தினமலர் விமர்சனம்
முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் படம். எந்த ஒரு விஷயத்திலும் மெய்பொருள் காண்பது அறிவு என்றாலும் அது, அரிது என்பதை விளக்கியிருக்கும் இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் - நடிகையர் அனைவரும் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், டாக்டர்கள், இத்யாதி... இத்யாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைப்படி அமெரிக்காவில் வாழும் டாக்டர் ஷாமுக்கு திடீரென்று அறிமுகமாகும் நண்பர் ராஜா. அவர் தன்டன ஒரு ஈ.எஸ்.பி., பவர் ஆள்... அதாவது நடப்பதை முன்கூட்டியே சொல்லும் ஆசாமி என காட்டிக் கொண்டு டாக்டர் ஷாமிடம் நெருங்குகிறார். அப்படி நெருங்கிய பின் அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் நடந்தேற, ஒரு கட்டத்தில் டாக்டர் ஷாம், அவரது நிருபர் மனைவி தேவியாலேயே இறந்து போவார் என்று ஜாதகம் - பாதகம் எதுவும் பார்க்காமல், எது பற்றியும் கவலைப்படாமல் கூறுகிறார். இதுபற்றி டாக்டர் ஷாம் குடும்ப நண்பர் விஷ்வாவிடம் கூற, விஷ்வாவிற்கு ராஜா மீது சந்தேகம் வருகிறது. அதன் விளைவு... ராஜாவைப் பற்றி துப்பறிய கிளம்புகிறார் விஷ்வா. ஷாமிடம் ராஜா சொன்னதெல்லாம் எப்படி நடந்தது? உண்மையில் ராஜா யார்? டாக்டர் ஷாம் இறந்தாரா? என்பதை விளக்குகிறது படத்தின் மீதிக் கதையும், க்ளைமாக்ஸூம்!
டாக்டர் ஷாமாக கிரிஷ்பாலா, அவரது நிருபர் மனைவி தேவியாக அனுஷா, நண்பர் விஷ்வாவாக நாராயண், ராஜா எனும் கவுதமாக குமார் உள்ளிட்ட அனைவரும் பெரிய நடிகர்கள் போல் பிரமாதமாக நடித்துள்ளனர். எல்லோரும் அமெரிக்கா வாழ் ஈழ-இந்திய தமிழர்களாம். நம்பவே முடியவில்லை. பேஷ்! பேஷ்!!. பொருளாதார நெருக்கடியில் மேலை நாட்டு வேலைகள் போனாலும் நடித்து பிழைக்கலாம்!!
டாக்டர் ஷாமின் மனைவி தேவியை பழிவாங்க நினைக்கும் ராஜா, அதற்காக அத்தனை நாடகங்கள், அத்தனை கடத்தல், ஒரு பிஞ்சுக் குழந்தையை கொலை செய்வது எல்லாம் ஓவர். ஆனால் அதையெல்லாம் ஓவர்டேக் செய்து படத்தை தூக்கி நிறுத்துகிறது, டாக்டர் ஷாமாக வரும் கிரிஷ்பாலாவின் கனமான நடிப்பு, நிருபர் தேவியின், நடிகர் மோகம், கிரிஷ் எல்டிரஜ்ஜின் ஒளிப்பதிவு, ராகுலின் பாடல் இசை, ஜான் மேஷாயின் பின்னணி இசை, நட்டிகுமார்- கிரிஷ் பாலாவின் திரைக்கதை இயக்கம் எல்லாமும்!!
மெய்ப்பொருள் : மேலான பொருள்!