விமர்சனம்
--------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
பத்து வருடத்துக்கு முன்னால் வந்த படம் The Invisible man கதையின் தழுவல், அதன் நீட்சியாக இந்தப் படம் இருக்குமோ என்ற ஆர்வத்தை ஆரம்பக் காட்சி ஏற்படுத்துகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இதுவும் பேய் வீடு, குடியிருப்பவர்களை மிரட்டுவது, பேயோட்ட வந்தவர்களையே ஓட்டுவது என்ற மாமூல் பேய்ப் படம்தான்.
ஆரம்பத்தில் பேய் வீட்டில் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் படம் தானாக விழுவது, கண்ணாடிச் சிதறல்கள் தரையில் இருந்து எழும்புவது என்று திகிலடிக்க வைக்கிறார்கள். நேரம் ஆக ஆகப் பேயின் சேட்டைகள் மிக அதிகமாகி நமக்குச் சோர்வூட்டுவதென்னவோ நிஜம்.
பேயைப் பிடிக்கப் போலீஸ் வரும் காட்சிகள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அதையே டெவலப் செயதிருந்தால்கூடப் படம் தேறியிருக்கும். யோகிபாபுவின் காமெடியும், மலையாள மாந்த்ரீகி(?) பேயோட்ட முனைவதும் இழுவை.
சூப்பர் மார்க்கெட் காட்சியும் கருணாஸ் பேயை அடைய முயலும் இடங்களும் விரசம். சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் வேறு.
பேய்க்கூடவே பீட்ஸா சாப்பிடுவேன், நம்ம ஷேடோ நம்மள விடக் கருப்பா இருக்கே, நான் லோக்கல் ரவுடி, எஸ்.டி.டி. ரவுடி எல்லோரையும் சமாளிப்பேன் என்பது போன்ற ஓரிரு வசனங்கள் சிரிப்பலையை உண்டாக்குகின்றன.
ஒரே ஒரு பாடல் சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? என்ற புகழ்பெற்ற இலங்கை மெட்டில், சின்னகுடி நாத்தனா, சிம் கார்டை மாத்தினா என்று குத்துப்பாடலாக உருமாறிக் காதைக் கிழிக்கிறது.
கதாநாயகனின் கைகளும் கால்களும் இடம் மாறுவதுபோன்ற ஓரிரு கிராஃபிக்ஸ் காட்சிகள் தேவலாம். மற்றவையெல்லாம் மாயாபஜார் காலத்து சிஜி!
கதாநாயகின் காதலியாக ஓரிரு சீன்களில் நடிப்பவர் கையை ஆட்டி ஆட்டி வசனம் பேசுவது அமெச்சூர்த்தனம்.
பேயாக வரும் கன்னக்குழிக் கன்னுக்குட்டி ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு, வெண்ணிற ஆடை உடுத்திப் பதுமை போல வந்துபோவதைத் தவிர வேறு வேலை இல்லை.
பலவிதமான சாகசங்களைப் புரியும் பேய்க்குத் தான் குடியிருக்கும் வீட்டை இடிக்க வருபவர்களை விரட்ட ஏன் முடியவில்லை என்பது அந்தப் பேய்க்கே வெளிச்சம்! அநேகமாகப் பேயே அச்சப்படுவதும் அழுவதும் மட்டுமே புதுமை என்று சொல்லலாம். போதாக்குறைக்குப் படத்தின் முடிவு தெளிவில்லாமல் இருக்கிறது.
ஜித்தன் 2: சுத்தம்!
தியேட்டரில் திருநெல்வேலி ரோஷன் கருத்து: இடைவேளைக்கு முன்னே கொஞ்சம் காமெடியாட்டு கிடக்கு, பெறகு படம் முழுக்க செரியில்லல்லா, ஏ சிரிப்பும் இல்ல, பயமும் இல்லல்லா. ஏ ரெம்ப அலுப்பால்ல கெடக்கு!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!