தினமலர் விமர்சனம் » கார்த்திக் அனிதா
தினமலர் விமர்சனம்
ஒரே காம்பவுண்டிற்குள் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள். மாமன், மச்சான் என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டு அன்பு பாராட்டிக் கொள்கிறது. இந்த வீட்டு பையனும், அந்த வீட்டு பொண்ணும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். ஆனால் இருவருக்குள்ளும் காதல் இல்லை; நட்பு மட்டும்தான். ஒரு கட்டத்தில் பையன் கல்லூரி முதல்வரிடம் ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்கிறாள் பொண்ணு. அப்புறம்...? அப்புறமென்ன... அதுவரை நட்பாக இருந்த இருவரும் விரோதி ஆகிறார்கள். சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் ஒருவரை ஒருவர் போட்டுத் தாக்கிக் கொள்ள, அதுவே.. அந்த விரோதமே இருவருக்கும் இடையில் காதலை தூண்டுகிறது. இந்த காதல் தெரிவதற்கு முன்பே, பெண்ணின் அப்பா, அவசர அவசரமாக பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு பேசி முடித்து விட.., அதன் பின் தெரிய வந்த காதலால் ஹீரோவின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் போய் சேருகிறார். இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு இடையே பொண்ணும், பையனும் இணைந்தார்களா... இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கார்த்திக் எனும் கதாநாயகர் பாத்திரத்தில் புதுமுகம் ரத்தன் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். அனிதா எனும் கதாநாயகியாக மஞ்சு அலட்டல் இல்லாமல் நடித்து நாயகருக்கு இணையான ஸ்கோர் பெறுகிறார்.
இதுநாள் வரை வில்லன்களாக விஸ்ரூபம் எடுத்து வந்த கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும் முறையே நாயகன் - நாயகியின் அப்பாக்களாக சாப்ட் கேரக்டர்களில் அன்பாகவும், பண்பாகவும் நடித்து சபாஷ் போட வைக்கின்றனர். ஐம்பது அடியாட்கள் படைசூழ அடித் தொண்டடையில் இருந்து கத்தி, கதறும் கெட்-அப்களிலேயே பார்த்து பழகிப்போன இவர்களை, இப்படி வித்தியாசப்படுத்திக் காட்ட முயன்ற ஒரே காரணத்திற்காக இப்பட இயக்குனரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
தன்னை பிரின்ஸிபாலிடம் மாட்டி விட்டார் எனும் ஒரே காரணத்திற்காக அடிக்கடி நாயகியிடம் நாயகன் வம்பு செய்வதும், ஒரு பத்து ரூபாய் தாளில் நாயகன், நாயகியின் பெயரை எழுதி அது கடைசி நேரத்தில் ஆப்போசிட் பார்ட்டி கண்ணில் படுவதும் புளித்துப் போன போரடிக்கும் காட்சிகள் என்றாலம், அதிலும் புதுமையாக கோட்டா சீனிவாசராவுக்கும், ராஜன் பி.தேவுக்கும் இடையில் ஒரு பிளாஷ் பேக்கை வைத்து வித்தியாசப்படுத்தி விறுவிறுப்பை ஏற்படுத்தி இருப்பது இயக்குனரின் ஸ்கிரீன் ப்ளே ட்விஸ்ட்டுக்கு சான்று.
கே.ஜி.சங்கரின் ஒளிப்பதிவும், ஜாக் ஆனந்தின் இசையும், சாய் சுரேஷின் படத்தொகுப்பும் கார்த்திக் அனிதாவிற்கு பலம். புதியவர் ஸ்ரீஹரியின் திரைக்கதையும், இயக்கமும் இன்னும் சற்று வேகம் எடுத்திருந்தால் கார்த்திக் அனிதா கலக்கலாக இருந்திருக்கும்.
கார்த்திக் அனிதா : சில இடங்களில் கலக்கல் தாதா - சில இடங்களில் சொதப்பல் சோதா...!