பல வருடங்களுக்கு முன் ''வைகாசி பொறந்தாச்சு'' எனும் சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் ராதா பாரதியின் இயக்கத்தில், நீண்........ட இடைவௌிக்கு பின் வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் ''நண்பர்கள் நற்பணி மன்றம்''. வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கிடைத்த எதிர்பார்ப்பை அதற்கு அடுத்தடுத்த படங்களிலேயே பெரிதாக பூர்த்தி செய்திராத ராதா பாரதி, இத்தனை வருடங்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பை இந்தப்படத்தில் எள்ளவேனும் பூர்த்தி செய்திருக்கிறாரா.?! என படம் பார்க்க போனால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது!
கதைப்படி, அந்த ஊரில் நண்பர்கள் நற்பணி மன்றத்தை நடத்திக் கொண்டு நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கும் ரகத்தை சார்ந்தவர் அறிமுகநாயகர் செங்குட்டுவன். ''ஆடுகளம்'' நரேன் - ஷர்மிளா தம்பதிகளின் மகனான செங்குட்டு, பெற்றோரின் உற்ற ஒரே செல்லப்பிள்ளை, அதனால் அவர் நினைத்தது எல்லாம் கிடைக்கிறது. அதுமாதிரியே செங்குட்டுவனின் சிறுவயது தோழியான காதலி அக்ஷ்யாவும், நாயகர் நினைத்தபடி அவருக்கு கிடைத்தாரா.? அல்லது பெற்றோரின் ''பிளாஷ்பேக்'' முன்விரோதத்தாலும், உற்றார் உறவினரின் 'உள்குத்து' குரோதங்களாலும் அந்த காதலி, செங்குட்டுவனுக்கு கிடைக்காமலேயே போனாரா.? எனும் அதரபழசு கதையும், அதற்ககேற்ற காட்சிகளும் தான் ''நண்பர்கள் நற்பணி மன்றம்'' படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்!
இதுமாதிரி கதையை 25 வருடத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி காட்சிப்படுத்தி, காட்சிக்கு காட்சி ரசிகர்களை கடுப்பேற்றுகிறார் இயக்குநர் ராதா பாரதி!
இயக்குநர் கேட்டதை அதற்கு ஏற்றமாதிரியே நடித்து தருகிறேன், பேர்வழி... என மேலும் கடுப்பேற்றுகிறார்கள் அறிமுக நாயகர் செங்குட்டுவனும், அறிமுக நாயகி அக்ஷ்யாவும். நடிப்பில் ரசிகனுக்கு ஆறுதல் தருவது நாயகனின் அப்பா கேரக்டரில் வரும் 'ஆடுகளம்' நரேனும், அம்மா ஷர்மிளாவும் தான். நாயகி அக்ஷ்யாவின் அப்பாவாக வரும் வைகாசி பொறந்தாச்சு தயாரிப்பாளர் அன்பாலையா பிரபாகரன், அந்தக்கால நடிப்பையே வழங்கி, மேலும் ரசிகனின் பொறுமையை சோதிக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் குத்துப்பாடல்கள் இசையும், செல்வாவின் ஓவியப்பதிவும், ஔிப்பதிவும் தான் செம கிளாஸ்! ஆனாலும், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், ''நண்பர்கள் நற்பணி மன்றம்'' - நற்பணி தானா.?, நல்திரை பாணி தானா..?!! மெய்யாலுமே ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் கவருமா...?!!! என்பது புரியாத புதிர்.
மொத்தத்தில், ''நண்பர்கள் நற்பணி மன்றம்'' - ''சுவாரசியமில்லா சின்னத்திரை பட்டிமன்றம்!''