தினமலர் விமர்சனம்
அஜித்குமாரின் 55வது திரைப்படம், தலயும், த்ரிஷாவும் ஜோடி சேர்ந்திருக்கும் நான்காவது படம், அஜீத்துடன் அனுஷ்கா ஜோடி போட்டிருக்கும் முதல்படம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வௌிவந்திருக்கும் திரைப்படம், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் திரைப்படம்... என தல ரசிகர்களை ரிலீஸான பிப்ரவரி-5 இன்று விடியற்காலை 3 மணி முதலே திரையரங்க வாசல்களில் திருவிழா கூட்டமாக ஆட்டம், பாட்டம் வேட்டு சப்தமென கூடி கும்மாளமிட வைத்திருக்கும் என்னை அறிந்தால் எப்படி இருக்கிறது? இனி பார்ப்போம்...
கேங்ஸ்டார், கேங்வார்... என்பார்களே அதுமாதிரி ஒரு ரவுடி கும்பலின் தலைவன் டேனியல் பாலாஜியின் துப்பாக்கி குண்டுகளுக்கு தன் அப்பாவி ஆசை அப்பா நாசரை சிறுவயதிலேயே பறிகொடுக்கும் தல அஜீத், தன் தாயின் எம்பிபிஎஸ்., கனவை நிராகரித்து, ஐபிஎஸ் ஆபிஸராகிறார். தன் அப்பாவை கொன்றவன் மாதிரியான கேங்ஸ்டார் ரவுடிகளை அவர்களது கூட்டத்திலேயே இருந்து கொண்டு கொன்று குவித்து, நாட்டுக்கு நல்லது செய்வது தான் தலயின் லட்சியம்.
இந்த லட்சியத்திற்காக அருண் விஜய் மூலம் ஒரு பெரும் போதை மருந்து கும்பலில் சேர்ந்து தானும் ஒரு தல என்பது மாதிரி செயல்படும் அஜீத், ஒரு கட்டத்தில் அந்த போதை மருந்து கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்புகிறார். அதில் ஜஸ்ட்-எஸ்கேப் ஆகும் அருண் விஜய்யின் கண்களுக்கு நம்பிக்கை துரோகியாக தெரிகிறார் தல அஜீத்.
அஜீத்துக்கு, கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரு பெண் குழந்தையுடன் தனித்து இருக்கும் பரதநாட்டிய மங்கை த்ரிஷா மீது இருக்கும் காதலை தெரிந்து கொண்டு, அஜீத்-த்ரிஷா திருமணத்திற்கு முதல்நாள் த்ரிஷாவையும், அவரது அப்பா அவிநாஷாயும் கொடூரமாக தீர்த்து கட்டுகிறார் அருண் விஜய். இதில் துடித்து போகும் அஜீத், த்ரிஷாவின் பெண் குழந்தையுடன் போலீஸ் உத்யோகமே வேண்டாம் என இந்தியா முழுக்க சில ஆண்டுகள் சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் ஊர் திரும்பும் தல அஜீத்தை தேடி வரும் அவரது நண்பர் சரவணன், தன் பெண் குழந்தை எழும்பூர் ரயில் நிலையத்தில் திடீர் என காணாமல் போனதாகவும், அவரை நீ நினைத்தால் கண்டுபிடித்து தரலாம்... என்றும் கதறுகிறார்.
உடனடியாக களம் இறங்கும் அஜித் தன் போலீஸ் நண்பர்கள் உதவியுடன் அந்த பெண் குழந்தையை மீட்கிறார். அந்த கடத்தல் கும்பலோ., வியாதியில் வீல்சேரில் இருக்கும் கோடீஸ்வரர்களுக்காக ஆட்களை கடத்தி., அவர்களது இரத்தத்தில் தொடங்கி இருதயம் வரை உடல் உறுப்புகள் அத்தனையையும் விற்று கோடிகளாக்கும் கொடூர மனம் படைத்த கும்பல்... அந்த கும்பலின் தலைவன், தல அஜித்தின் பங்காளி, பகையாளி அருண் விஜய். அருண்விஜய்யின் அடுத்த இலக்கு... அமெரிக்காவில் இருந்து திரும்பும் அனுஷ்காவின் உடம்பும் உறுப்புகளும். மீண்டும் போலீஸ் டூட்டியில் சேரும் தல அஜித், அருண் விஜய் கேங்கிடமிருந்து, அனுஷ்காவை எப்படி காபந்து செய்கிறார் என்பதுதான் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் மீதிக்கதை. இந்த கதையுடன் த்ரிஷாவின் மகளுடனான பாசத்தையும் அனுஷ்காவுடனான அஜித்தின் காதலையும் கலந்து கட்டி கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் கௌதம்!
