தினமலர் விமர்சனம்
காதலர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் என்கவுண்டர் மோதல்கள்தான் மதுரை சம்பவத்தின் மொத்த கதையும்! ஆனால் பெண் போலீஸ் அதிகாரி, ஆண் தாதாவுடன் கொள்ளும் காதலும் இந்த மோதலினூடே அழகாக சொல்லப்பட்டிருப்பதுதான் ஹைலைட்!
இறைச்சி மார்க்கெட்டின் தலைவராக இருக்கும் ராதாரவி போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராயம் என கொடிகட்டி பறக்கிறார். அவருக்கு ஒரே வாரிசு ஹீரோ ஹரிக்குமார். இவர்களுக்கும், இவர்களது கூட்டணியில் இருந்து பிரிந்து கள்ளச்சாராய வியாபாரம் செய்வதோடு ஆளுங்கட்சி எம்.பி.,யாகவும் ஆகி விடும் காதல் தண்டபாணிக்கும் இடையில் தொழில் போட்டி! வெட்டு, குத்து, கொலை என போகும் இவர்களது பகையில் அரசியலும் புகுந்துவிடுகிறது. தண்டபாணி தன் எம்.பி., பவரின் மூலம் ராதாரவியின் குடும்பத்தையே தீர்த்துக் கட்ட முயலுகிறார். ஹீரோ ஹரிக்குமார் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், ஹீரோயின்கள் கார்த்திகா, அனுயா ஆகியோரின் கனவு மற்றும் காதலில் எவ்வாறு விழுந்து எழுகிறார் என்பதும் மீதிக்கதை!
ஹரிக்குமார் அதிரடி நாயகராக ஆக்ஷனில் தூள் பரத்துகிறார். தூத்துக்குடி உள்ளிட்ட அவரது முந்தைய படங்களை காட்டிலும், நடை - உடை - பாவனை எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம். முறைப்பெண் கார்த்திகாவின் காதல் வலையில் இருந்து அடிக்கடி தப்பிப்பதும், போலீஸ் அதிகாரி அனுயா மீது காதல் கொண்டு அதிரடியாக இரண்டாம் சந்திப்பிலேயே உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதும் சுவாரஸ்ய திருப்பங்கள்.
அதிரடியும், அழகுமாக அனுயா தனது முதல் படமான சிவா மனசுல சக்தியை காட்டிலும் சிறப்பாக செய்திருக்கிறார். தெத்துப்பல் அழகி கார்த்திகா அவரது அந்த பல் மாதிரியே குறும்புத்தனமாக பளிச்சிடுகிறார். ராதாரவி, காதல் தண்டபாணி, பொன்னம்பலம், ஆனந்தபாபு உள்ளிட்டவர்கள் தங்கள் பாத்திரம் உணர்ந்த பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆக்ஷன் படத்தில் அழகான காதலை... அதுவும் பெண் போலீஸ் அதிகாரியுடனே தாதா காதல் புரிவதை தைரியமாக சொல்லி விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் யுரேகா, ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காகவே இந்த சமூக விரோத செயல்களை செய்வதாக ராதாரவி தரப்பிற்கும், தப்பிற்கும் நியாயம் கற்பித்திருப்பது மட்டும் என்னதான் சினிமாத்தனம் என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அனுயாவின் பிளாஷ்பேக்கும் - வில்லத்தனங்களும், ஹரிக்குமாரின் ஹீரோயிசமும் கச்சிதமாக யுரேகாவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சுகுமாரின் ஒளிப்பதிவும், ஜான் பீட்டரின் இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது.
மதுரை சம்பவம் : மறக்க முடியாத சம்பவம்.
கல்கி விமர்சனம்
மற்றுமொரு மதுரை படம். அதாவது அடிதடி, ரவுடியிஸம், பஞ்ச் டயலாக், பதறவைக்கும் கொலை, பழிவாங்கத் துடிக்கும் ஹீரோ, ஹீரோவுக்கு கண்மூடித்தனமாக முட்டுக் கொடுக்கும் கதை. என்கவுன்டரில் போட்டுத் தள்ளும் போலீஸ் காதலியின் ஹிட்லிஸ்ட்டில் காதலன் (ஹீரோ) இருப்பது சற்றே நிமிர வைக்கும் வித்தியாசம்.
ஹீரோ ஹரிக்குமார் பரவாயில்லை. பாஸ் மார்க் வாங்குகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அலப்பறையை கொடுப்பதும், காதல் காட்சிகளில் கண்களுக்குள் பல்ப் எரிய வைப்பதுமென கவனத்தில் வியாபிக்கிறார். என்ன... நாங்க சுவிட்ச போட்டாதான் சூரியன் எரியும், மோசமானவங்கள்ல நாங்க முக்கியமானவங்க என ஏகத்துக்கு ரைமிங்கில் பேசி கொஞ்சம் டரியலாக்குகிறார்.
ஹீரோயின் அனுயா... அட்ரா சக்கை ரகம். எஸ்.எம்.எஸ்.,ல் குல்பி ஐஸாக கண்களுக்கள் குளித்தவர், காக்கி ட்ரெஸ்ஸில் ராக்கெட்டாக சீறுகிறார். முதிர்ச்சியான நடிப்பில் மொத்த கை தட்டலும் அவருக்குத்தான். ஆலமரத்தான் கேரக்டரில் ராதாரவி. அனுயாவைப் பற்றி அவர் கொடுக்கும் ஒற்றை பஞ்ச் போதும். அவரின் நடிப்பு அனுபவத்துக்கும் ஆழத்துக்கும்.
ஐ யாம் தாமஸ் என எண்ட்ரி ஆகும் ஒவ்வொரு சீனிலும் காமெடியில் எகிறும் சந்தானபாரதி, இப்போதுதானே உள்ளே போனோம் அதுக்குள்ள வெளியே வர்றோம் என உள்ளே வெளியே ஆடும்போது தியேட்டர் சிரிப்பால் அதகளமாகிறது. நடுரோட்டில் முத்தம் கொடுத்தால் எந்தப் பெண்ணாவது காதலிப்பாளா? ஆனால் ஹீரோயின் அனுயா காதலிக்கிறார். இப்படி கதையில் லாஜிக் இடியோ இடியென இடிக்கிறது. ஜான் பீட்டரின் பின்னணி இசையில் சுகுமாரின் கேமராவில் மதுரை மண் வாசம். ஹீரோ பில்டப் காட்சிகள் காதைப் பஞ்சாக்கும் பஞ்ச் டயலாக். ரத்தப் பொறியல் காட்சிகள். அழுக்கு தலை முடியோடு “அடிதடியில் இறங்கும் அடியாட்கள் என சம்பவங்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.