரிடத்தில் இப்போதைய வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று அறிவுரை செய்கிறார் கத்ரீனா, ஆனால் அதை எதையும் கேட்காமல் இல்லற வாழ்வு சரியில்லை என்று குடிக்கு அடிமையாகிறார். அதன்பின் என்ன நடக்கிறது. சித்தார்த்-கத்ரீனா இல்லற வாழ்வு சிறப்பாக சென்றதா என்பது படத்தின் ரொமான்ட்டிக் கலந்த மீதிக்கதை.
ஜெய்யாக வரும் சித்தார்த் மல்கோத்ரா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் அவரது நடிப்பு சூப்பர்.
தியாவாக வரும் கத்ரீனாவிடம் கவர்ச்சியை விட இன்னும் கொஞ்சம் நடிப்பு வெளிப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ராம் கபூர், சரிகா, சயானி குப்தா ஆகியோர் தங்களது கதாபாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவு. இசை பொறுத்தமட்டில் இரைச்சல் சத்தம் தான் அதிகமாக இருக்கிறது.
நித்யா மெக்ரா எனும் அறிமுகம் இயக்குநர் இயக்கியிருக்கிறார். கதை, நல்ல கதை தான், ஆனால் அதை திரைக்கதையாக இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டி கொடுத்திருந்தார் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும் இருவருக்கும் கேரீயரை விட உறவுகள் தான் மிகவும் முக்கியம் எனும் உயரிய கருத்தை வலியுறுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் அதை சிறப்பாக சொல்லாதது சற்று ஏமாற்றமே. மற்றபடி படத்தை ஒரு முறைபார்க்கலாம். ஆனால், தலைப்பில் சொல்லியபடி ‛பார் பார் தேக்கோ' படம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படமல்ல!