தல அஜித் சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலிலும் சரி, இளம் பிராயத்து ஹேர் ஸ்டைலிலும் சரி அழகாக வந்து அதிரடி ஆக்ஷனில் அசத்தி இருக்கிறார். ஐ.பி.எஸ் ஆபீஸராக அவர் காட்டும் கம்பீரமும், நடை, உடை பாவனைகளும் தியேட்டரில் விசில் சப்தம் தூள் பறக்க செய்கிறது. த்ரிஷாவுடனான சென்டிமெண்ட் காதலிலும் சரி., அனுஷ்காவுடனான இன்ஸ்டண்ட் காதலிலும் சரி அஜித் சார் அசத்துகிறார். வாவ்!
த்ரிஷாவின் மகளை தன் மகளாக பாவித்து பாசம் காட்டும் இடங்களிலும், அப்பா நாசரின் ஆன்மா தன் உடன் இருந்து தன்னை, நேர்வழியில் நடத்துவதாக நம்பும் காட்சிகளிலும் கூட ரசிகர்களை சீட்டோடு கட்டிப் போட்டு விடுகிறார் தலை!
த்ரிஷா, கொஞ்ச நேரமே வந்தாலும், நச் என்று வந்து பச்சக் என்று தலையின் நெஞ்சத்தில் மட்டும் அல்லாது தல ரசிகர்களின் நெஞ்சங்களிலும் பசை போட்டு ஒட்டி இறுதியில் உச் கொட்ட வைக்கிறார். அனுஷ்கா தேன்மொழியாக விழியாலேயே நிறைய காதல்மொழி பேசி அசத்துக்கிறார்.
அஜித் படங்களில் வில்லனுக்கும் உரிய மரியாதை உண்டென்ற வகையில் அருண் விஜய் நிறையவே நடித்திருக்கிறார். ஆனாலும்., அத்தனை பெரிய போலீஸ் டீமிற்குள் புகுந்து புறப்பட்டு அஜித்தின் மகளை கடத்துவதும் அனுஷ்காவை தன்னிடம் ஒப்படைக்க சொல்லி மிரட்டுவதும் நம்பும்படியாக இல்லை.
அமிதாப் அபிஷேக் பச்சன்களின் உயரத்துடன் அனுஷ்காவின் உயரத்தை கம்பேர் செய்து அடையாறில் டிராபிக் எப்படி இருக்குன்னு? பார்த்து சொல்லுங்க...? என விவேக் கலாய்ப்பதை ரசிக்க முடிகிறது. குழந்தை ஈஷா, நாசர், ஆர்.என்.ஆர். மனோகர், போலீஸ் அதிகாரியாக ஒரு சில காட்சிகளில் வரும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
டேன் மெகார்தரின் ஒளிப்பதிவு இருட்டிலும் ஒளிர்ந்திருக்கிறது. ஆனாலும் ஹீரோ தலக்கு ஆக்ஷ்ன் படத்தில் அடிக்கடி பில்டப் ஷாட்டுகளும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஷாட்டுகளும் வைக்காதது குறை. ஹாரீஸ் ஜெயராஜின் இசையில், பம்ப மரகதா பம்ப மரகதா..., !!வாராஜா வா... அதாரு உதாரு... உள்ளிட்ட ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ர(ரா)கம்! பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிரட்டல்!! அதுதானே இதுமாதிரி ஆக்ஷ்ன் படத்திற்கு பெரிய ப்ளஸ்!!!
