ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ‛ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கிய ராஜமவுலி அதையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் தனது புதிய படத்தை தொடங்கி உள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அவருக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. என்றாலும் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ராவின் திருமணம் மும்பையில் நடைபெறுவதால் திருமணம் முடிந்து சில தினங்களுக்கு பிறகுதான் பிரியங்கா சோப்ரா இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.
அதனால் தற்போது மகேஷ்பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார் ராஜமவுலி. ஆக்ஷன் சாகச காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யா நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது. அதனால் இந்த முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் ராஜமவுலி - மகேஷ் பாபு டீம் கென்யா புறப்பட உள்ளார்களாம்.