அருவி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிதி பாலன் ஜெயா டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் சினிமாவில் 'அருவி' என்ற ஒரே படத்தில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுக்கு இணையான இடத்தை பிடித்தவர் நடிகை அதிதி பாலன். தொடர்ந்து வெள்ளித்திரையில் டாப் லிஸ்டில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்களில் அவர் கமிட்டாகவில்லை. இந்நிலையில் அவர் ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமாகவுள்ளார். பரதநாட்டிய டான்ஸரான அதிதி பாலன் ஜெயா டிவியின் 'தக திமி தக ஜனு' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சி முன்னதாக 'தக திமி தா' என்ற பெயரில் ஒளிபரப்பபட்டு 500 எபிசோடுகளை கடந்து தேசிய அளவில் சிறந்த நடன நிகழ்ச்சிக்கு வழங்கப்படும் ராபா விருதை பெற்றது. 'தக திமி தா' நிகழ்ச்சியை முன்னதாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான ஷோபனா, சுதா சந்திரன், பானுப்ரியா, சுகன்யா, மோகினி, அன்னி மாளவிகா உள்ளிட்ட பலர் தொகுத்து வழங்கியுள்ளனர்.
தற்போது புத்தம் புது வடிவில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள 'தக திமி தக ஜனு' நிகழ்ச்சியை நடிகை அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.