தினமலர் விமர்சனம் » ஆல் இன் ஆல் அழகு ராஜா
தினமலர் விமர்சனம்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த இயக்குநர் ராஜேஷ்.எம்.-ன் மீது அதீத நம்பிக்கை வைத்து கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ் மீதான கார்த்தியின் நம்பிக்கையை இயக்குநர் ராஜேஷ் எதிர்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்தாரா? ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலினுக்கெல்லாம் வெற்றியை தேடித்தந்த ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தியும் வெற்றி வாகை சூடுவாரா? இல்லையா? என்பதை இனி பார்ப்போம்...
பிரபு-சரண்யா தம்பதியின் ஒற்றை ஆண் வாரிசு அழகுராஜா கார்த்தி. தான் நடத்தும் லோகல் கேபிள் சேனலை நம்பர் ஒன் சேனல் ஆக்கிய பின்புதான் கல்யாணம் என கண்ட கண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தன் சேனலில் ஒலி, ஒளிபரப்பி வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருபவர் கார்த்தி. அவர் தன் நண்பர் கல்யாணம் என்னும் சந்தானத்தின் காதர்பாய் பிரியாணி ஆசைக்காக, ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறார். போன இடத்தில் அந்த மண்டபத்தில் நடக்கும் லைட் மியூசிக்கில் தப்பும் தவறுமாக பாடும் கொப்பும் குலையுமான சித்ராதேவிபிரியா என்னும் காஜல் அகர்வால் மீது காதல் வயப்படுகிறார். தனக்கு பாட்டு சரவரவில்லை என்றால் பரதம் என்று கலைத்துறையில் ஏதாவது சாதித்த பின்புதான் திருமணம் என கார்த்தி மாதிரியே விரதமிருக்கும் காஜல். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப பாட்டும் வராமல் ஆட்டமும் சரிவராமல் கார்த்தியின் காதலுக்கு இல்லை இல்லை.. கடலைக்கு சற்றே மனம் இறங்குகிறார், இளகுகிறார். ஆனால், இந்த சமயத்தில் கார்த்தியின் அப்பா பிரபு இவர்களது காதலுக்கு தடை போடுகிறார். காரணம் பிரபுவின் பிளாஷ்பேக் காதல்! காஜலின் தாத்தா ராமசாமி என்னும் நாசரிடம் டிரைவராக வேலைபார்க்கும் பிரபுவுக்கு நாசரின் மகள் மீனாட்சி என்னும் ராதிகா ஆப்தே மீது காதல்! அந்த காதல் நாசருக்கு தெரிய வருவதற்கு முன்பே நாசரிடம் பிரபுவை (பிரபுவின் இளவயதிலும் கார்த்தியே நடித்திருப்பது மட்டுமே இம்மாம்பெரிய படத்தில் புதுமை, பொருத்தம்!) வேலைக்கு சேர்த்துவிட்ட கல்யாணம் சந்தானத்தின் அப்பா காளி சந்தானம் பிரபுவை (அதாங்க கார்த்தியை) வேறு ஒரு மேட்டரில் சிக்கவைத்து வேலையை விட்டு தூக்குகிறார். அதனால் பிரபு-ராதிகா ஆப்தேவின் காதல் பணால் ஆகிறது. அந்த கடுப்பில் கார்த்தியின் காஜல் மீதான காதலுக்கு நோ சொல்கிறார் பிரபு. அப்பா சந்தானம் செய்த தப்புக்கு பிள்ளை சந்தானம் பிராயச்சித்தம் தேடி பிரபுவின் சம்மதத்துடன் கார்த்தி-காஜலின் காதலை சேர்த்து வைக்க, ஆல் இன் ஆல் அழகுராஜா இனிதே முடிகிறது! இனிதேவா.?!
ஏதோ டாப்-10, படவரிசை பத்து, நகைச்சுவை கலாட்டா உள்ளிட்ட சின்னத்திரை டிராமா மாதிரியான கதையை துணிச்சலாக படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-ஐ பாராட்டியே ஆகவேண்டும்! அதில் துணிச்சலாக நடிக்கவந்த கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, நாசர், சரண்யா, வி.எஸ்.ராகவன், ராதிகா ஆப்தே, கோட்டா சீனிவாசராவ், ஆடுகளம் நரேன், ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு அபார துணிச்சல்தான்.
