தினமலர் விமர்சனம்
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கைகூலிகளுக்கும், காசுக்கும், நம்மூர் படைப்பாளிகள் சிலரும் விலை போகக்கூடும் என்று சில வருடங்களாக வந்து கொண்டிருக்கும் தகவல்கள் உண்மைதானோ.?! என புருவம் உயர்த்தும் விதமாக, இலங்கையில் சிங்களர்களால் நடந்த இனப்படுகொலைகளையும், கற்பழிப்புகளையும் நியாயப்படுத்தும் விதமாகவும், தமிழினப்போரினை கொச்சைபடுத்தும் விதமாகவும், சிங்களர்களை நல்லவர்களாகவும், தமிழர்களை சண்டைக்காரர்களாகவும், புத்தபிட்சுக்களை உத்தமர்களாகவும் சித்தரித்து வந்திருக்கும் படம் தான் சந்தோஷ் சிவனின், இனம்! அவர் இயக்கத்தில் இதை இனங் கண்டு கொள்வதே சற்று கடினம் என்பது தான் இப்படத்தின் பெரும்பலம்!
சரிதாவும், கருணாஸூம் அடாத போரிலும் இடைவிடாது நடத்தும் ஒரு திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்று அவர்களது கருணை காப்பகத்திலேயே தங்கி வாழும் சிறுவர் சிறுமியரை, ஒருகட்டத்தில் போராளிகள் போரில் ஈடுபட அழைத்து போவதாகவும், அவர்களை காபந்து செய்ய அவர்களுக்கு சரிதா, குழந்தை திருமணம் செய்து வைப்பதாகவும், அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் பதுங்கி இருக்கும் போராளிகளை அழிக்க, அப்பகுதியிலும் ஒருநாள் இராணுவம் குண்டுமழை பொழிவதாகவும், போரில் இருந்தும், போராளிகளிடமிருந்து குழந்தைகளை காக்க அவர்களுக்குள் மாலைமாற்றி ஊரை விட்டு அனுப்பி வைக்கும் சரிதா, போரில் அடிபட்டு உயிரை விடுவதாகவும், அங்கிருந்தும் கிளம்பும் சிறுவர், சிறுமியர் இலங்கை இராணுவத்தால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கற்பழிக்கப்படுவதாகவும், அதில் ஒருத்தி உயிரை விடுவதாகவும், ஒருத்தி ஊருக்கு ஒதுக்குபுறமான குட்டையில், கற்பழிக்கப்பட்ட மொத்த உடம்பையும் கழுவிக் கொண்டு ஊரை விட்டு கிளம்பும் கருணாஸ் கோஷ்டியுடன், இராமேஸ்வரத்திற்கு வந்து மொத்த கதையையும் கண்ணீரும், கம்பளையுமாக அகதிகள் முகாமில் கருணையுடன் காது கொடுத்து(!) காத்திருக்கும் ஒரு இந்திய அதிகாரியிடம் சொல்ல ஆரம்பித்து முடிப்பது தான் இனம் படத்தின், தமிழனை சினம் கொள்ள வைக்கும் கதைக்களம்!
அதில் கதாநாயகன் ஒரு ரெண்டுங்கெட்டான்... சோடாபுட்டி கண்ணாடி, ஜொள்ளுவாய், தொண தொண பேச்சு... என இந்த பாத்திரம் மூலம் ஈழத்தமிழர்கள் அத்தனை பேரையும் திட்டமிட்டு பரிகாசித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்சிவன் என்பது இன்னும் வேதனை!
போருக்கு சிறுவர்களை போராளிகள் அழைத்து செல்வது, அப்படி போய் அடுத்தமுறை திரும்பும் சற்றே வளர்ந்த இளைஞனிடம் சரிதா, உன் படிப்புக்கு நீ எங்கேயோ போக வேண்டியவன், இதெல்லாம் தேவையா...?! என கேட்பது, அத்தியாவசிய பொருட்களுக்கு தனியாக ரேஷன் கடை, ஊர், ஒழுங்கு, காவல், கட்டுப்பாடு... என உலகில் எந்த திசையிலும் போராளிகள் வாழாத விதத்தில் சுயகட்டுப்பாட்டுடன் போராளிகள் வாழ்ந்த ஈழத்தில், தமிழ் சிறுவர்கள் புத்தபிட்சுவிடம் ஒரு மாதுளம் பழத்திற்காக கையேந்தும் காட்சி, சிங்கள ராணுவத்தினர் ஐந்தாறு பேர் கற்பழித்த பின் அலட்டிக்கொள்ளாமல் அந்த உடம்பை குட்டையில் கழுவி திரும்பும் படியாக கதாநாயகி சிறுமியின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம், சிங்கள வீரர்களுக்கும் குடும்பம் குழந்தை குட்டி உண்டென்று சொல்லும் சித்தரிப்பு., நம் வீரர்கள் நல்லவர்கள்தான், போரினால் இப்படி ஆகி விட்டார்கள் என ஓர் அதிகாரி கொக்கரிப்பது., உச்சகட்டமாக ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சம், இரண்டரை லட்சம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதாக தமிழர்கள் தரப்பில் சொல்லப்பட்டு வரும் வேளையில், வெறும் நாற்பதாயிரம் தமிழர்கள்தான் போரில் பலியானதாக ராஜபக்ஷேவின் கருத்தையே பிரதிபலித்திருப்பது உள்ளிட்ட விபரீதங்களை வைத்து பார்க்கும் போது சந்தோஷ்சிவன் அண்ட் கோவினர், ராஜபக்ஷே கைக்கூலிகளிடம் விலை போயிருப்பது புரிகிறது. இப்படத்தை வாங்கி வெளியிட்டு லிங்குசாமியியும் துணைபோயிருப்பதின் ரகசியம் தான் புரியாத புதிர்!
ஆகமொத்தத்தில், இனம் (இவர்களுக்கு பணம்) - நோகுது மனம்!
------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இலங்கையில் கோர யுத்தம் நடந்த நேரத்தில், அதன் மையப்பகுதியில் சிக்கிக் கொண்ட பதைபதைக்கும் உணர்வை நம்முள் ஏற்படுத்துகிறது "இனம்.
அந்தக் கொடூர நேரத்தில் சிங்கள வீரர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமான ஓர் அபலைப் பெண்ணின் கதை வழியே நகர்கிறது படம். சந்தோஷ் சிவனின் கேமரா, ரீ-ரெகார்டிங், லொக்கேஷன், வண்ணம் என்று சோக உணர்வை, உறுத்தலைக் காண்பிக்கிறது. அந்த "ஸ்பெஷல் சைல்ட் சிறுவன் கரணுக்கு கட்டிப் பிடித்து ஒரு கிஸ்!
சுனந்தா, கருணாஸ், சரிதா, இலங்கைத் தமிழ் எல்லாமே நன்றுதான். ஆனால் சிங்கள வெறியர்களை நியாயப்படுத்துவது போல் பல காட்சிகளை அமைத்தது ஏனோ? என்ன துணிவோ? ("எடுத்தவன் யார்னு புத்தியைக் காம்ச்சுட்டான்! "சிங்களத்தான் ஃபண்ட் கொடுத்திருப்பானோ? - தியேட்டர் கமெண்ட்!)
இனம் - கண்ணீர்த்துளி!
குமுதம் ரேட்டிங் - ஓகே