தினமலர் விமர்சனம்
குறும்படம் எனச் சொல்லி குறைச்ச காசு கொடுத்து, என்னை ஏமாற்ற பெரிய திரைப்படம் எடுத்து வௌியிட முயற்சிக்கின்றனர்... என பாபி சிம்ஹாவும், குறும்படம் மூலம் திரையுலகிற்கு வந்த பாபி சிம்ஹாவுக்கு, எடுக்கும் போதே இது குறும்படமா.? திரைப்படமா.? என்பது தெரியாதா.? கூடுதல் சம்பளத்திற்காக இடையில் கிடைத்த பாப்புலாரிட்டியை காசாக்கும் எண்ணத்தில் இப்படி ஜிகர்தண்டாவுக்கு முன்னமே ஒப்புக்கொண்டு நடித்த இந்தப்படத்திற்கு எதிராக மனசாட்சியே இல்லாமல் கண்டபடி கூப்பாடு போடுகிறார்... என இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.மருது பாண்டியன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுக்க, ஒரு வழியாக கூச்சல், குழப்பங்கள் ஒருமாதிரி அடங்கி வரவேற்கும் படி திரைக்கு வந்திருக்கிறது சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படம்!
கதைப்படி, செல்லப்பாண்டி - பாபி சிம்ஹாவும், கார்த்திக் - லிங்காவும் அறை நண்பர்கள். கார்த்திக் எனும் லிங்கா, கை நிறைய சம்பளம் வாங்கும் ஐ.டி. இளைஞன். செல்லப்பாண்டி - பாபி சிம்ஹா, சினிமா கனவுகளுடன் வாய்ப்பு தேடி அலையும் சினிமா உதவி இயக்குநர். சக அறை நண்பர்களும் பாபி சிம்ஹா டைப் இளைஞர்களே!
இந்நிலையில் அவசர வேலையாக ஊருக்கு செல்லும் கார்த்திக் எனும் லிங்காவிடம், அவரை யதேச்சையாக சந்திக்கும், கணவரை விவாகரத்து செய்த நாயகி உதவி கேட்கிறார். ''சென்னையில், டிஎன்பிஎஸ்சி வேலைக்கு தான் கியாரண்டி...'' எனக் கூறும் கார்த்திக், அம்மணியை அறைக்கு அழைத்து வந்து தன் காதலியாக வேலை தருகிறார்! அதில் கர்ப்பமாகும் நாயகியை பேசி கர்ப்பத்தை கலைத்து கழற்றிவிட பார்க்கிறார் கார்த்திக்-லிங்கா! அது முடியாமல் போகவே அவரிடமிருந்து எஸ்கேப் ஆகும் கார்த்தியை அவரது காதலியிடம் காட்டிக் கொடுக்கிறார் சக அறை நண்பர் பிரபஞ்சயன்.
இதனிடையே செல்லப்பாண்டி - பாபி சிம்ஹாவுக்கும், அவரது புதிய ஹவுஸ் ஓனர் மகளுக்குமிடையில் காதல் வருகிறது. அதை அந்த பெண்ணிடம் வௌிப்படுத்துவதற்குள், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் நிச்சயம் ஆகிவிடுகிறது. இதனால் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்யும் பாபி மற்றும் நண்பர்கள் வீடு தேடி அலைவதையும், அவர் அடைக்கலம் கொடுத்தவர்கள் அல்வா கொடுக்கும் கதையையும், மேற்படி காதலர்கள் ஒன்று சேர்ந்தனரா..? இல்லையா...? எனும் கதையுடன் கலந்து கட்டி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கின்றார் இயக்குநர் எம்.மருதுபாண்டியன்.
சினிமா உதவி இயக்குநர் செல்லப்பாண்டியனாக பாபி சிம்ஹா வாழ்ந்திருக்கிறார். என்னதான் பணம், பஞ்சாயத்து... என்றாலும் படம் முழுக்க வரும் அவர் இப்படத்தை குறும்படமாக எடுக்கிறேன்... என ஏமாற்றிவிட்டார்கள்! என்பது டூ-மச்!
கார்த்திக்காக வரும் லிங்கா, அண்ணன் மகனுக்கு சைக்கிள் வாங்கித்தர இரண்டாயிரம் பணம் இல்லாது பரிதவிக்கும் பிரபஞ்சயன், நாயகியர் சரண்யா, பனிமலர், நிஷா மற்றும் அல்போன்ஸ் புத்திரன், கார்த்திக்.பி, செல்வம், மகுடபதி, விஜயலட்சுமி, சுகன்யா, ஜவஹர், சார்லஸ் சுரேஷ், மாஸ்டர் ஸ்ரீராம், ரவி சீனிவாசன், ராஜன் உள்ளிட்ட ஒவ்வொரு வரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
அதிலும் புதிய அறைக்கு அட்வான்ஸ் தர முடியாமல் ஹவுஸ் ஓனர் அம்மாவும், அவரது மகளும் தூங்கிய பின் வீட்டிற்கு வந்து, அவர்கள் எழுவதற்குள் அறையை விட்டு எஸ்கேப் ஆகும் இடங்களில் பாபிசிம்ஹா பலே சொல்லும் அளவிற்கு நடித்திருக்கிறார். அவர் தர்ம சங்கடப்பட்டு இரவில் படியில் பதுங்கி பதுங்கி காத்திருப்பதும், அதை பார்த்து ஆரம்பத்தில் அடாவடியாக பேசும் ஹவுஸ் ஓனர் மகள், அதன்பின் மனம் இறங்கி பாபிக்கு தன் அம்மாவுடன் சேர்ந்து ஆதரவு தரும் காட்சிகளும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருப்பதும், கார்த்திக்-லிங்காவின் காதல் விரசமில்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், முதலில் இரண்டாயிரம் பணத்திற்காக வில்லனாக தெரியும் சக அறை நண்பர் பிரபஞ்சயன், அதன்பின் கார்த்திக்கும், அவரது காதலியும் சேருவதற்காகத்தான் இத்தனையும் செய்திருக்கிறார் என்பது தெரிவதும், சென்னையில் பேச்சுலர்கள் படும்பாட்டை அழகாக படம்பிடித்திருப்பதும்... உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியும் ஒருவகையில் புதுசாக சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மேலும் ஹவுஸ் ஓனர் அம்மா, சிவாஜி பாடல்கள் ரசிகையாக வருவதும், அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் புதுசாக படமாக்கப்பட்டுள்ளது இப்படத்திற்கு கூடுதல் பலம்!
கிரண் கே.என்.னின் படத்தொகுப்பு, வினோத் ரத்தினசாமியின் ஔிப்பதிவு, கார்த்திக் நேத்தாவின் பாடல்கள், கேமலின் - ராஜாவின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், எம்.மருது பாண்டியனின் எழுத்து-இயக்கம் மற்றும் தயாரிப்பில், அடிக்கடி நீளம் நீளமாக வரும் புகைப்பிடித்தல், மதுகுடித்தல் காட்சிகளை மறக்கடிக்க செய்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்திற்கு பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை நிச்சயம் வரவேற்கும்! வரும்படி தரும்!!
மொத்தத்தில், ''சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - ரசிகர்களிடம் நல்வரவேற்பு பெற்றிருக்கிறது!''