இந்த காமெடி டிராமாவுக்கும் பேமிலி டிராமாவுக்கும் இசையமைத்திருக்கும் எஸ்.தமன், ஒளிப்பதிவு செய்திருக்கும் சக்திசரவணன் உள்ளிட்ட எல்லோருக்கும் இப்படத்தை எழுதி, இயக்கி இருக்கும் ராஜேஷ்.எம் மாதிரியே ரொம்பவே துணிச்சல்! இதை படமாக தயாரித்திருக்கும் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு துணிச்சலோ துணிச்சல்! ஆனால் அந்த துணிச்சல், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருக்காது என்பதுதான் படக்குழுவினருக்கு எரிச்சல்! ஆக மொத்தத்தில் ப்ளாஷ்பேக்கில் பிரபுவாக நடிக்கும் கார்த்தி போர்ஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஆல் இன் ஆல் அழகுராஜா - அல்வாராஜா! ராஜேஷ்.எம்-க்கு சரக்கு தீர்ந்துபோச்சா...?------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ ஒரு லோக்கல் டி.வி. சேனல் நடத்திட்டு இருக்காரு. அவர் எதேச்சையாக ஒரு விழாவில் பாடகியை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கி லவ்வுறார். அவர் தன் லவ்வை ஹீரோயின் கிட்டே வெளிப்படுத்தி ஓக்கே வாங்குவது எப்படி என்பதை இடைவேளை வரை ஓட்டிடுறாங்க. பொண்ணு ஓக்கே சொன்னதும் ஹீரோவோட அப்பா அந்தப்பொண்ணைப்பார்த்து இந்தப்பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்றார். அது ஏன்? அப்படிங்கறதுக்கு ஒரு பிளாஸ்பேக்.
ஹீரோவோட அப்பா ஒரு சினிமா தியேட்டர் ஓனர் கிட்டே ஒர்க் பண்ணிட்டு இருந்திருக்கார். அப்டியே ஓனர் பெண்ணு அவரை லவ்வுது. ஆனா ஓனர் இறந்துட்டதா வந்த தவறான ஒரு போன்கால் ஹீரோவோட அப்பாவின் வாழ்க்கையையே திருப்பி போட்டுடுது. ஓனர் அவரை அவமானப்படுத்தி அனுப்பிடறாரு. ஓனர் பொண்ணுக்கும், ஹீரோவோட அப்பாவுக்கும் வேற வேற இடத்துல மேரேஜ் ஆகிடுது. ஹீரோவோட அப்பாவோட ஓனரோட பேத்தியைத்தான் இப்போ ஹீரோ லவ்விட்ட இருக்கார். இதுக்கு மேல என்னாச்சுன்னு தில் இருப்பவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.
படத்தோட ஹீரோ, வில்லன், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என சந்தானத்துக்கு 3 வேடங்கள். மனுசன் பட்டாசைக்கிளப்பிட்டார். பொதுவாக எம்.ராஜேஷ் படங்கள்ல சந்தானத்துக்கு முக்கியத்துவம் இருக்கும், ஆனா இந்தப்படமே சந்தானத்தை நம்பி தான் இருக்கு. பெண் வேடத்தில் வரும்போது அரங்கம் அதிருது. க்ளைமாக்சில் அவர் கோட்டா சீனிவாசனிடம் மாட்டிக்கிட்டு டான்ஸ் மூவ்மெண்ட் கொடுக்கும்போது சிரிப்பலை பரவுது. பிளாஸ்பேக்கில் வில்லன் ரோலில் சந்தானம் வருவது ஓக்கே. ஆனால் நம்பியார் மாதிரி மேனரிசமும், அவர் முகத்தில் சிவப்பு லைட் அடிப்பதும் எடுபடவில்லை. 1980களில் வந்த தமிழ்ப்படங்களை கிண்டல் பண்ணுகிறேன் பேர்வழி என யூனிட் அடிக்கும் அபத்தங்கள் போர் அடிக்கிறது.
நாயகியாக காஜல் அகர்வால். பாலைவனத்தில் கிடைத்த அருண் ஐஸ்க்ரீம் மாதிரி இருக்கிறார். இவர் சேலையில் வந்தாலும் அழகு, மாடர்ன்ஸ் டிரஸ்சில் வந்தாலும் அழகுதான்.
சொல்ல மறந்துட்டேன். நாயகி காஜல்க்கு ஜோடியாக கார்த்தி. பருத்தி வீரன் எனும் ஒரே ஒரு படம் மூலம் பிரமாண்டமான வெற்றியைச்சந்தித்த நல்ல நடிகர். காலேஜ் பெண்களின் ஏகோபித்த ஆதரவை கொஞ்சம் படங்களின் மூலமே பெற்றவர், மோசமான கதைத்தேர்வால் பலவீனப்பட்டு இருக்கிறார். படத்தில் இவரும் , சந்தானமும் மாத்தி மாத்தி சிரிச்சுட்டே இருப்பது ஆடியன்சை கடுப்படிக்கிறது. எஸ் வி சேகர் நாடகங்களில் எல்லாம் அவர் பாட்டுக்கு டைமிங்க் விட் அடிச்சுட்டே இருப்பார் , ஆனால் முகத்தில் சிரிப்பிருக்காது , பார்க்கும் ரசிகர்கள் சிரிப்பாங்க , ஆனால் இதில் நேர் எதிர் . இவங்க சிரிக்கறாங்க , ஆனா ரசிகர்கள் சிரிக்கலை
பிரபு, சரண்யா ஹீரோவுக்கு பெற்றோரா வர்றாங்க. பிரபுவின், பிளாஸ்பேக்கில் கார்த்தி, பிரபு கேரக்டரில் சுதாகர் கால கிராப் தலையோடு வருவது எடுபடவில்லை. கோட்டா சீனிவாசராவ் தெலுங்குப்படங்களில் வில்லனாகக்கலக்கியவர் இதில் காமெடி பண்ணுகிறார். ஆனால் ரசிக்க முடிகிறது.
