தினமலர் விமர்சனம்
ரிச்சர்டு - ஹனி பிரின்ஸ் ஜோடியுடன் செந்தில், சங்கர் கணேஷ், மெர்குரி சத்யா, கும்கி அஸ்வின் கிங்காங், கஞ்சாகருப்பு, வையாபுரி, பவர்ஸ்டார் சீனிவாசன், சாம் ஆண்டர்சன், போண்டாமணி, பெஞ்சமின், வேல்முருகன், சேஷூ என ஒருபெரும் காமெடி பாட்டாளமே நடித்திருக்கும் காமெடி - திகில் படம் தான் மகாராணி கோட்டை!
மகாராணி கோட்டை எனும் ஒரு பெரும் பாழடைந்த திகில் பங்களாவை சங்கர் கணேஷிடமிருந்து விலைக்கு வாங்குகிறார் ஹீரோ ரிச்சர்டு. அந்த பங்களாவில் ஆவி, பேய், பிசாசு... என ஏகப்பட்ட அச்சுறுத்தல் அயிட்டங்கள் உலா வருகின்றன... என ஆயிரம் கதைகள் வௌி உலகில் சொல்லப்பட்டாலும், அதுப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த பேய் பங்களாவில் தன் நண்பர்கள் கும்கி அஸ்வின், வேல்முருகன் மற்றும் புதிய தோழி ஒருத்தர்.. உள்ளிட்டவர்களுடன் கூத்தடிக்கிறார் ரிச்சர்டு.
அந்த பங்களாவை ரிச்சர்டுக்கு விற்ற பின்பும் அங்கேயே வாசம் செய்யும் சங்கர் கணேஷ், செந்தில் உள்ளிட்டவர்களின் அறிவுரை, பயஉரையையும் தாண்டி அங்கேயே வாழும் ரிச்சர்டின் நண்பர்கள், ஒவ்வொருத்தராக அகால மரணமடைகின்றனர்! இதற்கெல்லாம் காரணம் மகாராணி கோட்டையில் இருக்கும் பேய், பிசாசு தான் என்று ஊருக்குள் பேசுகிறார்கள். அதை நம்ப மறுக்கும் ரிச்சர்டு எடுக்கும் ஆக்ஷன் அவதாரமும், அதில் குட்டு உடைந்து கொட்டப்படும் சங்கர் கணேஷ், செந்தில் பெஞ்சமின் உள்ளிட்டவர்களின் காமெடி கலாட்டாவும் தான் மகாராணி கோட்டை மொத்தப்படமும்! இப்படத்தில் காமெடி சீன்கள் சீரியஸாகவும், சீரியஸ் சீன்கள் காமெடியாகவும் இருப்பது இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத புதுசு!
நாயகர் ரிச்சர்டு வருகிறார் போகிறார், பங்களா வாங்குகிறார், உடம்பை காட்டுகிறார், டூயட் பாடுகிறார், சண்டை போடுகிறார், இறுதியில் இந்த உலகத்தில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை என்று நீதி கூறுகிறார். எல்லாம் எதற்காக என்பது புரியாத புதிர்!
ஹனிபிரின்ஸ், விசாலினி, சதீஷ்வரி உள்ளிட்ட புதிய பெண் நடிகைகள் மாதிரியே பிரபல காமெடியன்கள் செந்தில், கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசர், வையாபுரி, போண்டாமணி, வேல்முருகன், கும்கி அஸ்வின், கிங்காங், பெஞ்சமின், சாம் ஆண்டர்சன் உள்ளிட்டவர்களும் வருகிறார்கள், சிரப்புதான் வரமாட்டேன்... என்கிறது. இவர்கள் போதாது என்று இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மெர்குரி சத்யா, சேஷூ முனுசாமி உள்ளிட்டவர்களும் கடிக்கின்றனர். பாவம் ரசிகன்!
யூகே.முரளியின் பாடல்கள் இசை ஓ.கே. என்றாலும், பின்னணி இசை காதை பிளக்கிறது. டான்பாஸ்கோவின் படத்தொகுப்பு படுத்தி எடுக்கிறது. ஜெய்சங்கரின் நடனம், புயல்சேகரின் சண்டைபயிற்சி இரண்டும் கொஞ்சம் ஆறுதல்! ஆனாலும், புதியவர் வினோத் குமாரின் எழுத்து-இயக்கத்தில், கடத்தல் பொருட்களை மறைத்து வைக்க பயன்படும் அந்த பாழடைந்த பங்களாவை சங்கர் கணேஷ் அண்ட் கோவினர் ஏன் விற்க வேண்டும், அதன்பின் பேய், பிசாசு... என மகாராணி கோட்டையை வாங்கியவர்களை ஏன்? பயமுறுத்தி பந்தாட வேண்டும்.? எனும் கேள்விக்கு கடைசி வரை விடை தெரியாதது புரியாத புதிராகவே இருப்பது மகாராணி கோட்டை திரைப்படத்தை மிகுந்த லாஜிக் ஓட்டைக்கு உள்ளாக்கிவிடுவது பலவீனம்!
மொத்தத்தில் மகாராணி கோட்டை - லாஜிக்ஓட்டை!