கௌதம் வாசுதேவ் மேனனின் எழுத்து இயக்கத்தில், சுமார் 3 மணி நேர படத்தில் (2.57 நிமிடம்), பிளாஷ்பேக் த்ரிஷா எபிசோடுகள் (என்னதான் த்ரிஷா கொள்ளை அழகு என்றாலும்..) சற்றே போரடிப்பது... த்ரிஷா உயிர்போக ஒருவகையில் அஜீத்தும் காரணம் எனும்போது, அனுஷ்காவை, அருண் விஜய் அண்ட்கோவினர் கடத்த திட்டமிடும் நாளில், த்ரிஷாவின் மகளை ஸ்கூலுக்கு அனுப்ப அஜீத் அஜாக்கிரதையாக சம்மதிப்பது உள்ளிட்ட மைனஸ்பாயிண்ட்டுகள் தலயின் என்னை அறிந்தால் படத்தை சற்றே போரடிக்கிறது.
இதுமாதிரி காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும், அழகிய ஆக்ஷ்ன் கதையை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், சற்றே புரியாமல் குழப்புகிறது. மற்றபடி தலயின், என்னை அறிந்தால்... படத்தை ரசிகர்கள் புரிந்ததால்... வெற்றி நிச்சயம்!
மொத்தத்தில், ஹீரோ அஜித்தும், இயக்குநர் கௌதம் மேனனும் இன்றைய ரசிகர்களை அறிந்து-புரிந்து படம் எடுத்திருப்பதற்கு சான்று என்னை அறிந்தால்! என நம்பலாம்!
குமுதம் சினி விமர்சனம்
வழக்கமான அடிதடி, மாஸ், பஞ்ச் டயலாக் போன்றவைக்கெல்லாம் டாட்டா காட்டிவிட்டு கதைக்கும், இயக்குநருக்கும் மதிப்புக் கொடுத்து அடக்கி வாசித்திருக்கிறார் அஜித்.
பத்து வயதுப் பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையாக, கணவனைப் பிரிந்த ஒரு பெண்ணின் அன்பான காதலனாக, நேர்மையான காவல் அதிகாரியாக என்று நடிப்புக்கொடி பிடித்திருக்கிறார் தல. காதலி கொல்லப்படும்போதும், அந்த மரணம் அவளது மகளுக்குத் தெரியாமல் வளர்க்கும்போதும் அட போட வைக்கிறார். வீடு தேடி லஞ்சம் கொடுக்க வரும் வில்லனிடம் கெட்ட வார்த்தை பேசி எகிறுவது விசில்!
கதை?
அஜித்தின் வருங்கால மனைவி கொல்லப்படுகிறார். அவர் மகளாக பாவிக்கும் சிறுமியையும் அவரைக் காதலிக்கும் அனுஷ்காவையும் காலிபண்ண நினைக்கிறது வில்லன் கூட்டம்.
எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? யார் அவர்கள்? என்பதை அறிந்து அஜித் அதகளம் செய்வதுதான் என்னை அறிந்தால்!
தன் பழைய படங்களை நினைவு படுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரவிக் கிடந்தாலும் வழக்கமான தமிழ் சினிமா இலக்கணத்தை அங்கங்கே மீறி வசியப்படுத்துகிறார் கௌதம் வாசுதேவ். தனித்துத் தெரியும் ரொமான்ஸும் ஊர் சுற்றும் மனோபாவமும் கௌதம் ஸ்டைல்.
டான்ஸராக த்ரிஷா. அஜித்துடனான அந்த மெல்லிய காதலும், நிறைய மை தீட்டிய கண்களின் துறுதுறுப்பும் புதுக்கவிதை. அந்தக் குட்டிப் பெண்ணும் க்யூட்.
நீ இவ்வளவு அழகா? என்று அஜீத்தை விரட்டி விரட்டி காதலிக்கிறார் அழகு அனுஷ்கா.
கௌதமின் படங்களில் எப்போதும் வில்லன்களுக்கு மக்கியத்துவம் இருக்கும். இதில் அருண் விஜய். மனிதர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். டஃப் ஃபைட் கொடுக்கிறார்.
