கடலோரப் பகுதியை பின்புலமாக வைத்து, ஒரு காதல் கதை, காவியமாக உருவாகிறது. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுககு சந்தோஷம், துக்கம், காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என எல்லா உணர்வுகளும் வெளிப்படும் விதமாக காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. துணிக்கடையில் கேஷியராக வேலை செய்யும் செல்வம் என்பவனுக்கு பெரிய கனவுகள் எதுவும் இல்லை. அவன் வீட்டில் விதவையாக இருக்கும் அம்மா, வயதான பாட்டி தம்பி சிவா என கூட்டுப்பறவை போல் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு சிறுவயது முதல் கூடவே வளர்ந்து வரும் பொன்னி என்ற இளம்பெண்ணும் தோழியாகவும், காதலியாகவும் வலம் வருகிறாள். இவர்கள் வாழ்க்கையில் கடலும் ஒரு கதாபாத்திரமாக உள்ளே நுழைகிறது. செல்வத்தின் தம்பி சிவா, தேவயானி என்ற பெண்ணை விரும்பி, கல்யாணம் பண்ண முடிவு செய்ய, பிரச்சினை தொடங்குகிறது. குடும்பம் என்ற கடலுக்குள் (பந்தங்கள்) உறவுகள் மூழ்கிபோகின்றன.
ஏழைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்க கூடிய கண்ணாடியாக, இந்தப்படம் நாகர்கோவில், கன்னியாகுமரி, இராமேஸ்வரம், கேரளா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
ஹோலி மேன்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக, அனில் கொட்டாரக்கா என்பவர் தயாரிக்கிறார். நடிகர்களாக ஷஜி, சிலங்கா, ஷைனா, நஜ்மல் என்பவர்கள் புதுமுகங்களாக நடிக்க, மேலும், மோகன்சர்மா, அழகு, கிரேன் மனோகர், அருள் மணி, சீமாஜி நாயகர், ரிந்து ரவி நடிக்கிறார்கள்.
இசை - முகமது அலி, கதை, திரைக்கதை, வசனம் அட்வகேட் ஆர்.அஜய்குமார் எழுத, வி.கே. பிரதீப் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் சுந்தர் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.