'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த வருடம் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, மலையாளத் திரை உலகில் பெண்கள், குறிப்பாக நடிகைகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர் என்கிற விஷயத்தை உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து வெளிப்படையாக சில நடிகைகள், சில நடிகர்கள் இயக்குனர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, சில கைதுகளும் நடந்தன. இது தவிர ஹேமா கமிட்டி பல பேரிடம் வாக்குமூலமும் பெற்றதும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது, அதன் அடிப்படையிலும் பல வழக்குகள் பதியப்பட்டன. இப்படி கிட்டத்தட்ட 40 வழக்குகள் பதியப்பட்டு நிலையில் தற்போது அவற்றில் 35 வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி போலீசார் அந்த வழக்குகளை அவசர அவசரமாக முடித்துள்ளனர்.
நடிகர்கள் சித்திக், முகேஷ், மணியன் பிள்ள ராஜு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்குகள் மட்டும் நிலுவையில் இருக்கின்றன. போலீசார் அவசரமாக வழக்குகளை முடித்ததாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஹேமா கமிட்டி விசாரணையின் போது பல பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் யாருமே நேரடியாக இந்த வழக்கில் சாட்சியங்களை சொல்லவோ, அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை நடத்திச் செல்லவும் முன்வராமல் ஒதுங்கி விட்டனராம். இதனாலேயே இந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் இப்படி ஹேமா கமிட்டி விசாரணை குழு உருவாவதற்காக, கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக குரல் கொடுத்த நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.. ஹேமா கமிஷன் அறிக்கை தாமதமாக வெளியானாலும் அதன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், தற்போது இந்த வழக்குகள் அவசரமாக மூடப்பட்டதை தொடர்ந்து தனது விரக்தியை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார், பார்வதி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தைப் பற்றி இப்போது நாம் கவனம் செலுத்தலாமா?? கொள்கைகளை வரையறுப்பதன் மூலம் இந்த துறையில் நடைமுறைகளை கொண்டு வர முடியுமா? அதில் என்ன நடக்கிறது? ஒன்றும் அவசரமில்லை தானே? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே தானே ஆகிறது?'' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.