அதாரு உதாரு பாடலைத் தவிர மற்றதெல்லாம் பேஜாரு! ரீ-ரெக்கார்டிங்கில் ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
மிகைப்படுத்தப்படாத கடைசி அரைமணி நேர சைஸிங், செமை பரபர.
படத்தில் எல்லோரும் நிறைய பேசுகிறார்கள். இல்லாவிட்டால் மைண்ட் வாய்ஸ் பேசுகிறது!
என்னை அறிந்தால் - க்ரைம் நாவல் படித்த அனுபவம்.
ஆஹா: அஜித், கௌதம்
ஹிஹி: தேவை கொஞ்சம் கத்திரி!
குமுதம் ரேட்டிங் - நன்று
கல்கி சினி விமர்சனம்
உடல் உறுப்புகளைத் திருடி பணக்காரர்களுக்கு விற்கும் கூட்டத்தின் தலைவர் அருண் விஜய். அவருடைய அடுத்த இலக்கு, அனுஷ்கா. அனுஷ்காவை காப்பாற்ற களம் இறங்குகிறார் மிடுக்கு போலீஸ் அஜித். அஜித் - அருண்விஜய் மோதலில் தீப்பொறி பறக்கிறது. காதலுக்கு த்ரிஷா. தந்தைப் பாசத்தை வெளிப்படுத்த குட்டிப் பெண் அனிக்கா. அஜித்தை வைத்து மாஸ் அல்ல, நெஞ்சுக்கு நெருக்கமான கிளாஸ் படம் கொடுத்து கைகுலுக்கல் பெறுகிறார் கௌதம்.
அஜித்தும் அருண் விஜயும்தான் படத்தின் முதுகெலும்பு. முரட்டுத்தனம், அநாயச டயலாக் டெலிவரி, வேகம் ஆகிய ஆக்ஷன் பகுதிகளில் அருண் அலட்டல் காட்ட, வெறும் ரியாக்ஷன்களிலேயே கைத்தட்டல் அள்ளுகிறார் அஜித். அனிக்காவின் வளர்ப்பு அப்பாவக அஜித் நெகிழ்ச்சி, அத்தனை பாந்தம். 'நாயகன்' பட அப்பா கமலுக்கு இணையான முதிர்ச்சி அஜித் நடிப்பில்.
கௌதம் படத்தின் வழக்கமான உணர்வுபூர்வ காதல் இல்லை; நளின காதல் உண்டு, மனதை அள்ளும் தேனிசை இல்லை; வருடும் பாடல்கள் உண்டு. நச் வசனங்கள் இல்லை; வளவளா வசனங்கள் உண்டு. ஆனால் ஸ்டைலிஷ் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் கௌதம். போலீஸ் அஜித்தின் பதினைந்து ஆண்டுகால வளர்ச்சியைப் படிப்படியாக செதுக்கியிருக்கிறார். மாஸ் ஹீரோவின் இமேஜ் பாதிக்காமல் கதை சொல்லுவது தனிக்கலை. இது அஜித்தை வைத்து எடுக்கப்பட்ட கௌதம் படம்.
நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோருக்கு ஸ்கிரீனில் இடமே இல்லை. சின்னச் சின்னதாக எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். த்ரிஷாவும் அனுஷ்காவும் இருக்கிறார்கள். ஆனால் இல்லை. குட்டி பெண் அனிக்காவின் கள்ளங்கபடமற்ற பார்வை நெஞ்சைப் பிசைகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் மட்டும் தெரிகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஹீரோ மனத்தைத் தைப்பார். ஆர்ப்பாட்டமில்லாத அமரிக்கையான ஸ்டைல் என்பது தனித் திறமை. காட்பாதம் அல் பசினோ, இன்விக்டஸ் மார்கன் ஃப்ரீமென், நாயகன் கமல் ஆகியோர் ஏற்கெனவே மக்கள் மனத்தில் நிற்பவர்கள். அந்த வரிசையில் 'என்னை அறிந்தால்' அஜித்தும் சேர்ந்துகொள்கிறார்.
என்னை அறிந்தால்... தூள்!