அஞ்சனா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய நான்கு பேர் இப்படத்தின் மூலம் கதாநாயகர்களாக அவதரித்திருக்கும் படம் "மைதானம்".
பொதுவாக சினிமாவில் படமெடுப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று படம் பார்த்து படமெடுப்பவர்கள், மற்றொன்று வாழ்க்கையைப் பார்த்து படமெடுப்பவர்கள். இப்போது வருகிற படங்கள் யாவும் பழைய படங்களின் ரீ-மேக்காகவும், ஹாலிவுட் படங்களின் தழுவலை போன்றே அமைந்துள்ளது. ஆனால் மைதானம் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் வாழ்க்கையை பார்த்து படித்து படமெடுக்கும் ரகத்தை சேர்ந்தவர். இப்படத்தில் ஒப்பனையோ, கற்பனையோ இல்லாத யதார்த்த சினிமாவாக உருவாக்கியிருக்கிறார். நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் 4பேரில் ஒருவன் தன் நண்பனுக்கே துரோகம் செய்கிறார். அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து "மைதானம்" படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ஹைலைட்டாக நாயகி தவிர யாருக்கும் ஒப்பனை இல்லை.
படத்தின் நாயகர்களாக பிரபல இயக்குநர்கள் அகத்தியன், பாரதி ராஜா, ராமநாரயணன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் குரு, ஜோதிராஜ், சிவா மற்றும் கென்னடி ஆகியோர் இந்தபடத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகின்றனர். நாயகியாக வைகை, கோரிப்பாளையம் படங்களில் நடித்த சுவாசிகா நடிக்கிறார். இவர்களுடன் டைரக்டர் அகத்தியன், ரமா, ஸ்வாசிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.டேவிட், ஜே.டி.சசீஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கின்றனர். கோவை மற்றும் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள காரத்தொழுவு என்ற கிராமத்தில் 300 வருட பாரம்பரியமுள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.