சி.பி.கமெண்ட் : தொடர்ந்து 3 வெற்றிப்படங்கள் கொடுத்த எம்.ராஜேஷ், முதன் முதலாக சறுக்கி இருக்கிறார். கதையை நம்பாமல் சந்தானத்தை நம்பி இருக்கிறார்.
-----------------------------
குமுதம் விமர்சனம்
காஜலைப் பார்த்ததும் கார்த்திக்கு காதல் வருகிறது.
ஆனால் அவர் ஒரு ஜெனிலியா அல்லது லைலா! பாட்டே வராமல் தான் பெரிய சித்ரா என்றும், டான்ஸே வராமல் தான் பெரிய ஷோபனா என்றும் நம்புகிறார். பணத்துக்காக ஊரே அதற்கு ஒத்து ஊத, கார்த்திதான் காஜல் ஒரு வேஸ்ட் பீஸ் என்ற உண்மையை உணர்த்துகிறார்.
அப்புறம் என்ன, காதல்தான்!
ஆனால் கல்யாணத்துக்கு தடா போடுகிறார் கார்த்தியின் அப்பா பிரபு. ஏன்?
லாங் லாங் எகோ 30 இயர்ஸ் எகோ... கார்த்தியின் காதலி வீட்டுப் பெண்ணை அந்த வீட்டில் வேலை பார்க்கும் பிரபு காதலிக்க கல்யாணம் கூடி வரும் வேளையில் அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருக்கும்போதே செத்துவிட்டதாக பிரபு ஒரு தவறான தகவலைச் சொல்லிவிட, காதல் டமால்!
எனவே... அப்புறம் என்ன ஆச்சு என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
பளிச்சென்று இருக்கிறார் கார்த்தி. காஜலின் மூக்கை உடைக்கும் காட்சிகளில் தனியாகத் தெரிகிறார். அதுவும் பிரபு கெட்டப்பில் வருவதும், ஆடுவதும் வெரி நைஸ்!
ஒன்றும் தெரியாத பெண் பாத்திரத்துக்கு காஜல் எப்படி சரிப்படுவார் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. பாடல் காட்சிகளில் பார்ட்டி பட்டையைக் கிளப்புகிறது! க்ளைமாக்சில் காதலனும் தந்தையும் தத்தம் நியாயத்தைச் சொல்லும் உருக்கமான காட்சியில் ஒவ்வொரு நிமிடமும் தந்தை, காதலன் என்று காஜல் அலைபாயும் காட்சி கவிதை.
படத்தின் பெரிய பலமாக சந்தானத்தை நம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. வெற்றிலை பாக்கு போட்டபடி குதிரை போல் வந்து கனைக்கும் மேனரிஸம் உள்ள வில்லன் பாத்திரத்தை லேசாக ரசிக்க முடிகிறது.
காமெடி என்று நினைத்து சந்தானமும் கார்த்தியும் படம் முழுக்க சிரிக்கிறார்களே தவிர படம் பார்ப்பவர்கள் கையைக் கட்டிக்கொண்டு மெளனமாக இருக்கிறார்கள்.
சந்தானத்தைவிட கழைக்கூத்தாடியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் கொஞ்ச நேரம் வந்தாலும் கலகலக்க வைக்கிறார். சாட்டையால் தன்னை அடித்துக்கொள்ளும் கூத்தாடியான அவர், பிரபல பரதநாட்டியக்காரர் என்று காஜலிடம் அறிமுகம் ஆகி, சாட்டையை அடித்துக்கொள்வது போலவே நாட்டிய மூவ்மெண்ட்ஸை எடுத்துவிட, காஜலும் அதே போல் ஆட தியேட்டர் குலுங்குகிறது.
யாருக்கும் சொல்லாம உன்னைப் பார்த்த நேரம் என்று தமனின் இசையில் பாடல்கள் குளுகுளு புத்துணர்ச்சி.
ஒரே ஒரு சந்தேகம். தன் படங்களில் வெகு இயல்பாக நகைச்சுவையைத் தந்து வெற்றிக்கொடி நாட்டிய ராஜேஷுக்கு என்ன ஆச்சு!?
மொத்தத்தில்
அழகு ராஜா - 'மேக்கப் ஜாஸ்தி'!குமுதம் ரேட்டிங் - ஓகே.